Tuesday, December 22, 2015

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்

புதுடெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், இளம் குற்றவாளியின் தண்டனையை 3 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கும் வகையில் சட்டத்தில் இடம் இல்லை. சட்டத்தால் எங்களுடைய கரங்கள் கட்டப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ம் தேதி, நிர்பயா (ஜோதி சிங்) என்ற 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டார். பலத்த காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் 29–ம் தேதி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ராம்சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 5 பேரில் இளம் குற்றவாளி ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்ற 4 பேருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இளம் குற்றவாளியின் தண்டனைக்காலம் கடந்த 20–ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே அவர் நேற்று முன்தினம் சிறார் சீர்திருத்த காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இளம் குற்றவாளி விடுதலைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோரை கொண்ட விடுமுறை அமர்வு, இளம் குற்றவாளியின் விடுதலைக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்தனர்.

இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''உங்களுடைய கவலையில் நாங்களும் பங்கேற்கிறோம். ஆனால் சட்டத்தால் எங்களுடைய கரங்கள் கட்டப்பட்டுள்ளன. இளம் சிறார்களின் தண்டனையை 3 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கும் வகையில் சட்டத்தில் இடம் இல்லை. இதுகுறித்து தெளிவான சட்டம் தேவைப்படுகிறது.

இந்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டே அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சட்டரீதியாக அனுமதி தேவைப்படுகிறது. சட்டத்தில் இடமில்லாத நிலையில் ஒருவருடைய அடிப்படை உரிமையை நீதிமன்றம் பறிக்க முடியாது" என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.


-http://www.vikatan.com/news/india/56671-young-offender-release-judges-say-our-hand-tied.art

0 comments: