Sunday, April 12, 2015

எறும்புக்கு சர்க்கரை நோயே வராதா? ஏன்? - கிரேசி மோகன் பதில்கள்

கே.பாக்யம், சேலம்-2.
குல்ஃபி ஐஸ் சாப்பிடும் பழக்கம் உண்டா?
இப்போதெல்லாம் ரைஸ் (சோறு) சாப்பிட்டாலே பல் கூசுகிறது. ஐஸ் சாப்பிட்டால் மூப்பு திரண்ட அறுபதில், பற்கள் முப்பத்திரெண்டும் கூனிக் குறுகி அம்பேலாகி, வாய் ஆலவாய் ஆகிடும். வேண்டுமானால் குல்ஃபி சாப்பிடுவதைப் போல செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம்.
கி.மனோகரி ராஜா, மன்னார்குடி.
‘பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு’ என்றால் எந்த நம்பரை சொல்வீர்கள், ஏன்?
பத்துக்குள்ளே நம்பராக இருப் பதை விட டாப் -10 லிஸ்ட்டில் மெம்பராக இருப்பதே மேல். ஆக, என்னைக் கேட்டால் ‘எண் ஒன்றை’ அழுத்தவும்!
மத்தளராயன், மாம்பலம்
கவிதை நடையில் கதை சொல்ல முடியுமா?
கமல், எழுத்தாளர் இரா.முருகன் அடியேன் மூவரும் அவ்வப்போது வாட்ஸ்அப்பில் கவிதைகளைப் பரிமாறிக்கொள்வது உண்டு. அது போன்ற சமயத்தில், கமல் சார் ‘இலக்குவன் ரேகை’என்ற கவிதையை, ஸாரி… கவிதை அல்ல; அதையும் தாண்டி புனிதமான கதை ஒன்றை அனுப்பினார்.
ஒரு பக்கக் கதைகளை இப்படி கவிதையாகச் சொல்வது சுவாரஸ் யமாகப்பட்டது. இதைப் படித்த பின்பு இதே பாணியில் ‘உத்தர ராமாயணம்’ என்றொரு க(வி)தை எழுதி வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பினேன். ‘வசந்த மாளிகை’ படத்தில் வரும் கண்ணதாசனின் ‘கட்டழகானோதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந் ததடா…’ என்ற மெட்டில் இதோ ‘உத்தர ராமாயணம்!’
‘வெட்ட வெளிதனில் கொட்டும் அருவியில்
வெப்பம் தணிந்ததடா - அவள்
வெட்கம் அகன்றதடா.
பட்டுக் கனியதில் இட்ட முத்திரைகள்
பற்பலக் கோடியடா - எங்கள்
பற்களே சாட்சியடா.
தெப்பமென்றே அவள் தேகம் நனைந்ததில்
தப்பு நடந்தடா - மழலைச்
சொப்பு பிறந்ததடா.
குப்பனென்(று) கொஞ்சிக் குலாவிட
காலம் உருண்டதடா - பிள்ளை
வாலும் வளர்ந்ததடா.
அப்பன் அன்னை எங்கள் ஆயுள் முடிந்திடும்
அந்திமக் காலமடா - தேயும்
எந்திரக் கோலமடா.
குப்பன் இளங்குப்பி காதல் கிழத்தியைக்
கைத்தலம் பற்றி வந்தான் - கண்ணில்
பொய்த்தனம் காட்டி நின்றான்.
அற்ப மருமகள் அன்னை தந்தையெமை
திண்ணைக்(கு) அனுப்பிவிட்டாள் - பையன்
தெருவில் நிறுத்திவிட்டான்.
சிற்பமென யெண்ணி செல்லம் கொடுத்தவன்
சொற்சர அர்ச்சனையால் - கொடும்
நச்சரவமாகினனே.
நற்குணம் இல்லாத நாட்டுபெண் கொட்டத்தில்
வாசல் அடைந்தோமடா - மகன்
நேசம்(கதவு) அடைத்தானடா.
சுடும்சொற்கள் துளைத்ததில் சோர்ந்து களைத் துயிர்
சோதி துடித்ததடா - விதி
நீதி உரைத்ததடா.
வெட்டவெளிதனில் கொட்டும் அருவியில்
வெப்பம் கனன்றதடா - எங்கள்
தப்பும் புரிந்ததடா - கண்கள்
கெட்ட பின்னே ஒளி சூரியனைத் தொழும்
மானிட கும்பலிலே - அதில்
நாமொரு தம்பதிகள்.
புத்திர சோகத்தில் பெற்றவன் போலவே
புண்ணிய ராமபிரான் - லவகுசன்
எண்ணித் தவிக்கலையோ - அந்த
நித்திய விஷ்ணுவும் நிர்குணம் விட்டிந்த
மண்ணில் பிறந்ததனால் - பாற்கடல்
கண்ணில் சுரந்ததடா!
ராகுல் பெனிட்டா, கோவை.
பென்சில் சீவுதலுக்கும் தலை சீவுதலுக்கும் என்ன சார் ஒற்றுமை, வேற்றுமை?
கணினி தட்டச்சு வந்த பின்பு புழுக்கை ஆகும் அளவு பென்சில் சீவல் வழக்கில் இல்லை. அடி யேனுக்கு தலை சீவல் கஷ்டமும் இல்லை. பென் சில் புழுக்கை என்றால் என் தலை வழுக்கை. மலைக்கு செல்ல ரெடியாக தலையில் இரு முடிதான். ஆக, எனக்குத் தெரிந்த தெல்லாம் ‘வெத்திலை சீவல்தான்’!
கிருத்திகா, சென்னை-15.
குரங்கு வாங்கித்தான் தீர வேண்டு மென்றால் எத்தனை குரங்கு வாங்கு வீர்கள், ஏன்?
இருக்கிற ஒரு ‘மனக் குரங்கு’ போதாதா? அப்படியும் வாங்கித்தான் ஆகவேண்டுமென்றால் ‘மருந்து சாப் பிடும்போது’ மறக்காமல் வாங்குவேன்!
சி.மணி, பாபநாசம்.
வாதம், விதண்டாவாதம் விளக்கம் ப்ளீஸ்?
வக்கீல் செய்வது வாதம். வக்கற்றவர் கள் செய்வது விதண்டா வாதம். வாதத்துக்குத் தீர்ப்பு உண்டு. விதண்டா வாதத்துக்கு ஈர்ப்பு உண்டு!
கி.பாலா, தஞ்சாவூர்.
பரீட்சையில் சைபர் வாங்கினால் அதுதான் சைபர் கிரைமா சார்?
நான் பேபி கிளாஸ் படிக்கும்போது, ‘பாபா ப்ளாக் ஷீப்’ ‘டுவின்கிள் டுவின்கிள் லிட்டில் ஸ்டார்’சொல்லமுடியாமல் டீச்சரிடம் சைபர் வாங்கியிருக்கிறேன். அது ‘சைபர் ரைம்!’
சாருமதி, ஸ்ரீரங்கம்
எறும்புக்கு சர்க்கரை நோய் வந்தால்?
சர்க்கரைக்குத்தான் எறும்பு வருமே ஒழிய, எறும்புக்கு சர்க்கரை வராது. பிறவி யிலேயே எறும்பு
‘Ant’டி டயாபடீஸ்!
சந்திரன், எடப்பாடி
எட்டப்பன்கள் இப்போதும் வாழ் கிறார்கள்தானே?
வாழவில்லை. வாழவைத்துக் கொண்டிருக்கிறார். குருவாயூரில் எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ண குட்டப்பன் (குருவாயூரப்பன்).



நன்றி  - த  இந்து

0 comments: