Tuesday, October 13, 2015

பார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்?

உலகப் பார்வை நாள் அக்டோபர் 8
‘என்ன சார் வரவரச் சின்ன வயதில் குழந்தைகள் கண்ணாடி போடுவது அதிகமாகிக்கொண்டே வருகிறதே’ - ஒரு பள்ளி ஆண்டு விழாவுக்குச் சமீபத்தில் சென்றிருந்த போது, நண்பர் இப்படிக் கேட்டார். உண்மைதான். பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வைக் குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எந்நேரமும் செயற்கை திரை
ஸ்மார்ட்ஃபோன், தொலைக்காட்சி, கணினியைச் சதா வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்ஃபோனும் கையுமாக இருக்கிறார்கள். இல்லையென்றால் கணினி, தொலைக்காட்சி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள்.
மூன்று வயதைத் தொடாத குழந்தைகூட அலைபேசியுடனே நேரத்தைக் கழிக்கிறது. ‘என்ன சார் செய்றது, கண்ட்ரோல் பண்ண முடியலை, விட்டுட்டோம்’ என்று பிரச்சினையின் தாக்கம் என்னவென்று தெரியாமலேயே, பெற்றோரும் எளிமையாகச் சொல்லிவிடுகிறார்கள். ஏதாவது ஒரு பிரச்சினைக்காகக் குழந்தைகளைக் கண் மருத்துவமனைக்கு அழைத்துவரும் பெற்றோர், ‘எப்பப் பார்த்தாலும் டிவியே கதின்னு கிடக்கிறான்’, ‘அலைபேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கிறான், நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க சார்’ என்று மருத்துவரிடம் முறையிடுகிறார்கள்.
பாதிப்பு ஏற்படுவது எப்படி?
நம் முந்தைய தலைமுறையில் குழந்தைகள், இந்த அளவுக்குக் கண்ணாடி போடவில்லை. அப்படியென்றால், இப்போது மட்டும் ஏன் இந்த நிலைமை? ஸ்மார்ட்ஃபோனின் சிறிய திரைக்கும், அதைப் பார்ப்பவருக்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் தொடர்ந்து நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் விரைவில் களைத்துப் போகிறது. இதனால், நாளடைவில் கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தொலைக்காட்சி, கணினி பயன்பாட்டிலும் இதே நிலைமை ஏற்படக்கூடும்.
இதைத் தவிரக் கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கியக் காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் ‘டோபமைன்’ என்ற வேதிப்பொருளை அதிகமாகச் சுரக்கச் செய்கிறது சூரிய ஒளி. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் ‘டி’ கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், வீட்டுக்கே வர மாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்.
பாதிப்பைத் தடுக்க முடியும்
கண் பாதுகாப்பு குறித்துப் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். ‘போன் கொடுக்கவில்லை என்றால் சாப்பிட மாட்டான், அடம் பிடிப்பான்’, ‘ஒருநாள் கொடுத்தால், என்ன ஆகிவிடப்போகிறது’ என்று நினைத்துக்கொண்டிருப்பதை முதலில் நிறுத்த வேண்டும். ஒருநாள் பழக்கம், பின்னர் வழக்கமாக மாறிவிடும். குழந்தைகளுக்குத் தேவையில்லாமல் ஸ்மார்ட்ஃபோனை வாங்கித் தரக்கூடாது.
சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும். இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கெனவே, கிட்டப் பார்வைக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன்மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிட்டப்பார்வைக் குறைபாட்டை அலட்சியமாகக் கருதக் கூடாது. குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பார்வை அத்தியாவசியம் இல்லையா?
கட்டுரையாளர், தேசியக் கண் மருத்துவ சங்க ஒருங்கிணைப்பாளர், மதுரை 
மின்னஞ்சல்: [email protected]

ண்றி-தஹிந்து

0 comments: