Friday, October 09, 2015

மனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி!

  • ஓவியங்கள்: மனோகர்
    ஓவியங்கள்: மனோகர்
அந்த ஊர் குழந்தைகள் எல்லாரும் அவரை ‘துரசாபுரம் தாத்தா’ என்றுதான் சொல்வார்கள்.
இத்தனைக்கும் அவருக்கு சொந்த ஊர் அது இல்லை. அவர் அந்த ஊருக்கு மாப்பிள்ளையாக வந்தவர்தான். அவர் பொண்ணு எடுத்த வீடு அப்படிப்பட்டது. இப்போது அவருக்கென்று சொந்தங் களாக ஒரு தோட்டம், கிணறு இருபத் தைந்து குறுக்கம் கரிசல் காடு, வீடு போக தனியாக ஒரு தொழுவம் இவையெல்லாமும் இருந்தன.
இத்தனை இருந்தும் பாவி மட்டைக்கு ஒரு பிள்ளை இல்லை.
நடுவயசில் அவருடைய வீட்டம் மாவை ‘முகட்டும் பாம்பு’ கடித்து இறந்து போனாள்.
ஏன் அவள் இந்த முடிவுக்கு வந்தாள் என்று நாளது தேதி வரைக்கும் யாருக்கும் தெரியாது.
அது வித்தியாசமான சாவு.
வீட்டினுள் விட்டங்களில் ‘தவலைக் கொத்து’ என்கிற இரும்புக் கம்பியினால் ஆன ‘ய’ போன்ற வளையங்கள் இருக்கும். குழந்தைகள் தூங்கத் தூளிக் கட்ட, பருத்தி போன்ற பண்டங்களை நிறுத்து வியாபாரிகள் வாங்கிக்கொண்டு போக இப்படியான பயன்பாட்டுக்குத்தான் அந்தத் தவலைக் கொத்து. அதில் கயிற்றைப் போட்டு சுருக்கா முடிச்சுப் போட்டு, அதனுள் தலையைத் கொடுத்து உயிரைப் போக்கிக்கொள்ள அல்ல.
தானியங்கள் போட்டுவைக்க உயரமான குலுக்கைகளுக்கு உள்ளே இறங்கி, ஏறிவர தவலைக்கொத்தில் கட்டி தொங்கவிட்டப்பட்டிருக்கும் கயிறு பயன்படும். அதில் தலையைக் கொடுத்து காலியாக இருந்த குலுக் கைக்குள்ளே குதித்துவிட்டாளே பாத கத்தி.
அவளை வீட்டிலும் காட்டிலும் சொந்தபந்தங்களின் வீடுகளிலும் என்று தேடித் தேடி அலுத்துப் போனார்கள்.
இப்படி மறைவாக செத்துப்போக எங்கே கற்றாளோ? கண்டுபிடிக்க ரெண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன.
மூன்றாம் பேருக்குத் தெரியாமல் உடம்பைக் கொண்டுபோய் ஊரே சேர்ந்து எரித்துவிட்டு, குளத்தில் ஒரு முங்கு போட்டு வந்துவிட்டார்கள்.
அவர்களுக்குள் புருசன் பெண்டாட்டி சண்டை என்று வந்து ஊரார் ஒருநாளும் பாத்ததில்லை.
தாத்தாவுக்குள் சத்தமில்லாத இடி இறங்கியதுபோலாகிவிட்டது. பேச்சற் றுப் போனார்.
ஊருலகத்துக்கெல்லாம் ஆறுதல் சொல்லுகிறவர் அவர்.
அவர் முன்னால் வந்து மவுனமாக உட்கார்ந்திருந்துவிட்டுப் போனார்கள் ஊர் மக்கள். இது ஒரு வகையான துக்க விசாரிப்பு.
பண்டுகன் போன்ற தொள்ளாளிகள் கொஞ்சம் தள்ளி இருந்து நின்றுவிட்டுப் போனார்கள்.
அப்போதிலிருந்து வளர்ந்த தாடிதான் சாகும்வரை இருந்தது. அப்படி ஒரு பொருத்தம் அந்தத் தாடி அவருக்கு.
பக்கவாட்டில் இருந்து ஒரு அசப்பில் பார்க்கும்போது ரவீந்திர நாத் தாகூர் போலவே இருக்கும் அந்த வெண்தாடி.
வேதக்கோயில் சாமியார்கள் போல நீண்ட அங்கி அணிந்துகொண்டார். அந்த அங்கியின் நிறம் மங்கிய மஞ்சள் நிறம் கொண்டது.
மஞ்சணத்தி மரத்தினால் செய்யப் பட்ட மரப்பாதுகைகளையே கடைசி வரையில் அணிந்தார். யாரும் கிட்டே நெருங்கி பேசினால் மட்டுமே பேசுவார்.
எதையோ பறிகொடுத்தது போல சோபாக் கட்டிலில் சாய்ந்துகொண்டு எதையோ பார்த்துக்கொண்டிருப்பார்.
சாப்பாட்டைக் கொண்டுவந்து முன் வைப்பார்கள். விரும்பினால் சாப்பிடுவார். தேநீர் விரும்பிச் சாப் பிடுவார். அது தேயிலைத் தூள் வந்த புதுசு. அவருக்கு முன்னால் கொண்டு வந்து வைக்கும் தேநீர் வீடெல்லாம் மணக்கும். தண்ணீர் விடாத தனிப் பாலில் தேயிலைத் தூள் போட்டுக் கொதிக்கவைத்தது. இனிப்புத் தூக்கலாக இருக்கும்.
நாங்கள் எட்ட நின்று அவரையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். தேநீர் கொண்டுவந்து வைத்தவுடன் அதன் மணம் அவரை நிமிர்ந்து உட்கார வைக்கும். முகத்தில் ஒரு திருப்தி யான மகிழ்ச்சித் தெரியும். எங்களைத் தன்கிட்டே வரும்படி தலையை ஆட்டி அழைப்பார். போவோம். அவர் முன் சட்டி நிறைய தேநீர் இருக்கும். சிறிய தம்ளர்களில் தேநீரை ஊற்றித் தருவார். அப்படி ஒரு ருசியுள்ள தேநீரை நான் எங்கேயும் அதுவரையில் சாப்பிட்டதே இல்லை. நாங்கள் குடிப்பதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பார்.
ஒருநாள், அந்த ஊர் வழியாக ஒரு பந்த சேர்வை கோஷ்டி வந்துபோனது. அந்த கோஷ்டியின் வருகை நமது தாத்தாவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
ஊர்களில் காவடி எடுத்தாலும் சரி, பந்த சேர்வை எடுத்தாலும் சரி, அதனோடு ஒரு சங்கீதக் கலைக் குழு வரும். அவை வாய்ப்பாக அமைந்துவிட்டால் ஊர் ரசிகர்கள் அதற்குப் பின்னாலேயே ரெண்டுமூணு ஊர்களுக்குத் தொடர்ந்துபோய் வழிய னுப்பிவிட்டு வருகிறதும் உண்டு.
இப்போது வந்த கோஷ்டியையும் அதோடு சேர்த்துக்கொள்ளலாம். மத்தி யில் ‘கோயிந்தோய்… கோயிந்தோய்’ எனும் கூவலில் அதனுடைய கூட்டுக் குரலிசை தூரத்தில் கேட்கும்போதே மனசை என்னவோ செய்தது. ஈர விறகில் தீப்பற்றுமா? காய்ந்த கூளத்தில்தான் பற்றும். மனசுக்குள் எங்காவது பக்தி என்கிற கரிமருந்து தாத்தாவின் மனசுக் குள் இருந்திருக்க வேண்டும். அந்தக் கூவல் ஒலி அவருடைய வீட்டை நெருங்க நெருங்க, சோபாக் கட்டிலில் சாய்ந்துகொண்டு கால்த்தூக்கத்தில் சாய்ந்து கிடந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு நிலைக்கு வந்தார்.
தூக்க முடியாத பாரத்தை எல்லோரும் ஒரு பாடலைக் கூறிக்கொண்டே நகர்த்துவார்கள். அப்படி இருந்தது அந்த ஈர்ப்பு.
இதுக்கும், மிருதங்கத்தின் தும் தும் ஓசை இல்லை. வெறும் கஞ்சிராதான். பார்ப்பதற்கு சொர சொரப்பாகத் தெரி யும் உடும்பின் தொலிதான் கஞ்சிராவில் ஒட்டப்பட்டிருந்தது.
ஏன் மிருதங்கம் வைத்துக்கொள்ள வில்லை என்று அவர்களோடு பழகிய பிறகு கேட்டதற்கும் ‘‘மிருதங்கத்துக்குச் ‘சோறு’ வைக்கணுமே’’ என்றார்கள். அதுவும் சரிதான்.
தாத்தா வீட்டில் பந்த சேர்வை கோஷ்டிக்கு வர‌வேற்பு பலமாக இருந்தது. வேடிக்கை பார்க்கவந்த ஊர்க் காரர்களோடு சேர்ந்து முன்பட்டகசாலை நிறைந்துவிட்டது கூட்டம்.
எல்லாருக்கும் கருப்பட்டியும் நீர்மோரும் விநியோகித்தார்கள்.
பகலாக இருந்தாலும் ஒரு பந்தம் மட்டும் எரிந்துகொண்டே இருந்தது. வீட்டுக்காரர்கள் அதுக்கும் எண்ணெய் கொண்டு வந்து ஊற்றினார்கள்.
அவர்களுடைய கருவச் சட்டிக்கும் எண்ணெய் ஊற்றி நிரப்பினார்கள். ராத் திரி ஆகிவிட்டால் அதிகப்படியாக மேலும் ரெண்டு மூன்று பந்தங்கள் எரியும்.
இப்படி அவர்கள் திருப்பதித் திருத் தலம் போய் வேண்டுதல் நிறைவேற்றும் வரை
பந்தங்கள் தாங்கி நடந்தே போவார்கள். திரும்பி வரும்போது சவு கரியம்போல வருவார்கள்.
- இன்னும் வருவார்கள்...

the-hindu

0 comments: