Tuesday, July 07, 2015

பேபி - சினிமா விமர்சனம்

தாய்ப் பாசத்துக்காக ஏங்கும் சிறுமிக்கு பேயின் அன்பு கிடைத்தால் என்ன நடக்கும்? அதுதான் ‘பேபி’.
கணவர் சிவாவுடன் (மனோஜ்) கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பின் 12-வது தளத்தில் தன் குழந்தை அதிதியுடன் (ஸ்ரீவர்ஷினி) வசிக்கிறார் சக்தி (ஷிரா). தன் மகள் அதிதியை ஒரு தேவதையாகவே நினைத்து வளர்க்கிறார்.
‘‘குழந்தை உன் சாயலும் இல்லை, கணவர் சாயலும் இல்லை’’ என்று தோழி சொல்வது அவளை நொறுக்கிப்போடுகிறது. இந்த சந்தேகத்தை டிஎன்ஏ சோதனையும் உறுதிப்படுத்துகிறது. குழந்தை அதிதி யுடன் கணவர் வீட்டுக்குச் சென்று சண்டை போடுகிறார். மருத்துவமனையில் குழந்தை மாறியதை சிவா விளக்குகிறார். தான் பெற்ற குழந்தை அவந்திதா (சாதன்யா) சிவாவிடம் இருப்பவள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறாள்.
கணவன், மனைவி இருவருக்குள்ளும் இருந்த கருத்து வேறுபாடு உடைந்து இரு குழந்தைகளோடும் மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகிறார்கள். அவந்திகா வந்த பிறகு, முன்புபோல அம்மா தன் மீது பாசம் காட்டுவதில்லை என்று நினைத்து சிறுமி அதிதி ஏங்குகிறாள். அதை பல இடங்களில் வெளிப்படுத்தவும் செய்கிறாள்.
இந்த பின்னணிக்கு இடையே அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுமி அதிதிக்கு ஒரு பேயின் அன்பு கிடைக்கிறது. அதிதி மீது அந்த பேய் பாசம் காட்ட என்ன காரணம்? அதனால் குடும்பத்தில் நடக்கும் திகிலூட்டும் நிகழ்வுகள் என்ன? 2 மணி நேரம் நகரும் படத்தின் கதை இதுதான்.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பையும், 2 சிறுமிகளையும் வைத்துக்கொண்டு நேர்த்தியாக திரைக்கதை பின்னப்பட்டுள்ள முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. அடுக்குமாடி, பள்ளி வளாகம், கார் என்று குறிப்பிட்ட இடங்களிலேயே கதை சுற்றினாலும் கதாபாத்திரங்களும், கதையின் போக்கும் சுவாரஸ்யமாக அதை நகர்த்திக் கொண்டுபோகின்றன.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பையும், 2 சிறுமிகளையும் வைத்துக்கொண்டு நேர்த்தியாக திரைக்கதை பின்னப்பட்டுள்ள முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. அடுக்குமாடி, பள்ளி வளாகம், கார் என்று குறிப்பிட்ட இடங்களிலேயே கதை சுற்றினாலும் கதாபாத்திரங்களும், கதையின் போக்கும் சுவாரஸ்யமாக அதை நகர்த்திக் கொண்டுபோகின்றன.
பேயுடன் விளையாடும்போது குதூகலிப்பதாகட்டும், வளர்ப்புத் தாய் சக்தியின் பாசத்துக்காக ஏங்குவதாகட்டும்.. சிறுமி ஸ்ரீவர்ஷினி சிறப்பாக நடித்திருக்கிறார்.
பேயைப் பார்த்து பயப்படும் சாதன்யா நடிப்பும் கச்சிதம். அப்பா வேடத்தில் மனோஜின் நடிப்பு மிகவும் இயல்பு.
பெற்ற மகளாக நினைத்து 6 ஆண்டுகளாக வளர்த்த குழந்தை இன்னொருவர் மகள் என்று தெரிந்தும், அவள் மீது பாசத்தைப் பொழிகிறார் சக்தி. இந்த பாசத்தை சரியாக வெளிப்படுத்த வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.
ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவும், சதீஷ் - ஹரீஸ் பின்னணி இசையும் கதாபாத்திரங்களோடு சேர்ந்து கதைக்கு உண்டான பங்களிப்பைக் கொடுத்திருக் கின்றன.
பேயாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், காரில் அமர்ந்து கண்ணீர் விடுவது போன்ற காட்சிகள், வரிசைகட்டி வந்துகொண்டிருக்கும் விதவிதமான பேய்ப் படங்களில் இருந்து இதை மாறுபட்ட அனுபவமாக ஆக்குகின்றன.
இரண்டு மணிநேரப் பயணம் என்றாலும், பாசத்துக்காக ஏங்கும் குழந்தை, குழந்தைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள், பெற்ற குழந்தைக்காக தத்தெடுத்த குழந்தையை இழக்க நேரிடும் அப்பா.. என்று தொடக்கம் முதல் இறுதிவரை பாசம், ஏக்கம் என்று ஏகத்துக்கும் சென்டிமென்ட்! இதை குறைத்து, குழந்தைகளின் உலகத்தை இன்னும் கொஞ்சம் விசாலப்படுத்தி, அஞ்சலி ராவ் திகில் காட்சிகளை விறுவிறுப்படையச் செய்திருந்தால் ‘பேபி’ இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


நன்றி - த இந்து

0 comments: