Thursday, August 13, 2015

ஈட்டி (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : அதர்வா
நடிகை :ஸ்ரீதிவ்யா
இயக்குனர் :ரவி அரசு
இசை :ஜி.வி.பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவு :சரவணன் அபிமன்யு
போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். 

விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க முயற்சிக்கிறார் ஜெயப்பிரகாஷ். 

இந்நிலையில், அதர்வாவுக்கு ராங் கால் மூலம் சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்த சமயத்தில் தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா. 

இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் ஸ்ரீதிவ்யாவிற்காக அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதை அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது. 

இறுதியில் அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள போட்டியில் கலந்துக் கொண்டாரா? அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை. 

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தடகள வீரருக்கு உண்டான உடலமைப்புக்காக அதிகமான உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்பாவின் லட்சியத்திற்காக போராடுவது, காதலிக்காக கள்ள நோட்டு கும்பலை எதிர்ப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார். 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார். படம் முழுக்க ரசிக்க வைத்த இயக்குனர் திரைக்கதையை சிறிது சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘ஈட்டி’ கூர்மை.




0 comments: