Friday, October 30, 2015

புரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்

-மாலைமலர்


நடிகர் : ராம்சரண்
நடிகை :ரகுல் ப்ரீத் சிங்
இயக்குனர் :ஸ்ரீனு வைத்லா
இசை :எஸ்.தமன்
ஓளிப்பதிவு :மனோஷ் பரமஹம்சா
ராம்சரணை கலெக்டராக்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்படுகிறார். ஆனால், இந்த ஆசையை, அக்காவுக்காக விட்டுக் கொடுக்கிறார் ராம்சரண். இதனால், தந்தையின் வெறுப்புக்கு மத்தியில் வளர்ந்து பெரியவனாகும் ராம்சரண், சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ஒருமுறை சூட்டிங்கில் போலீஸ் உடை அணிந்து எதிரிகளுடன் சண்டை போடும் ராம்சரணை பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங், அவன்மீது காதல் கொள்கிறாள்.

அவன் உண்மையான போலீஸ் என்று நினைத்து அவனுடன் பழகவும் ஆரம்பிக்கிறாள். ரிப்போர்ட்டிங் என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரகுல் ப்ரீத் சிங், அங்கு நடக்கும் கொள்ளை சம்பவங்களை எல்லாம் போலீஸ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ராம்சரணிடம் சொல்கிறாள். அவனும், ரகுல் ப்ரீத் சிங் மீதுள்ள மோகத்தால், அந்த கும்பலை எல்லாம் அடித்து துவம்சம் செய்கிறான்.

இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனான அருண்விஜய், ராம்சரண் மீது ஆத்திரம் அடைகிறார். ஒருமுறை இவரை எதிர்க்கப்போய், இருவருக்கும் மோதல் உருவாகிறது.

இந்நிலையில், பெரிய தொழிலதிபர்களான சம்பத்-நதியாவின் தம்பதியின் மகனான அமிதாஷ், ராம்சரணின் அக்காவை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் சொல்ல, அவர்களும் இதற்கு சம்மதிக்கிறார்கள். இருவருடைய வீட்டிலும் இதற்கு சம்மதம் கிடைக்க, திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையில், ராம்சரணை தனது அப்பாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் ரகுல் ப்ரீத். அவளுடைய அப்பா போலீஸ்காரர் என்பதால், ராம்சரணுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. ராம்சரண் போலீஸ் இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. இருப்பினும், அவர் ராம்சரணிடம் சில உண்மைகளை கூறுகிறார்.

அதாவது, சம்பத் பெரிய கொள்ளை கும்பலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் என்பதும், அவருடைய மகன்தான் அருண்விஜய் என்பதையும் ராம்சரணிடம் கூறுகிறார். மேலும், அரசியல்வாதியாக ஆசைப்படும் சம்பத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவரை பின்தொடர்வதாகவும் கூறுகிறார். அப்போது, தன் அக்காவின் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதுகூட அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்பதை அறிந்து கொள்கிறார் ராம் சரண். மேலும், அக்காவுக்கும், அவரை திருமணம் செய்துகொள்ள போகிறவருக்கும் சம்பத்தால் ஆபத்து இருப்பதையும் உணர்கிறார்.

இறுதியில், சம்பத்-அருண் விஜய்யின் திட்டங்களை ராம் சரண் முறியடித்தாரா? அவரது அக்காவின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

இது ஒரு குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு படம். இதற்கு ஏற்றாற்போல் ராம்சரண், பெற்றோர் மற்றும் அக்கா மீது பாசம் காட்டும் காட்சிகளாகட்டும், சண்டை, நடனம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் திறன்படவே செய்திருக்கிறார். குறிப்பாக, பாடல் காட்சிகள் இவர் வளைந்து ஆடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

ரகுல் ப்ரீத் சிங், இந்த படத்தில் ரொம்பவும் அழகாக தெரிகிறார். நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு பளிச்சிடுகிறது. அதேபோல், ரொம்பவும் துணிச்சலான பெண்ணாகவும் அழகாக நடித்திருக்கிறார். அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு வில்லனாக அறிமுகமாகியிருக்கும் படம். இந்த படத்திலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவருடைய கெட்அப்பை ரசிக்க வேண்டும்போல் இருக்கிறது.

சம்பத், நதியா, அமிதாஷ் என படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ஸ்ரீனு வைத்லா, ஒரு குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு படத்தை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். ஆனால், படம் ரொம்பவும் நீளமாக இருப்பதால், கொஞ்சம் போரடிக்கிறது. அதை மட்டும் குறைத்திருந்தால் படம் சபாஷ் பெற்றிருக்கும். படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். ஒவ்வொரு வசனமும் ரசிக்கும்படி இருக்கிறது.

தமன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் தனது முழு திறமையை நிரூபித்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அழகாக பதிவாகியிருக்கிறது.

மொத்தத்தில் ‘புரூஸ்லீ 2’  ரியல் பைட்டர்.


0 comments: