Thursday, April 23, 2015

‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான்ட்ரா சிறப்புப் பேட்டி

இளம் கதாநாயகி ரெஜினா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமும் தமிழ்நாடு. அள்ளிச் சூடிக்கொண்டதோ தெலுங்குத் திரையுலகை. தமிழில் ‘ராஜதந்திரம்’ தந்த வெற்றிக் களிப்பு முகத்தில் மின்ன ‘சுப்பிரமணியம் ஃபார் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டுக்கொண்டிருந்தவருடன். ஒரு குறும் பேட்டி:
தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தமிழ் சினிமாவில் நடிக்க பிகு செய்கிறீர்கள் போலத் தெரிகிறது..
திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய எனக்குப் பிடிக்காது. என் அதிர்ஷ்டமோ, என்னவோ இயல்பாக, யதார்த்தமாகத் தொடும் காரியம்தான் எனக்குச் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது. தெலுங்கில் கமர்ஷியல் ஃபார்முலா படங்களில் நடித்தால் போதும். நம்ம ஊரில் நல்ல கதை கொண்ட யதார்த்தமான படத்தில் நடித்தால் மட்டும்தான் கவனிப்பாங்க. அதனால்தான் இங்கே நிதானமாகப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அறிமுகமான ‘கண்ட நாள் முதல்’ படம் வெளியாகிப் பத்து ஆண்டுகள் ஆகிறதே?
இந்நேரம் தமிழில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருக்க வேண்டாமா என்றுதானே கேட்கவருகிறீர்கள்? ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘கண்ட நாள் முதல்’ படம் வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிஸியானாலும் எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை விடவே இல்லை.
பி.எஸ்.சி. சைக்காலஜி வரைக்கும் தொடர்ந்தேன். அப்படிப் பார்த்தால் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் எனது படிப்புக்காகவே டெடிகேட் செய்திருக்கிறேன். இந்த இடைவெளியில் நல்ல கதைகளை எப்படித் தேர்வு செய்வது என்ற ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்குப் பிறகு ‘ராஜதந்திரம்’. இடைவெளி இருந்தாலும் ‘பளிச்’சென இடம்பிடித்துவிட்டீர்களே?
‘ராஜதந்திரம்’ படத்துக்கு நட்சத்திரத் தேர்வு முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்தான் அந்தக் குழுவினருடன் இணைந்தேன். அவர்கள் திடீரென்று அழைத்த நேரத்தில் தெலுங்கில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியும் இருந்தேன். ஆனால் கதையைக் கேட்ட பிறகு சில தந்திரங்கள் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அந்த டீம் என்னைக் கவர்ந்ததும் அதில் நடிக்க முக்கியமான ஒரு காரணம். கேடி பில்லாவுக்குப் பிறகுகூட என்னை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு நிஜமான வெற்றிக்குப் பிறகு எல்லோரும் நம்மை எப்படிக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
உங்களைப் போலவே தெலுங்கிலிருந்து வந்த ஹன்சிகா தற்போது இங்கே முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இடம்பிடித்துவிடுகிறாரே?
என் கையில் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது மட்டும்தான் என் வேலை. இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினா, மூன்றாவது ஹீரோயினா என்பதைக்கூட நான் பார்ப்பதில்லை. தேடி வரும் கேரக்டர் புதிதாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் நான் பார்க்கிறேன். மற்றபடி பெரிய இயக்குநர்கள், முன்னணி நாயகர்கள் படங்கள் எல்லாம் அதுவாக அமைந்தால்தான். பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியார், ஜோதிகா என்று திருமணதுக்குப் பிறகு திரைக்கு மறுபிரவேசம் செய்து கலக்க ஆரம்பித்திருக்கும் முன்னாள் கதாநாயகிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இன்றைய ஹீரோயின்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள்தான் சினிமா ஆயுள் என்ற நிலை மாறி வருகிறது. திருமணப் பேச்சு தொடங்கியதுமே நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்ளும் சூழல் முற்றிலும் மறைந்துவிட்டது. நடிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது, எங்களைப் போன்ற புதிய தலைமுறை நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனால் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையை இல்லாமல் செய்கிறது. குடும்பத்தின் முழுமையான ஆதரவும், சுதந்திரமும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் இவங்க மூணு பேருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.
நீங்கள் டிரெக்கிங் ப்ரியையாமே?
ஆமாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஏலகிரி மலைப்பகுதிக்குக் கிளம்பிவிடுவேன். இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் அமெரிக்காவில் ‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கப்போகிறேன். அங்கே டிரெக்கிங் செய்ய உகந்த இடத்தைப் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறேன். குளிர்ச்சியான இடம் விரைவில் சிக்கும். அப்டேட்டுக்கு என் ட்விட்டரைச் செக் பண்ணுங்கள்.




நன்றி - த இந்து 

0 comments: