Tuesday, December 08, 2015

வெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்களை பெறுவது எப்படி?

ழை வெள்ள பாதிப்பு இன்னும் சீராகவில்லை. அரசு, தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் உதவிகளால் இயல்பு நிலை விரைவில் திரும்பும்.

ஆனாலும் வெள்ளத்திற்கு நாம் பறிகொடுத்த நிம்மதி, நமது உடைமைகளை மீட்டெடுக்கும் போதுதான் முழுமையாக கிடைக்கும்.  சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்கள் தங்கள் உடைமைகள் தண்ணீரில் விட்டு கண்ணீரோடுதான் வெளியேறினர். முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அடக்கம். 

வெள்ளம் வடிந்தபின் நாம் இழந்த மேற்சொன்ன உடைமைகளை திரும்ப பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறமுடியும் என்கின்றனர் அரசு அதிகாரிகள் 

மதிப்பெண் பட்டியல்

பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற முதலில் காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும்.

மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம்:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும்.

குடும்ப அட்டை:

குடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.

டெபிட் கார்டு:

பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.

பட்டா:

வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

வெள்ள பாதிப்பு குறைந்தபின் அரசு மற்ற நிவாரண உதவிகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைப்பது போன்ற அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து அந்தந்த பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து மாணவர்கள் பொதுமக்கள் இழந்த கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பது  பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு வரும் 14ம் தேதி சிறப்பு முகாம்!

சென்னை: கனமழை வெள்ளத்தால் முக்கிய ஆவணங்களை இழந்தவர்களுக்கு வரும் 14-ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

இந்த ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும்  வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படும்.

இம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்.

சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம். 

தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.

ஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று (ஆர்.சி புக்) ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர்.  இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

வெள்ளத்தால் இழந்த பாஸ்போர்ட்டுகளை கட்டணமின்றி பெறலாம்!

தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக பாஸ்போர்ட்டுகளை இழந்திருந்தால் கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மாணவ- மாணவி தங்களது பாடப்புத்தகங்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்களது ரேஷன் கார்டுகள், பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், பாஸ்போர்ட்டுகளை இழந்தவர்கள் கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ஆவணங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், மழை வெள்ளம் காரணமாக பாஸ்போர்ட்டுகளை இழந்திருந்தால் கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், சென்னையில் உள்ள மூன்று பாஸ்போர்ட் சேவை மையங்களில் புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்-


விகடன்

0 comments: