Wednesday, September 11, 2013

SHUDDH DESI ROMANCE- சினிமா விமர்சனம் 34 +

 
தினமலர் விமர்சனம்

‘கை போ சே’ படத்தில் தனது மெச்சூர்டு நடிப்பால் அசத்திய நாயகன்  சுஷாஷிந்த் சிங் ராஜ்புத், இஷக்ஸாதே திரைப்படத்தில் தன் நடிப்பிற்கென பல விருதுகளைக் குவித்த பரிணீதி சோப்ரா இருவரின் கூட்டணியில்  வெளிவந்துள்ள படம்.

பாலிவுட் பிரபலமான ரொமான்ஸ் படங்கள் என்றாலே ராஜேஷ் கன்னா – ஆராதனா, ரிஷி கபூர் – பாபி, அமிதாப்பச்சன் – அபிமான், அனில் கபூர் 1942 ஏ லவ்ஸ்டோரி, ஷாரூக் கான் – தில்வாலே துல்ஹானியா லேஜாயேங்கே இதைப் போன்ற படங்கள் உடனே நினைவில் தோன்றும். மாடர்ன் கெட்டப்பில் வரும் கதாநாயகனின் அழகிலும், தோரணையிலும் மயங்கி விழும் கதாநாயகியை காலகாலமாகத்  திரை உலகம் சித்தரித்து வந்தது. கதையைக் காட்டிலும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அதிகம் அளிக்கப்பட்டது.
 இப்போது இதைப் போன்ற ரொமான்ஸை மெலோ டிராமாவாக, கட்டுக்கதையாக ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். யஷ் சோப்ரா இயக்கி, ஷாரூக்கான் - கத்ரீனா கைஃப் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த ‘ஜப்தக் ஹை ஜான்’ படம் ரசிகர்களிடம் பெற்ற குறைவான வரவேற்பு இதற்கொரு சரியான உதாரணம்.


இன்றைய நாட்களில் சில இள வட்டங்கள் வாழ விரும்புவது லிவ்விங் டுகேதர் ரிலேஷன்ஷிப் அதாவது திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது. இந்த லிவ்விங் டுகேதர் ரிலேஷன்ஷிப் பற்றிய கதைதான் ஷுத்த தேசி ரொமான்ஸ்.  இப்படத்தைப் பொருத்த ஒரு நல்ல விஷயம் இது போன்ற வாழ்க்கை சரி என்றோ, தவறு என்றோ விவாதம் செய்யப்படவில்லை..

ஜெய்பூரில் டூரிஸ்ட் கைடாக நாயகன் ஷுஷாந்த் குமார். காதலில் விழுந்து தான் மணம் முடிக்கணும்னு நினைக்கிற நம்ம ஹீரோவுக்கு காதலே அமையாம போகுது. தன் கல்யாணத்துக்காக புறப்படும் ஹீரோ பஸ்ஸில் அருகே அமரும் பரிணீதி சோப்ராவுடன் பேசத் தொடங்குகிறார். தொடரும் உரையாடல், இரவில் இருவருக்கும் இருக்கம் வரவழைத்து, லிப்லாக் வரை போகிறது.  
 தனக்கும் வாணிகபூருக்கும் நடக்கவிருந்த திருமணத்தில் மாலை மாற்றும் வேளையில் திருமண வீட்டை விட்டு ஹீரோ டாய்லெட் வழியாகத் தப்பித்து ஓடுகிறார். பஸ்ஸில்  முத்தம் கொடுத்த பரிணீதியை ஜெய்பூரில் பிறகு சுஷாந்த் சந்திக்க இருவரும் காதல் கொண்டு கலவியும் கொள்கின்றனர், ஒரே வீட்டில் வாழும் இவ்விருவர்கள், தங்கள் உறவை அங்கீகரிக்க மணம் முடிக்க எண்ணுகின்றனர். இப்போது தான் திரைக்கதையில் ட்விஸ்ட்!! 


திருமணம் செய்து பொருப்பேற்க அஞ்சும் பரிணீதி மண்டபத்தை விட்டு ஓடுகிறார். தன்னை விட்டு ஒரு பெண் ஓடியதை எண்ணி நாயகன் துவண்டு போகிறார். ஜெய்பூர்க்கு வரும் வாணிகபூர் சுஷாந்த்தைக் காண, இருவர்களும் நண்பர்களாகி காதலராகின்றனர். சுஷாந்த்தும் வாணிகபூரும் இணையும் இவ்வேளையில் பரிணீதி என்ட்ரீ கொடுக்கிறார். இதன் பின் பாமா ருக்மணி கதை தான். 

‘பேண்டு பஜா பாரத்’ இயக்கிய மணிஷ் ஷர்மாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் ரசிக்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. முதலாவதாக நேர்பட உரைக்கின்ற திரைக்கதை. தனியே வாழும், சுய சிந்தனையில் செயல்படும பெண்ணாக பரிணீதி சோப்ரா. இவர் சிகரெட் பிடிப்பது போன்ற பல காட்சிகள் உண்டு.  இதைப் போன்ற போல்டு உமனாக நாயகி சித்தரிக்கப்படும் போது அப்பெண்கள் மிகுந்த கோபப்படக் கூடியவர்களாகவும் எடுத்தெரியும் குணமுள்ளவர்களாகத் தான் சித்தரிக்கப்பட்டனர். ஆனால் இப்படத்தில் மாடர்னிஸம் சரியான அளவில் அமையப்பட்டிருந்தது.
.
ஓவர் எமோஷனலான வசனங்கள் கிடையாது பிண்ணணி இசை கூட கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அழகாக சித்தரித்துள்ளது. இரண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய, தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் இன்றைய மங்கைகளின் கதாபாத்திரம் படத்திற்கு சரியான பக்கபலம்.  கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் டாப் டக்கர், வெள்ளந்தித்தனமாக இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் பல பெண்களின் இதயத்தை தூக்கி சாப்பிடுகிறது. ‘இஷக்ஸாதே’யில் மிரட்டிய பரிணீதி சோப்ரா இப்படத்தில் மாடர்னாக, அமைதியாக அசத்தியிருக்கிறார். 
 


ரிஷிகபூர் வரும் இடங்கள் நகைச்சுவை கலந்த சிந்தனை. எதிர்காலத்தில் திருமணம் என்ற சடங்கே நடக்குமா?? என்ற கேள்வியை சொல்லாமல் இப்படம் எழுப்புகிறது.
மனு ஆனந்தின் ஒளிப்பதிவு ஜெய்பூர் நகரத்தை மிக அழகாக படமாக்கியுள்ளது. ரிஷிகபூரின் கதாபாத்திரம் ஜெய்பூரில் உள்ள உணவுப்பண்டங்களை டேஸ்ட் செய்ய டெம்ப்ட் செய்கிறது.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெண்களே தன் காதலன் பற்றி நினைப்பவற்றை இப்படத்தில் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.  ஒயின் ஷாப்பில் தன் காதலியை வசமாரியாக கெட்ட வார்த்தையில் கழுவி ஊத்தும் கதாநாயகனைப் பார்த்து புளித்த கண்களுக்கு இப்படம் புதுமையாக இருக்கும். சில்ஹவுட்டில் வரும் இதழ் முத்தக் காட்சிகள் ரசனையுடன் படமாக்கப்பட்டிருக்கு. இயக்குனர் பிரென்சு ரோமென்ஸ் படங்களின் ரசிகராக இருப்பார் போல. லிவ்விங் டுகேதர் ரிலேஷன்ஷிப்பில் சுதந்திரமாக வாழும் மனிதர்கள் கல்யாணம் வருகையில் பொறுப்பேற்க பயப்படும் விஷயத்தை இப்படம் தெளிவாக சித்தரித்துள்ளது.

மொத்தத்தில்: ஷுத்த தேஸி ரொமான்ஸ் வளைந்து கொடுக்காத அப்பழுக்கற்ற காதல் கதை.  ஆஹா ஓஹோவெல்லாம் இல்லை.  கண்டிப்பாக நன்று திருப்திகரமானதொன்று.
 நன்றி  -தினமலர்

0 comments: