Monday, November 16, 2015

சதி, சதியைத் தவிர வேறில்லை!


அவன் பெயர் கரண்குமார் காக்ரே. வயது 28. மும்பையில் முக்கிய மான பகுதியில் வாழ்ந்துவந்த அவனுக்கு இசையை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பது ஆசை.


அவள் பெயர் சிம்ரன் சூட். மாடல் அழகி. சினிமாவில் சின்ன வேடங்களில் நடித்து வந்தாள். கவர்ச்சியான பெண் ணான அவள், அவன் வசித்த அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்தாள்.


சிம்ரன் சூட் கரண்குமாருக்கு அறிமுக மானாள். இருவரும் பேசிப் பழகத் தொடங்கினார்கள். சிம்ரன் சூட் தன்னுடன் தங்கியிருந்த சகோதரன் விஜய் பாலண்டேயையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். விஜய் பாலண்டே, தான் ஒரு பிரபல அரசியல் புள்ளியின் ஏராளமான சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு பினாமி என்றான்.


கரண்குமார் கிரிக்கெட் சூதாட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்வதையும், விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை வாங்கியதையும் கவனித்த இவர்கள், கரண்குமாருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட்டையும், அவனுடைய காரையும் அபகரிக்கத் திட்டமிட்டார்கள்.


முதல் கட்டமாக, கரண்குமாருக்கு போதை மாத்திரை சாப்பிடும் பழக் கத்தை ஏற்படுத்தினாள் சிம்ரன் சூட். தனக்குத் தெரிந்த ஒரு பிரபல புள்ளி யிடம் இருந்து கரண்குமாரின் திரைப் படத் திட்டத்துக்காக சில கோடி பணத் தைப் பெற்றுத் தருவதாக வாக்களித்து நம்ப வைத்தான் விஜய் பாலண்டே. அதை நம்பிய கரண்குமார் அவன் கேட்ட கடன் தொகையைக் கொடுத் தான். அந்தத் தொகையை விஜய் திருப் பித் தரவில்லை. அது தொடர்பாக இரு வருக்கும் சின்ன சண்டைகள் வந்தது. மேலும் சிம்ரன் சூட்டுடன் அளவுக்கு மீறி கரண்குமார் உரிமையுடன் பழகியதும் விஜய்க்குப் பிடிக்கவில்லை.


கரண்குமாரை முழு நேரமும் போதைக்கு அடிமையாக்கி, அவனை மிரட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்கி சொத்துக்களை பெயர் மாற்றிக் கொள்வதாகத் திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒரு நாள், கரண்குமாரின் அபார்ட்மெண்ட்டில் விஜய் பாலண்டேக்கும் கரண்குமாருக் கும் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சத்துக் குப் போனது. விஜய் வெறித்தனமாக கரண்குமாரைக் கத்தியால் குத்தினான். அவன் உயிர் போனது.


இரவு வரைக் காத்திருந்த விஜய், கரண்குமாரின் உடலைப் பல துண்டுகளாக வெட்டினான். பெரிய பிளாஸ்ட்டிக் பைகளில் போட்டான். அவற்றை கரண் குமாரின் பி.எம். டபிள்யூ காரிலேயே ஏற்றிக்கொண்டுப் போய், ஊருக்கு வெளியில் நெடுஞ்சாலையில் நெடுந் தூரம் சென்று, ஓரிடத்தில் பைகளை வீசிவிட்டு காரில் புனே நகருக்குச் சென்றான். அங்கே ஒரு நண்பரின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு, வெளிநாடு செல்வதாகவும் திரும்பி வந்ததும் எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். மீண்டும் மும்பைக்குத் திரும்பிவிட்டான்.


கரண்குமாரிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லாததால் சந்தேகப்பட்ட நண்பரின் குடும்பத்தினர் போலீஸை அணுகினார்கள். சிம்ரன் சூட்டை விசா ரித்தால் கரண்குமார் எங்கே சென்றிருக் கிறான் என்பது தெரியும் என்று குடும்பத்தினர் நம்பினார்கள்.


காவல்துறை சிம்ரன் சூட்டை அழைத்து விசாரித்தது. அவள் கரண் குமாரைத் தனக்குத் தெரியுமே ஒழிய மற்றபடி நெருக்கமான பழக்கமெல்லாம் கிடையாது என்றும், அவனைப் பற்றி எந்தத் தகவலும் தனக்குத தெரியாது என்றும் மறுத்தாள். அவளின் வார்த்தை களை அப்படியே நம்பியது போலீஸ்.


போலீஸ் நெடுஞ்சாலையில் கைப் பற்றிய அடையாளம் தெரியாதப் பிணத்தை தனி வழக்காகவும், கரண் குமார் காணாமல் போன வழக்கை தனி வழக்காகவும் விசாரித்துக் கொண்டேயிருந்தது.


விஜய் பாலண்டே தன் அடுத்த வலையில் சிக்க, எந்த மீன் சரியாக இருக்கும் என்று தேடத் தொடங் கினான். அந்தேரியில் மூன்று அபார்ட் மெண்ட்களைச் சொந்தமாக வைத் திருந்த அனுஜ்குமார் டிக்கு அவன் கண்ணில்பட்டான். அனுஜ்குமாரின் தந்தை அருண்குமார் டிக்கு டெல்லியில் வர்த்தகம் செய்துகொண்டிருந்தார். அனுஜ்குமாருக்கு சினிமாவில் நடிகராகும் ஆசை இருந்தது.


வழக்கம்போல சிம்ரன் சூட் மூலம் அனுஜ்குமாரைத் தொடர்புகொண்டான் விஜய் பாலண்டே. பிறகு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டான். நம்பும்படி பேசுவதில் வித்தகனான அவன், அனுஜ் குமாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபராக தன்னை மாற்றிக் கொண்டான். அவனுடைய மூன்று ஃபிளாட்டுகளில் ஒன்றில் இவனே வாடகைக்குக் குடி வந்தான். அடுத்து, தனது நிழலுலக நண்பர்களான தனஞ்ஜெய் ஷிண்டே மற்றும் மனோஜ் ஷாஜ்கோஷ் இருவரையும் மற்றொரு ஃபிளாட்டில் வாடகைக்குக் குடி வைத்தான்.


அந்த ஃபிளாட்டுகளின் மதிப்பு ரூ.50 கோடி. டெல்லியில் இருக்கும் அருண்குமார் டிக்குவுக்கு தன் மகனின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை. அவனை டெல்லிக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பாக தந்தை, மகன் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருந்தன.


அருண்குமார் டிக்கு டெல்லியில் இருந்து மும்பை வந்து தங்கினார். மற்ற இரண்டு ஃபிளாட்டுகளில் தன் மகன் குடியமர்த்தியிருக்கும் நபர் களின்மேல் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக காலி செய்யச் சொல்லி வற்புறுத்தினார். பிரச்சினைகள் செய்தார். இதனால், விஜய் பாலண்டேயின் இரண்டு நண்பர்களும் அந்த ஃபிளாட்டைக் காலி செய்ய வேண்டியதாயிற்று.


அருண்குமார் டிக்கு உயிரோடு இருக்கும்வரை அந்த ஃபிளாட்டுகளை அடைய விட மாட்டார் என்று புரிந்தது. தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்தான் விஜய்.


குறிப்பிட்ட தினத்தில் அனுஜ் குமாரை விஜய் ஒரு முக்கியமான நபரைச் சந்திக்கலாம் என்று சொல்லி கோவாவுக்கு அழைத்துச் சென்றான். அன்று தனியாக இருந்த அருண்குமார் டிக்குவை விஜய் பாலண்டேயின் இரண்டு நண்பர்களும் மடக்கினார்கள். பாத்ரூமில் வைத்து வெட்டினார்கள்.
அவர்கள் செய்த முட்டாள்தனம் அருண்குமாரின் வாயைப் பொத்தாமல் விட்டதுதான். அருண்குமார் போட்ட அலறல் சத்தத்தில் மொத்த அபார்ட் மெண்ட்டும் விழித்துக்கொண்டது. விபரீதம் நடந்திருப்பதைப் புரிந்து, கதவை உடைக்க முடியாததால் வெளிப்புறம் பூட்டினார்கள். போலீ ஸுக்குச் சொன்னார்கள்.


போலீஸ் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது, அருண்குமார் டிக்கு இறந்து கிடந்தார். அந்த இரண்டு கொலைக்காரர்களும் ஜன்னல் வழியாகத் தப்பித்துச் சென்றது தெரிந்தது. அவசர அவசரமாக அவர்கள் சென்றதால் ஏராளமான தடயங்களை விட்டுச் சென்றிருந்தார்கள். மிகச் சுலபமாக இருவரையும் மடக்கிப் பிடித்தது போலீஸ். இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவன் என்று விஜய் பாலண்டேயைக் கை காட்டி னார்கள். விஜய் ஏற்கெனவே செய்த கரண்குமார் கொலையைப் பற்றியும் போட்டுக் கொடுத்தார்கள்.


விஜய் பாலண்டேயும் சிம்ரன் சூட்டும் கைது செய்யப்பட்டார்கள். சின்ன கிராமத்தில் இருந்து சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவுடன் மும்பை வந்த விஜய் பாலண்டே ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து, ஓர் உணவுவிடுதியில் வேலை பார்த்து, ஒரு பிரபலமான ரவுடிக் கும் பலில் சேர்ந்து, சிலமுறை சிறைக்கும் சென்று திரும்பியவன் என்பதெல்லாம் பிறகு கிடைத்த இதர தகவல்கள்.


விஜய் பாலண்டேயைச் சிறை மாற்றும்போது அவன் தப்பிச் சென்றான். வெளிநாடு சென்று காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொண்டு, தன் முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் மும்பைக்கு வந்தான். அவன் மும்பை திரும்பியதுமே போலீஸ் அவனை மடக்கிப் பிடித்துவிட்டது. இப்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


விசாரணையில் தெரியவந்த மிக அதிர்ச்சியான உண்மை என்னவென் றால், சிம்ரன் சூட்… விஜய் பாலண்டேயின் சகோதரி அல்ல என்பதும், அவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்ட கணவனும் மனைவியும் என்பதும் தான்!

thanks the hindu

0 comments: