Saturday, November 14, 2015

4ஜி-க்காக ரூ.12 லட்சத்தை இழந்த மும்பை தொழிலதிபர்!


மும்பை: 4ஜி இணைப்புக்காக ரூ.12 லட்சத்தை 
மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார் மும்பை தொழிலதிபர் ஒருவர். மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பை கேம்ஸ்கார்னர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் செல்போனிற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய நபர், தான் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது நிறுவனம் சார்பில் குறைந்த கட்டணத்தில் 4ஜி இணைப்பு தருவதாகவும், இதற்காக உங்களின் பான்கார்டு விபரங்களை தரும்படி கூறியுள்ளார்.

இதை உண்மையென நம்பிய அந்த தொழிலதிபர், அனைத்து விபரங்களையும் கொடுத்துள்ளார். பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து இரண்டு பேர் தொழிலதிபர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, புதிய சிம் கார்டு ஒன்றை கொடுத்ததோடு, 2 மணி நேரத்தில் சிம் கார்டு செயல்படும் என்று கூறியுள்ளனர். மேலும், உங்கள் பழைய சிம் கார்டை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையும் நம்பிய அவர், அவரும் தன்னுடைய சிம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால், புதிய சிம் கார்டு மறுநாள் ஆகியும் செயல்படவில்லை.

இந்தநிலையில், இணையதளம் வங்கி சேவையில் தொழிலதிபர் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் அவரது இணையதள வங்கி சேவை முடக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, அவரது கணக்கில் ரூ.12 லட்சம் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு இணையதளம் மூலம் மாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் தொழிலதிபர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தொழிலதிபரிடம் சிம் கார்டை வாங்கி சென்றவர்கள் அதை பயன்படுத்தி அவரது இணையவங்கி சேவை மூலம் ரூ.12 லட்சத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அபிட் லத்திவாலா, முக்காரன் அப்துல் முன்ஷி, சல்மான் வலோரியா ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஜாமீலை தேடி வருகின்றனர்.

நன்றி - விகடன்

0 comments: