Tuesday, October 06, 2015

மெக்காவில் நடந்தது என்ன? பலியானவர் உறவினர் பேட்டி!

திருச்சி: ஹஜ் புனித பயணம் முடித்து, வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஊர் திருப்புவதாக இருந்த ரெமிஜன்,  மெக்காவில் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
மெக்காவுக்கான ஹஜ் புனித பயணத்தின் ஒரு பகுதியாக, மினாவில் நடந்த  சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்ததில் 15 பேர் இந்தியர்கள். அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர்.

இதில், திருச்சி தென்னூர், அண்ணாநகர் மெயின் சாலை, உக்கிரகாளி அம்மன் கோயில் அருகே குடியிருக்கும் ரெமிஜன் என்பவரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து ரெமிஜனின் உறவினரான அபுதாகிர்  நம்மிடம் கூறுகையில், "கடந்த 1ஆம் தேதி, எங்க அத்தை ரெமிஜன், அவரது கணவர் முகமது அமானுல்லா, மகள் நிசாத், மகளின் கணவர் அமானுல்லா ஆகியோர் திருச்சியிலிருந்து மெக்காவுக்கு போனாங்க.
அவர்கள் ஹஜ் புனித பயணம் முடித்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஊர் திரும்புவதாக இருந்தாங்க. ஆனால் மெக்காவில் நடந்த விபத்தில் அத்தை சிக்கி உயிரிழந்துள்ளார். அவங்களுடைய மகள் நிசாத் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த புனித பயணத்தின்போது அத்தை இறந்தது, எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் ஆண்டவருடைய திருவடி நிழலில் உயிரிழந்தது அவர் செய்த பாக்கியம்" என்றார்.

ரெமிஜன் உடல் ஹஜ்-லேயே அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார், ரெமிஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

-சி.ஆனந்தகுமார்

படங்கள்: 
என்.ஜி.மணிகண்டன்

நன்றி-ஆனந்தவிஅடன்

0 comments: