Tuesday, July 14, 2015

தமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்

பெரியோர்களே... தாய்மார்களே !ப.திருமாவேலன் ஓவியம்: கண்ணா
பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார். கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும். ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார். காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும். சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை பெங்களூரில் இருந்து வந்து இங்கு பொங்கல் நேரத்தில் சிறப்புப் பேட்டி கொடுத்துவிட்டு போயிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிரான்ட்வேல்யூ கிடைத்திருக்கும்.
அண்ணாதுரையை, கருணாநிதியை, ராஜகோபாலனை, சின்னச்சாமியை, எம்.ஜி.ராம்சந்தரை, ஜெயலலிதாவை, பன்னீர்செல்வத்தை உச்சிக்குக் கொண்டுபோய் உட்கார வைத்ததற்குப் பெயர் தேர்தல்!அண்ணா இறந்துபோனபோது கூடியகூட்டம் கின்னஸில் இடம்பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்... சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்... சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை. ‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்?’ என்று நாடாளுமன்றத்தை நடுக்கக் கேட்ட வைகோவை, விருதுநகர் அரவணைக்கவில்லை. ஊரார் மெச்சிய பிள்ளைகளை சொந்தவீட்டில் அன்னியம் ஆக்கியதற்குப் பெயரும் தேர்தல்!
ஒரு மணிநேரத்துக்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட ‘மை லார்ட்டு’ என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி...  சிவகாசி வெயிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க... காற்றுகூட குறுக்கிடாத பாதுகாப்புடன்... ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்த உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும்,  இந்திய அளவில் புகழ்பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன்  நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்துச் சிரித்ததும்... எதனால்? தேர்தலால்!
‘அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் சொல்கிறேன்: அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல்தான்’ என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக இருந்தார். ‘அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது’ என்று சொன்ன ஜெயகாந்தனும் அதில் பங்கேற்றார். ‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணரை தலைமேல் தூக்கித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனையும் அது விடவில்லை. அதிகார வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவும் அதில் மூழ்கினார். தேர்தல் மோகம் யாருக்கு வராது?
கோடீஸ்வர ஏ.சி.சண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப் போனதும், சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியனை வைஜெயந்தி மாலா வென்றதும், நல்லகண்ணு தேர்தலில் நின்றாரா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் போனதும், ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும் தேர்தல் விநோதமா?
பால்காரனுக்குக்கூட வீட்டுக்கதவைத் திறக்காத சிலர், ஐந்து தடவைக்குமேல் எம்.பி தேர்தலில் வெல்வதும், மக்கள் பிரச்னைக்காக எப்போதும் பேருந்து நிலைய வாசல்களில் முழக்கம் போட்டு நிற்பவருக்கு 100 ஓட்டுகள்கூடத் தாண்டாததும், நடிகர்களை தியாகிகளாகப் பார்க்கக் கூடுவதும், தியாகிகளை காமெடியன்களாக நோக்குவதும் ஜனநாயக விநோதமா?
தனது தேகத்தைத் தேய்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம், எலும்புருக்கி நோய் தாக்கியபிறகும் சவம் எழப்பேசிய சுப்பிரமணிய சிவா, ரத்தத்தை உறையவைக்கும் கவிதை இயற்றிய பாரதி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பெரியார், இவர்கள் யாரும் தேர்தலில் நின்றது இல்லை. ஈரோட்டில் மக்கள் பிரச்னைக்காக நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடம், ‘என் பேச்சைக் கேட்கத்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். நான் தேர்தலில் நின்றால் உங்களில் யாரும் ஓட்டுப் போடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்?’ என்று பெரியார் சொன்னார். நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்! உண்மைதானே? 
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவரின்  மனைவி ஜானகியை தாய் என்று போற்றிய அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள், எம்.ஜி.ஆர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவரைத் தோற்கடித்த நாடு இது. சிவாஜி படம் பார்க்காதவர் உண்டா? அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா? அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா? இந்த மொத்தக் கூட்டமும் அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் சூரக்கோட்டைக்காரருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமாகி இருக்கும். என்ன யோசித்தார்கள் எம்.ஜி.ஆரின் ரத்தங்கள், சிவாஜி மன்றத்துப் பிள்ளைகள்?
ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஜி.கே.வாசன் என எல்லோர்க்கும் உண்டு முதலமைச்சர் கனவு. அந்தக் கனவுக்கு முன்னோட்டம்கூட இன்று வரை சாத்தியம் ஆகவில்லை. ஆனால், இப்படி யோசித்தாலே 107 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஒருமுறை அல்ல... இரண்டு முறை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி என்று பெருமாள் பெயர் கொண்டவர்கள் தங்களுக்கும் அது சாத்தியம் என்று நினைத்தார்கள். அந்த அளவுக்கு அது எளிமையான பொருளா?
இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த தியாக வியர்வை காய்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த தமிழகம் - கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியைத் தள்ளி வைத்திருக்க என்ன காரணம்? எவ்வளவு அதிகாரம் பொருந்தியவர்களாக ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் தனியாக நிற்க, தண்ணீர் குடிக்க வேண்டி வந்த கள யதார்த்ததுக்கு என்ன காரணம்?
எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் பேசிய ராஜாஜி - முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் இல்லை. ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட பலபேர், மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்றால் மக்களுக்கு இந்த வகை மனிதர்களைத்தான் பிடிக்கிறதா?

அன்று சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இருந்த நிழல் யுத்தம் இன்று இளங்கோவனுக்கும் சிதம்பரத்துக்கும் நடக்கிறது. அன்று அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இருந்த ஈகோ யுத்தம் இன்று கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிறது. ராஜாஜி, சாதி பார்த்திருந்தால் சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். கருணாநிதி, ரத்தம் பார்த்திருந்தால் ஸ்டாலினுக்கு விட்டுத்தர முன்வந்திருக்கலாம்.
ஆனால் பதவி, இவை எல்லாவற்றையும்விட உயர்ந்ததா? வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சர் ஆவார் என்று காத்திருக்க, வெள்ளையனே வியக்கவைக்கும் அளவுக்குப் பதவியை மறுத்த தியாகராயர் -நான் பதவி விலக சம்மதிக்கிறேன், ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூரார் -எனக்கு உடல்நலமில்லை, முதலமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா -ஒன்பதாண்டுகால முதலமைச்சர் பதவியை தூசியைப்போல தட்டிவிட்டு வெளியேறிய காமராஜர் -முதலமைச்சர் ஆவதற்கு எம்.எல்.ஏ பதவி வேண்டும் என்பதையே உணராமல் எம்.பி-க்கு போட்டியிட்ட அண்ணா - வாழ்ந்த மண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் இப்போது அசிங்கமாகிப் போனதே தமிழ்நாடு. என்ன காரணம்?
வாருங்கள் கடந்த காலம் தெரிவோம். கடந்த காலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை!

நன்றி - விகடன்

0 comments: