Sunday, November 01, 2015

ஆத்யன் (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : அபிமன்யு நல்லமுத்து
நடிகை :சாக்ஷி அகர்வால்
இயக்குனர் :ராம் மனோஜ் குமார்
இசை :ராஜசேகர்
ஓளிப்பதிவு :ஸ்ரீனிவாசன்
ஜப்பானில் தனிமையில் வசித்து வரும் நாயகன் அபிமன்யூ, தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் வசிக்கக்கூடிய நாயகி சாக்ஷி அகர்வால், இவருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகிறார். இருவரும் பேஸ்புக் வழியாக தங்களது நட்பை வளர்த்து, பின்பு காதலர்களாக மாறிவிடுகிறார்கள். 

தனது காதலியை பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து சென்னைக்கு வருகிறார் அபிமன்யூ. சென்னையில் வந்து இறங்கியதும், தனக்கு முதலில் அறிமுகமான கால் டாக்சி டிரைவரான ஜெயச்சந்திரனிடம் தன்னை பற்றிய முழு விவரங்களையும் கூறிவிடுகிறார். பின்னர், நாயகியை தேடி அலைகிறார். 

மறுமுனையில், கால்டாக்சி டிரைவரான ஜெயச்சந்திரன், போலீஸ் அதிகாரியான மகேஸ்வரன், போதை பொருள் கடத்தல் வேலை செய்யும் ஜெனிஷ் மூவரும் கூட்டு சேர்ந்து நிறைய கடத்தல் வேலைகளை செய்து வருகிறார்கள். ஒருகட்டத்தில், கடத்தல் கும்பல் தலைவனை என்கவுண்டர் செய்ய போலீஸ் அதிகாரியான மகேஸ்வரனுக்கு மேலிடம் உத்தரவிடுகிறது. கடத்தல் கும்பல் தலைவன் தன்னுடைய நண்பன் என்பதால், அவனை காப்பாற்றுவதற்காக, வேறு ஒருவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ள மகேஸ்வரன் முடிவெடுக்கிறார்.

அப்போது, கால்டாக்சி டிரைவர், ஜப்பானில் இருந்து தனிமையில் வந்திருக்கும் அபிமன்யூவுக்கு இங்கு யாரும் இல்லாததால், இந்த என்கவுண்டருக்கு அவனையே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று தனது நண்பர்களிடம் ஆலோசனை கூறுகிறான். நண்பர்களுக்கும் அது சரியென்று படவே, அவனையே என்கவுண்டருக்கு பயன்படுத்த முடிவெடுத்து, அவனை கடத்தி தங்களது கஸ்டடியில் வைத்துக் கொள்கிறார்கள். 

இறுதியில், நாயகன் இவர்களிடமிருந்து தப்பித்து காதலியை கண்டுபிடித்தாரா? அல்லது நண்பர்களின் என்கவுண்டருக்கு பலியானாரா? என்பதே மீதிக்கதை. 

ஆத்யன் என்றால் எல்லாம் அறிந்தவன் என்பதால் இப்படத்தில் நாயகன் அபிமன்யூவிக்கு ஆத்யன் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், நாயகனுக்குண்டான முக்கியத்துவம் படத்தின் கிளைமாக்ஸ் வரை கொடுக்கப்படவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில்தான் இவர் ஒரு மிகப்பெரிய பைட்டர் என்பதும், அதன்பின்னர் வரும் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.

நாயகி சாக்ஷி அகர்வால் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனுடனான காதல் காட்சிகள் எல்லாம் இவருக்கு பெரிதாக இல்லை. ஒன்றிரண்டு பாடல் காட்சிகளில் மட்டும் நாயகனுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்திருக்கிறார். நண்பர்களாக வரும் ஜெயச்சந்திரன், மகேஸ்வரன், அனிஷ் ஆகியோர் வரும் காட்சிகளில்தான் ஒரு ஆக்ஷன் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் இருக்கும்படி செய்திருக்கிறார்கள். மூன்று பேரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். 

ஆக்‌ஷன், ரொமன்ஸ் என படத்தை இயக்கியிருக்கிறார் ராம் மனோஜ்குமார். இவர் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை தேர்வு செய்து இயக்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் வலுவில்லாமல் இருக்கிறது. திரைக்கதையில் விறுவிறுப்பு, சுவாரஸ்யமான காட்சிகள் அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஹரி ஜி.ராஜசேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு படத்தில் பெரியதாக எடுபடவில்லை.

மொத்தத்தில் ‘ஆத்யன்’ ஆதிக்கம் குறைவு.



0 comments: