Saturday, November 21, 2015

வெள்ளத்தில் கார்/பைக் சிக்கினால்...

‘‘மழைத் தண்ணியில வண்டி ஓட்டுறது செமையா இருக்கு மச்சான்...’’ என்று புளகாங்கிதம் அடைபவரா நீங்கள்? அப்படியெனில், இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.
‘‘ஏரியா இருந்ததெல்லாம் ஏரியாவா மாறி, மறுபடியும் ஏரியா மாறிடுச்சு!’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் கவிதை எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, இதைக் கொஞ்சம் படியுங்கள். கார்/பைக் விஷயங்களில் மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது. சிக்கிவிட்ட உங்கள் வாகனத்தை வெள்ளத்திடம் இருந்து காப்பாற்ற... மழை நேரங்களில் கவனமாக வாகனத்தைச் செலுத்த இதோ சில டிப்ஸ்...
பைக் ஓட்டிகளுக்கு...

1. வாகனங்களுக்கு முதல் சிம்ம சொப்பனமே தண்ணீர்தான். அதுவும் சைலன்ஸருக்கும் தண்ணீருக்கும் சுத்தமாக ஆகாது. எனவே, சைலன்ஸர் மூழ்கும் அளவு உள்ள நீர்ப் பகுதிகளில், ‘‘கொஞ்ச தூரம்தானே.. அப்படியே ஓட்டிடலாம்’’ என்று நினைத்தீர்கள் என்றால், இன்ஜினுக்கு கண்டம். அதன் காரணமாகவே இப்போது சைலன்ஸர் உயரமாக உள்ள பைக்குகள் வர ஆரம்பித்துவிட்டன. லேட்டஸ்ட் யமஹா, ஹோண்டா, சுஸூகி பைக்குகளுக்கு எல்லாமே இப்போது சைலன்ஸர் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக பைக் வாங்க இருக்கிறீர்கள் என்றால், அதைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.

2. மழை வெள்ளத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்/பைக்குகளை, வெள்ளம் வடிந்தபிறகு, ஸ்டார்ட் செய்யவே கூடாது. முடிந்தால், பெட்ரோலையும் காலி செய்வது சாலச் சிறந்தது. சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வதுதான் பெஸ்ட்.

3. மழை நேரங்களில் மட்டுமல்ல; வெயில் நேரங்களிலும் ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்துவிட்டு பொருத்துவது நல்ல பலன் தரும். ஸ்பார்க் ப்ளக் எக்ஸ்ட்ரா ஒன்றை எப்போதுமே டூல் கிட்டில் வைத்துக்கொள்வது இன்னும் பெஸ்ட். பைக்குகளின் ஸ்பார்க் ப்ளக் விலை 90 முதல் 100 ரூபாய்தான்.

5. செயின் கார்டு உள்ள பைக்குகளில் பிரச்னை இல்லை. நேக்கட் பைக்குகளில் செயின் ஸ்பிராக்கெட்டுகள் ‘கார்டு’ இல்லாமல், ஓப்பனாகவே இருக்கும். இவை ஓரளவு பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தாலும், மழை நேரங்களில் மெக்கானிக்குகள் மூலம் ‘செயின்  ஸ்ப்ரே’ செய்து கொள்வது நல்லது.

6. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க்கில் மிகவும் கவனம் தேவை. என்னதான் டேங்க் மூடி நன்றாக கவர் செய்யப்பட்டிருந்தாலும், ஓரம் வழியாக சில சொட்டு நீர்த்துளிகள் பெட்ரோல் டேங்கினுள் கலக்க வாய்ப்புள்ளது. பெட்ரோலில் தண்ணீர் கலந்து விட்டால், ஸ்பார்க் ஏற்படுவதில் பிரச்னை ஏற்பட்டு... வழியில் ஆஃப் ஆகி... (இன்ஜின் ஸ்டாப்) வேறென்ன..? ஸ்டார்ட்டிங் டிரபுள்தான்!

கார் ஓட்டிகளுக்கு...

1. பைக்கைவிட, வெள்ளத்தின் பாதிப்பு கார்களுக்குத்தான் அதிகம். இதிலும் சைலன்ஸர்/ஏர் இன்டேக்குக்குள் தண்ணீர் புகாத வரை எல்லாமே ஸ்மூத்தான். வேறு வழியில்லை என்றால், முதல் கியரில் 1,200 முதல் 1,500 ஆர்பிஎம்-முக்குள் குறைவான வேகத்திலேயே மெதுவாகச் சென்று வெளியேறுங்கள்.

2. அதிக தண்ணீருக்குள் இருக்கும்போது கார் ஆஃப் ஆகிவிட்டால், காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். இது கனெக்டிங் ராடுகளில் பிரச்னை ஏற்படுத்தி, மிகப் பெரிய செலவுக்குக் கைகாட்டி விடும். தள்ளிச் செல்வதுதான் பெஸ்ட்.

3. வெள்ள நேரங்களில் எங்கெங்கு, எத்தனை அடி பள்ளம் ஏற்படும் என்பது மாநகராட்சியினருக்குக்கூடத் தெரியாது. கார்களில் சென்று சின்னப் பள்ளங்களில் விழுந்தால்கூட, சேதாரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வீல்கள் அடிவாங்குவதோடு இன்ஜின் சம்ப், சேஸி, பம்பர் பகுதிகள் நிச்சயம் அடி வாங்கும்.  

4. பிரீமியம் கார்களில் பிரச்னை இல்லை; ஹேட்ச்பேக் கார்களில் முன் பக்க விண்ட்ஷீல்டில் என்னதான் வைப்பர் பயன்படுத்தினாலும், மழை நேரங்களில் விசிபிளிட்டி அவ்வளவாக இருக்காது. வெளியே நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்போது, உடனே வைப்பர் பயன்படுத்துவதால், விண்ட் ஷீல்டுகளில் ஸ்க்ராட்ச்கள் ஏற்படுவதுடன், மழை நேரங்களில் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, டிஷ்யூ பேப்பர், மைக்ரோ ஃபைபர் துணி அல்லது நல்ல வளவளப்பான நியூஸ் பேப்பரைக் கொண்டு அழுந்தத் துடைத்துவிட்டு வைப்பர் பயன்படுத்துவது பெஸ்ட்.

5. மழை நீர், கார்களில் பெரும்பான்மையாக கை வைப்பது எலெக்ட்ரானிக் பாகங்களில்தான். எனவே, ஜன்னலை மூடிவிட்டு, ஏ.சியை ஆன் செய்யாமல் பயணிப்பதுகூட நல்லதுதான். 

6. எலெக்ட்ரானிக் விஷயங்கள் எவ்வளவு ஆபத்து என்பதற்கு ஓர் உதாரணம்: சென்னை டிராஃபிக்கில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர், காரை ஐடிலிங்கில் விட்டு, ஏ.சியை ஆன் செய்துவிட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார். எக்ஸாஸ்ட் வழியாக வெளியேற முடியாத காற்று, உள்ளுக்குள்ளேயே சுழன்று தீப்பிழம்பை ஏற்படுத்த, கார் தீப்பிடித்து உயிரை இழந்திருக்கிறார் ஓர் அப்பாவி. 

7. பவர் விண்டோஸ் பட்டனும் எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதிலும் கவனம் தேவை. கார் முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளே மாட்டிக் கொண்டால், பின் பக்க விண்ட்ஷீல்டை உடைத்து வெளியே வருவது நல்லது. கண்ணாடியை விட, உயிர் முக்கியம் இல்லையா?

8. மழையில் நிறுத்தப்பட்ட காரை, மறுநாள் ஸ்டார்ட் செய்து உடனே ஆக்ஸிலரேட்டரை மிதித்து, அவசர அவசரமாகக் கிளம்புவதைத் தவிருங்கள். எப்போதுமே காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, ஐடிலிங்கில் சிறிதுநேரம் வைத்திருந்தபிறகு கிளம்புங்கள். டர்போ சார்ஜர், பெட்ரோல் மிக்ஸிங் என்று எல்லாமே அப்போதுதான் சீராக நடக்கும்.

9. மெக்கானிக் பாகங்களுக்கு ஏதும் பிரச்னை வராதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஸ்டீயரிங், கியர்பாக்ஸ், கிளட்ச், பிரேக், ஹேண்ட்பிரேக் போன்றவை ஜாம் ஆக வாய்ப்புண்டு. எனவே, கிளம்பும் முன் இவற்றை நன்றாக பரிசோதித்து விட்டுக் கிளம்புவது நல்லது.

10. ரொம்ப முக்கியமான விஷயம் - ஈரமான சாலைகளில் வேகம் வேண்டாமே!

- தமிழ் தென்றல்

thanks vikatan

0 comments: