Sunday, March 08, 2015

பெண் இயக்குநர்களை இங்கு வளர விடுவதில்லை: நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி

  • 'மூணே மூணு வார்த்தை' படத்தில் எஸ்.பி.பி மற்றும் லட்சுமி
    'மூணே மூணு வார்த்தை' படத்தில் எஸ்.பி.பி மற்றும் லட்சுமி
  • 'மூணே மூணு வார்த்தை' படத்தில் எஸ்.பி.பி மற்றும் லட்சுமி
    'மூணே மூணு வார்த்தை' படத்தில் எஸ்.பி.பி மற்றும் லட்சுமி
“உழைக்கும் பெண்களின் உரிமைக்குரலில் உருவாக்கப் பட்டதுதான் மகளிர் தினம். ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு ஒரு நாள்கூட ஓய்வு இல்லை. தினமும் வீட்டில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது போதாதென்று பாலியல் வன்கொடுமைகள், குடித்து விட்டு வந்து மனைவியை அடிப்பது என பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இங்கு தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. என்றைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் சுதந்திரமாகவும், கருத்துரிமையோடும் வலம் வருகிறார்களோ அன்றைக்குதான் நம் நாட்டில் உண்மையான மகளிர் தினம் மலரும்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார் நடிகை லட்சுமி.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான அவரை மகளிர் தின சிறப்பு பேட்டிக்காக சந்தித்தபோதுதான் இப்படி பொங்கி எழுந்தார். அவருடன் மேலும் பேசியதிலிருந்து:
‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் பாட்டி யாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
நிஜத்தில் பாட்டியாகி விட்டேன். பிறகு பாட்டியாக நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. மேலும் நீண்ட காலத்துக்கு முன்பே ‘ஜீன்ஸ்’ படத்தில் நான் பாட்டியாக நடித்து விட்டேனே! நானும் எஸ்பிபியும் இப்படத்தில் நாயகனுக்கு அம்மா, அப்பாவாக நடிப்பதாக இருந்தது. 25 வயது பிள்ளைக்கு அம்மா, அப்பா என்றால் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்ததால் தாத்தா பாட்டியாக மாறிவிட்டோம். ஏற்கனவே நானும், எஸ்பிபியும் நடித்த ‘மிதுனம்’ தெலுங்கு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் நாங்கள் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை.
நிஜவாழ்க்கையில் ஒரு பாட்டியாக உங்கள் வாழ்க்கை எப்படி போகிறது?
சந்தோஷமாக இருக்கிறது. ஆண் களுக்கு எப்போதும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் கிடைக்கும். ஆனால், பெண்களுக்கு அப்படியல்ல. அவர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதையெல்லாம் உடைத்துவிட்டு வருவது கஷ்டம். பல ஆண்டுகளாக இப்படி உழைக்கும் பெண்கள் ஒரு கட்டத்தில் பொறுப்பு களை தவிர்க்க வேண்டும். பேரன் பேத்திகளை கவனிக்க கொஞ்ச நேரம் செலவழிக்கலாம். அதே நேரத்தில் அடுத்த தலைமுறையையும் நம் கையில் இழுத்துப்போட்டு கஷ்டப்படக் கூடாது என்பது என் கருத்து.
நீங்கள் தேசிய விருது பெற்ற நடிகை. ஆனால் தற்போது தமிழ் நடிகைகளுக்கு தேசிய விருது கிடைப்பது குறைந்து விட்டதே?
நடிகைகளின் தொப்புளில் பம்பரம் விட்டுக்கொண்டு இருந்தால், அவர் களுக்கு எங்கிருந்து தேசிய விருது கிடைக்கும். தமிழ் சினிமாவில் அழகுப் பதுமைகளாக மட்டுமே நாயகியைக் காட்டுகிறார்கள். சமீபத்தில் ‘அரண் மனை’ படம் பார்த்தேன். ஹன்சிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் கதையில் அவர் நடிக்க இடம் இல்லையே. லுங்கியை வாயில் கவ்விக் கொண்டு திரியும் நாயகர்களின் பின்னால் செல்லும் நாயகிகளாகவே பெண்களை கதையில் சித்தரிக்கிறார்கள். குஷ்பு, ராதிகா எல்லாம் எவ்வளவு திறமையான நடிகைகள்? அவர்களுக்கே தேசிய விருது கிடைக்கவில்லையே.
தமிழில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு குறைந்துவிட்டதை ஒரு பெண் இயக்குநராக எப்படி பார்க்கிறீர்கள்?
இப்போதுள்ள பெண் இயக்குநர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால், ஆண் வர்க்கம் இங்கு பெண் இயக்குநர்களை வளரவிடுவது இல்லை என்பது என் கருத்து.
இவ்வளவு தைரியமாக பேசும் நீங்கள் ஏன் அரசியலில் இறங்கக் கூடாது?
எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்கிற குணம் என்னு டையது. நியாயமில்லை என்றால் உடனே சொல்லிவிடுவேன்.
ஆனால், அரசியலில் தைரியமாக பேச முடியாது. மனசாட்சியை கழற்றிவைக்க வேண்டும். அது எனக்கு சரிப்பட்டு வராது.
பெண்கள் இன்னும் எந்த விஷயத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இப்போது பெண்கள் தைரியமாக இல்லை என்று யார் சொன்னது? முன்பை விட பெண்கள் இப்போது மிகவும் தைரியமாக இருக்கிறார்கள். பெண்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பே திருமணம் தானா என்பதை யோசிக்க வேண்டும். இப்போது நிறைய ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண்கள் கிடைக்க வில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையை முடிவு பண்ணக் கூடிய உரிமை யும், தைரியமும் பெண்களுக்கு வேண்டும்.


நன்றி  - த இந்து

0 comments: