Tuesday, November 17, 2015

சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை?

பக்கத்துத் தெருவில் புதிதாகக் காய்கறிக் கடை வந்தது. சும்மா சொல்லக் கூடாது. கண்ணைப் பறிக்கும் நிறங்களில் அவர் காய்கறிகளைக் காட்சிப்படுத்தியதில் ஏற்கெனவே இருந்த காய்கறியாளர்கள் வாடியும், வதங்கியும் போனார்கள். ஆப்பிரிக்கா,நேபாள நாடுகளின் மாணவிகள்கூட அங்கே வந்து தங்கள் நிலத்தின் காய்கறிகளைக் கொய்தார்கள்.


காய்கறிக் கடைக்காரர்

நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இடையில் கடை மெல்ல அழகை இழந்தது. தக்காளி கேட்டால்கூட “ இல்லீங்களே...”; வெங்காயம்? “பக்கத்துக் கடைல இன்னிக்கு ஒரு நாளைக்கு வாங்கி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார்.....” பக்கத்துக் கடைக்குச் செல்கிறவர் வெங்காயம் மட்டுமா வாங்கிப் போவார்...?


கடை இன்னும் இருக்கிறது. ஆனால், கூட்டம் மெல்லக் குறைந்து, இறுதிநாள் நோயாளி போல் “அமாவாசை தாண்டுமா...?” என்றிருக்கிறது. தாண்டிச்செல்லும் தனது வாடிக்கையாளர்களைக் குழப்பத்துடன் வெயில் முகத்திலடிக்க, பார்த்துக் கொண்டிருக்கிறார்-- “முன்னாள் காய்கறிக் கடைக்காரர்” என்ற பெயரை விரைவில் சூட இருப்பவர்.


கொஞ்சம் மனசு வச்சா?

நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி அடுத்தவர் கேட்கிறாரா, இல்லையா என்ற கவலை எதுவுமின்றிப் பிரச்சாரம் செய்வார்கள். குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய பி.எச்.டி. அறிக்கையையே ஒப்படைப்பார்கள்.

அதிலும், இந்த அம்மாக்களின் ஆய்வுக் குறிப்புகளைத் தாங்க முடியாது. அதில் இடம்பெறும் முக்கியமான வாசகம் “டக்குன்னு புரிஞ்சுக்கறான்... கொஞ்ச நேரம்தான் படிக்கிறான்.. அதுலயே இவ்வளவு மார்க் வாங்கிர்றான். இன்னும் கொஞ்சம் மனசு வச்சு படிச்சாம்னா...,”

குறைந்த நேரப் படிப்பிலேயே அம்மாக்களை அசத்துகிறவர்களால் தொடர்ந்து ஏன் புல்லரிப்பை நிகழ்த்த முடியவில்லை ?

இரண்டு பிரச்சினையும் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும் அவற்றின் பிறப்பு ரகசியம் ஒன்றுதான்.

அட்டகாச ஆரம்பம்

காய்கறியாளரின் முயற்சியிலும், ஆர்வத்திலும் குறை சொல்லவே முடியாது. அட்டகாசமாகவே தொடங்கி யிருக்கிறார். பின் தப்பு நடந்தது எங்கே என்றால், அவர் தொடர்ந்து முயலவில்லை. அதுதான் பிரச்னை..!
ஆரம்பநாட்களில் முயன்றால் போதுமா...? பின் அதுவாகவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்...?

தன்னிடம் வரும் வாடிக்கை யாளரைத் திருப்தி செய்யத் தொடர்ந்து முயற்சி செய்தால்தானே, அவர் களத்தில் நிற்க முடியும்? தினமும் எது தேவை? தனது பகுதியில் எது நன்றாகப் போகும் என்று கணித்து அதை வாங்கி வைக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாமல் கறிவேப்பிலைகூட இல்லாமல் உட்கார்ந்திருந்து “காலைல மார்க்கெட்டுக்கு லேட்டா போனேங்க்கா... அங்க வித்து போச்சு...” என்றால் “தனியே...தன்னந்தனியே... நான் காத்துக் காத்து இருந்தேன்” என்று பாட வேண்டியதுதான்.

மாணவச் செல்வங்கள் ஆடிக்கும், அமாவாசைக்கும் மட்டும் படித்தால் “அவனுக்கு இருக்கும் அறிவுக்கு எங்கேயோ போயிருக்கணும் சார்...” என்று தாயார்களின் புகழுரையைக் கேட்டுக் காலம் தள்ள வேண்டியதுதான்.


தொடர்ச்சி

வெற்றி பெற முயற்சி மட்டும் போதாது. அம்முயற்சிகளில் தொடர்ச்சித் தன்மை (consistency) தேவை.

கிரிக்கெட் தெரிந்த யார் வேண்டுமென்றாலும் ஒரு ஓவருக்கு பேட் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட் என்பது ஒரு ஓவர் மட்டும் விளையாடுவது அல்ல. மேட்ச் என்றால் பகல் முழுவதும் நின்று ஆடுகிற உடல், மன வலிமைகளையும் வளர்த்துக் கொண்டால்தான் கிரிக்கெட் வீரராக முடியும். அதை விடுத்து “ஸ்டெயின் பால்லகூட நான் சிக்ஸ் அடிச்சேன்...” என்றால் மூளையின் ஆற்றலைச் சரிவரப் பயன்படுத்தாதவர்கள் வேண்டுமானால் சொல்லலாம். “அவனுக்கு இருக்கிற திறமைக்கு ...”

நம்மில் நிறையப் பேருக்கு அவ்வப்போது உடற்பயிற்சி ஆசை தாண்டவமாடும். அதற்கான ஷூக்கள்,ஆடைகள்; “காலை 6 மணியிலிருந்து 7 வரை நான் வாக்கிங் போயிருப்பேன். அப்ப ஃபோன் பண்ணாதீங்க” போன்ற செய்திகள், பயிற்சி முடித்து வந்த களைப்பைப் போக்கப் பிரத்தியேகப் பானங்கள்... ஒருநாள் நடந்துவிட்டுத் தொப்பையைப் பார்ப்பதென்ன, கண்ணாடியைப் பார்ப்பதென்ன ... என்று டீஸர், ட்ரெய்லர் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்.

தெரிந்தவர்களைக் கேலி செய்வேன். “எப்போதும் முதல்நாள் உடற்பயிற்சியைவிட இரண்டாவது நா
ள் எளிமையாகத்தான் இருக்கும்.”
“பழகிரும்னு சொல்ல வர்றீங்களா..?”
“அது இல்லை...இரண்டாவது நாள்தான் நாம செய்யவே போறதில்லையே!”
நிறையப் பேர் முயற்சி என்றாலேயே அதை லட்சியத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்கிறார்கள். ஆனால், அன்றாட வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல உதவும் எளிய வேலைகளில்கூடத் தொடர்ச்சியானத் தன்மை இருந்தால்தான் வாழ்க்கை சுமுகமாக நகரும்.

எல்லோராலும் வெகு சுலபமாகவும், பிரமாதமாகவும் எதை வேண்டுமானாலும் தொடங்க முடியும். நிறையப் பேர் தொடங்குவதே போதுமானது என்றும் தவறாக நினைத்து விடுகிறார்கள். அது திறமையே அல்ல. அது “ஆர்வக்கோளாறு” என்ற பிரிவிலேயே இடம் பெறும். .


தொடர்ந்தால்தானே?

ஆர்வக்கோளாறுகள் பெட்ரோல் இன்றி வழியில் நிற்கும். “அப்ப எல்லாம் ரொம்ப கஷ்டம். இப்ப இருக்கிற மாதிரி ஈஸி கிடையாது”, “எனக்கு நேரம் இல்ல, வாய்ப்பு வரல...” போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லிப் புலம்பும்.

ஊக்குவிப்பு முகாம் ஒன்றில் கேட்டேன் “இப்போது போர் எதுவும் நடைபெறவில்லைதான். இந்திய ராணுவம் இந்தச் சூழலில் என்ன செய்து கொண்டிருக்கும்..? தூங்கி, சாப்பிட்டு, டி.வி பார்த்து, அரட்டையடித்து...”
“போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...”என்றார்கள்.

வானில் எதிரி விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்ட பிறகு, நீங்கள் விடுமுறையில் சென்ற உங்கள் சிப்பாயை வரவழைக்கப் புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்புவதும், ஆயுதங்களைத் தூசு தட்டி அவற்றின் கேட்லாக்கைப் படிக்கத் துவங்குவதுமாக இருந்தால்,போரின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ந்து பயிற்சி எடுக்கிறார்கள். தொடர் முயற்சிகளில் இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் வீரர்களாகிறார்கள்... வாழ்க்கை என்பதும் போர்க்களம்தானே? சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை...?

thanks the hindu

0 comments: