Tuesday, April 02, 2013

வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி? 
நீரை.மகேந்திரன்,படம்: தே. தீட்ஷித்.
மக்களுக்கு வாடகை வீடுதான் நிரந்தரம் என்றாகிவிட்ட நிலையில்,  பிறப்பு முதல் திருமணம், ஓய்வுக்காலம் என ஆயுட்காலம் வரை வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், தேவைக்கேற்ற வீடு, சரியான வாடகை, நேர்மையான வீட்டு உரிமையாளர், வசதியான ஏரியா என்பது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை என்பதுதான் வாடகை வீட்டில் உள்ள நிலைமை.


ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை வீடு மாறிய நண்பர், தற்போது அந்த வீடு சரியில்லை, வேறு வீடு பார்க்கவேண்டும் என அலைந்துகொண்டிருக்கிறார். என்ன ஏது என்று விசாரித்தபோது ''அவசர அவசரமாக வந்ததால் அந்த ஏரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் வந்துவிட்டேன். ஏரியாவில் கழிவு நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது. அதுவும் வீட்டுக்கு அருகிலேயே தேங்குவதால் நாற்றமும் தாங்க முடியவில்லை. அந்த வீட்டுக்குப் போனபோது இந்தச் சிக்கல் இல்லை. தற்போது இதை சகித்துக்கொண்டு இருப்பதைவிட ஏரியா மாறலாம் என இருக்கிறேன்'' என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.  


பழைய அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் மழைக்காலத்தில் வீட்டிற்குள் நீர் கசிவு இருக்கிறது என்று வீடு மாறவேண்டிய நிலை வரலாம். இப்படி வாடகை வீட்டினால் எழும் சிக்கல்கள் ஏராளம் இருக்கிறது. இன்னொருபுறம் சின்ன இடம் கிடைத்தாலும்  நான்கு சுவர்களை எழுப்பி வாடகைக்கு விடுவதும் நடக்கிறது. இதுபோன்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க வீடு பார்க்கத் திட்டமிடும்போதே ஆராய்ந்து அலசி பார்த்துவிட்டால் பிறகு மீண்டும் மீண்டும் வீடு தேடி அலையவேண்டிய வேலையிருக்காது. ''பொதுவாக வாடகை வீடு தேடுகிறோம் என்றால், எந்த தேவைக்காக என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்'' என்கிறார் ரீமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் முரளி.  வீடு பார்க்கும்போதே இந்தத் தெளிவு இருந்தால் நல்ல வீடாகப் பார்க்க முடியும் என்றவர், அதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்கிற செக் லிஸ்ட் கொடுத்தார்.


ஏரியா!
வீடு தேடுவது என்று முடிவாகிவிட்டால் எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் முக்கியம். அதாவது, உங்களது தேவையைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும். அலுவலகத் திற்கு பக்கமாகவோ, குழந்தைகள் பள்ளிக்கு அருகாமையிலோ என திட்டமிடலாம். அதாவது, போக்குவரத்துக்கு ஆகும் செலவை, அலுவலகத்துக்கு அருகில் வீடு பார்த்தால் அதற்கு ஈடாக வாடகைக்குக் கொடுக்கலாம்.


மேலும், ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் வீடு பார்க்கலாம் என முடிவு செய்துவிட்டால், அந்த ஏரியாவில் பஸ், ரயில் மற்றும் வேறு பொது போக்குவரத்து வசதிகள் எப்படி உள்ளன என தெரிந்துகொள்ளவேண்டும். உங்களிடம் போக்குவரத்திற்குரிய வாகனங்கள் இருந்தாலும் பொதுபோக்குவரத்து இருக்கும் ஏரியா என்றால் வசதியானது. மேலும், அலுவலக வாகனம், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்லும் ஏரியா என்றால் கூடுதல் வசதிதான்.


இடம் அமைந்துள்ள பகுதி!

ஓர் ஏரியாவில் எந்தப் பகுதியில் வீடு பார்க்கப் போகிறோம் என்பதுவும் முக்கியமானது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ளதா, கழிவுநீர் தேங்கும் இடங்களா என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் கடைகள், மருத்துவமனை, வழிபாட்டுதலங்கள், பள்ளிக்கூடம் போன்றவை இருக்கும் இடமாக இருந்தால் கூடுதல் வசதியாக இருக்கும்.


குறிப்பிட்ட பகுதி நமக்குத் தோதாக இருக்கும் என்று திட்டமிட்டாலும், அந்த ஏரியாவில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. ஒதுக்குப்புறமான பகுதியா? மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியா? இரவில் தாமதமாகத் திரும்பினால் ரிஸ்க் இருக்குமா? என பார்ப்பது முக்கியம். இதுபோன்ற புற விஷயங்களைக் கவனத்தில்கொண்டு வீடு தேடவேண்டும்

.
வீட்டு உரிமையாளர்!
வாடகைக்குச் செல்லும் வீட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதில் கவனம்வேண்டும். வீடு தொடர்பான ஆவணங்களை வாங்கிப் பார்ப்பதில் தப்பில்லை. ஏற்கெனவே வாடகைக்கு இருக்கும் நபர் நமக்கு உள்வாடகை விட வாய்ப்பு அதிகம். எனவே, வாடகை போடும்போதே வீட்டின் உண்மை குறித்த ஆவணங்களையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.


வீடு அமைப்பு!
சில வீடுகளில் ஃபேன், ஏ/சி, சோபா மற்றும் அலமாரிகளோடு அப்படியே வாடகைக்குக் கிடைக்கும். அதுபோன்ற நிலைமைகளில் அந்தப் பொருட்கள் நல்ல நிலைமைகளில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதும், அதற்கு தனியாக எவ்வளவு வாடகை கணக்கிடப்படுகிறது என்பதிலும் தெளிவுவேண்டும். வீட்டு வாடகையோடு ஒப்பிட்டால் அதிகபட்சமாக 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இதற்கு வாடகை இருந்தால் அதிகம்தான். மேலும், பொருட்களுக்கு விலையில் ஏழு வருடத்திற்கு தேய்மானம் கணக்கிட்டு, அதிலிருந்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு வாடகை வசூலித்தால் அந்தப் பொருட்கள் தேவையில்லை என்று தவிர்த்து விடலாம்.



வாடகை!
புதிய வீடா அல்லது பழைய வீடா என்பதைப் பொறுத்து வாடகை வித்தியாசம் இருக்கும். வீட்டின் வசதிக்கு ஏற்ப வாடகை சொன்னாலும், அந்தப் பகுதியில் நிலவும் வாடகை நிலவரங்களோடு ஒத்துப்போவதாக இருக்கவேண்டும். பொதுவாக, வீட்டின் இன்றைய மதிப்பில் 2.5 - 3 சதவிகிதம் ஆண்டு  வாடகை இருந்தால் சரியான வாடகை என்று சொல்லலாம். பழைய வீட்டிற்கும், புது வீட்டிற்குமான வாடகை வித்தியாசம் 30 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் வாடகை தொகை அதிகம்தான். பழைய வீடு எனில், எத்தனை வருடம் பழைமையானது, மழைக்காலங்களில் நீர்க்கசிவு இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். லீசுக்கு எடுக்கும்போது, அந்தத் தொகைக்கு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வட்டிக் கணக்கிட்டால் எவ்வளவு வருமோ அந்தத் தொகைக்குள் தகுதியான வீடாக இருக்க வேண்டும்.



இதர வசதிகள்!
மின்சாரம் / குடிநீர் போன்ற இதர வசதிகளையும் பார்ப்பது அவசியம். வாடகை வீட்டிற்கு என்று தனி மின் மீட்டர் இருக்கவேண்டும். மின் வாரியம் குறிப்பிடும் கட்டணத்தை, நாமே நேரடியாகச் செலுத்துவதற்கு ஏற்ப மின் கட்டண அட்டை நம்மிடம் கொடுத்துவிட வேண்டும். மேலும், தனி குடிநீர் தொட்டியா? அல்லது இணைப்பா,  கேபிள் இணைப்பு போன்றவை உள்ளதா, அதற்கான டெபாசிட்கள் ஏதேனும் கட்டவேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.  


ஒப்பந்தம்!
வாடகைக்குச் செல்வதாக முடிவெடுத்து விட்டால், வாடகை, முன்பணம், மாதத்தில் எந்த தேதியில் வாடகை கொடுக்கப்படும் என்கிற விவரம், அல்லது லீசுக்குக் கொடுக்கப்படும் தொகை, வாடகைதாரருக்கு உள்ள உரிமைகள், வீட்டை காலி செய்வதற்குரிய நடைமுறை மற்றும் ஒப்பந்தம் எவ்வளவு நாட்களுக்குச் செல்லு படியாகும் என்கிற விவரங்களைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்.
என்னதான் பார்த்து பார்த்து வாடகைவீடு பிடித்தாலும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள், சுற்றுச்சூழல் என எல்லாமே ஒத்துப்போனால்தான் வாடகை வீட்டின் வசதிகளை அனுபவிக்க முடியும். இல்லையென்றால், வாடகை வீடு தேடுவதே பெரிய பணிசுமையாகிவிடும்.



பத்தாண்டுகள் ஒரே வீட்டில்!
சரஸ்வதி,
அண்ணா நகர், திருச்சி.


'' நாங்கள் கடந்த 12 வருடமாக ஒரே வீட்டில்தான் தங்கியுள்ளோம். ஆரம்பத்தில் 300 ரூபாய் வாடகைக் கொடுத்தேன். என் பணி காரணமாகவும், எனது குழந்தையின் கல்விக்காகவும் இந்தப் பகுதியைத் தேர்வு செய்தேன். தற்போது 4,500 ரூபாய் வாடகையைச் செலுத்தி வருகிறேன். சொந்த வீடு வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. அதனால்தான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். வாடகையை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறேன். கரன்ட் பில்லை தனியாகக் கட்டி விடுகிறேன். பராமரிப்பு வேலைகளை நாங்களே செய்து விடுகிறோம். உரிமையாளர் சிக்கல் இல்லை, அக்கம்பக்கம் பழகிவிட்டோம், ஏரியாவும் சிக்கல் இல்லை என்பதால் வீடு மாறவேண்டிய வேலையே இல்லை.''

thanx - vikatan

0 comments: