Saturday, April 27, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4 


சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அபாயம் விளைவிக்கும் ஆபத்து கொண்ட தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது என்கிற விதிமுறையை குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விட்டு மத்திய, மாநில அரசுகள் ஆலை அமைக்க அனுமதி கொடுத்தன. மக்களின் கடுமையான எதிர்ப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. ஆலையை தடை செய்யக் கோரி போராட்டங்கள் வலுத்தபோதிலும், ஆலை செயல்பட தொடங்கியது.

அரசாங்கம், அதிகாரிகள், சில சமூக தலைவர்கள், அரசியல்வாதிகள் என முக்கியமான அங்கத்தினர் அனைவரும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக களம் இறங்கியதால் ஏழைகளில் கூக்குரல் எடுபடவில்லை. இதனால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997 நவம்பர் 7-ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், "ஸ்டெர்லைட் நிர்வாகம் விதிமுறையை மீறி செய்லபட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கு இந்த ஆலையால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறி விட்டனர்.ஆலையில் விபத்து ஏற்பட்டால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படாமல் அவசரமாக அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு இருக்கும் மன்னார் வளைகுடாவுக்கு வெகுஅருகில் இருக்கும் இந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதே அடிப்படையான தவறு. மத்துய சுற்றுச்சூழல் அமைச்சகமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வர்ரியமும் விதிமுறைகளை மீறி இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்து இருக்கின்றன. அதனால் இந்த ஆலையை தடை செய்ய வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


விபத்தும் உயிரிழப்பும்

இதனிடையே,ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தொடங்கியதில் இருந்தே தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சத்தில் வாழ்வதற்கு பழகி விட்டனர்.1997-ல் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் திடீரென ஆலையில் ஏழு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.அந்த சமயத்தில் அந்த ப்குதியில் பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடி நூலிழையில் உயிரை தக்க வைத்துக் கொண்டனர்.

சில மாதங்களுக்கு பின்னர் கந்தக குழாய் வெடித்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் உடல் வெந்து உயிரிழந்தார்.அதே வருடம் ஜூலை 5-ம் தேதி ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேறியது. இதில் அருகில் உள்ள பூ கம்பெனியில் வேலை செய்த 165 பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக இதில் தலையிட்ட அதிகாரிகள் மறுநாளே ஆய்வு செய்து அங்கு நடந்த விபத்து காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டனர்.38 நாட்களுக்கு பின்னர் ஆலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.ஆனால், அடுத்த மாதமே மற்றொரு விபத்து.அங்குள்ள செம்புக் கலவை உலை வெடித்து சிதறியதில் நெருப்பு ஜுவாலை பனை அளவுக்கு எரிந்தது.தூத்துக்குடி நகர மக்கள் இந்த விபத்தை கண்டு அஞ்சி நடுங்கினார்கள்.

இந்த விபத்தில் சிக்கிய பெருமாள், சங்கர் என்ற இரு தொழிலாளர்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்தனர். மூன்று பேர் பலத்த தீ காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தூத்துக்குடி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.இதனை சமாளிக்க நினைத்த மாவட்ட நிர்வாகம்,உடனடியாக ஆலைக்கு சென்று சோதனை நடத்தியது. அத்துடன் மறுநாளில் ஆலையை மூடவும் உத்தரவிட்டது.இரண்டு மாதத்துக்குள் மக்களிடன் கோபம் சற்று மறைய தொடங்கியதும் மீண்டும் ஆலை திறக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியது.

1998 நவம்பர் மாதத்தில் கசல்ஃப்யூரிக் அமிலம் செல்லும் குழாய் வெடித்து சிதறியது. அப்போது அந்த பகுதியை பார்வையிட்டுக் கொண்டு இருந்த 5 பொறியாளர்களும் ஒரு கூலித்தொழிலாளியும் அமிலம் தெறித்ததில் உடல் முழுவதும் வெந்து போனார்கள். அடுத்த சில நாட்களிலேயே ஆயில் டேங்க் வெடித்து தீப்பற்றியதால் தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்கள். 1999 மார்ச் 3-ம் தேதி மீண்டும் ஆலையில் இருந்து நச்சுப்புகை அதிகமாக வெளியேறியது.இதனால் ஆலைக்கு அருகில் உள்ள ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றிய ஊழியர்கள் 11 பேர் மயக்கம் அடைந்தனர்.உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தனர்.

அனுமதி இல்லாமலே விரிவாக்கம்

ஆலையில் இருந்து வெளியேறும் புகையில் நச்சுத்தன்மை கொண்ட அமிலங்கள் கலந்து இருக்கின்றன.இந்த புகை காற்றில் கலந்து விட்டல் அதனை கண்டு பிடிக்க முடியாது.ஆனால், அதனை சுவாசிப்பவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்.இந்த புகையானது காற்றில் அளவுக்கு அதிகமாக கலந்து விட்டால், அதனை சுவாசிக்கும் நபர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ஆனால், ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் அளவு அடிக்கடி அதிகரித்து வந்ததால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நெஞ்சக நோய்கள்,தலை சுற்றல்,வாந்தி, கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகளை சுட்டிக் காட்டி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய கொடூரமான பக்க விளைவுகளை கொண்டிருக்கும் ஆலையின் செயல்பாடு லாபத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது.இந்த ஆலை தொடங்கப்பட்டபோது, காப்பர் உருக்கு ஆலையில் இருந்து வருடத்துக்கு 70,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2005-ல் இந்த ஆலை நிர்வாகம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்,"ஆலையின் திறனை அதிகரித்து 3 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.இது தவிர காப்பர் கம்பிகள உற்பத்திக்காக புதிய பிரிவு தொடங்கபப்ட்டு இருக்கிறது" என தெரிவித்து உள்ளனர்.

ஆலைகளை பொறுத்தவரை, அதன் உற்பத்தியை அதிகரிக்கும் போது அதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டியது அவசியம்.அதே போல அந்த ஆலைக்கு அதன் துணை அமைப்புக்கான பிரிவுகளை புதிதாக நிர்மாணிக்கவும் அனுமதி அவசியம். ஆனால் இந்த அடிப்படை விதிகள் கூட ஆலை நிர்வாகத்தால் கடைபிடிக்கப்படவில்லை என்கிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 5


த்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி வந்தது.ஆலையில் நடந்த விபத்துக்களுக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பல முறை அபராதம் கட்டிய சம்பவங்களும் நடந்தன.1997-ல் மே 3 ம் தேதி  65,000 ரூபாயும், ஆகஸ்ட் 30-ல் 3,60,000 ரூபாயும் அபராதமாக கட்டியது.அடுத்த ஆண்டில் ஒரு முறை 90,000 ரூபாயும்,மற்றொரு முறை நான்கரை லட்சமும் அபராதம் கட்டியது.
ஆனால், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில்,இந்தத் தொகை வெகு சொற்பம் என்பதால் ஆலை நிர்வாகம் இதற்காக பெரிதாக அலட்டிக் கொளளவில்லை. அதே போல விபத்து உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நீதிமன்ற உத்தரவு காரணமாகவும் இதற்கு முன்பும் பலமுறை ஆலை மூடப்பட்ட வரலாறு இருக்கிறது.ஆனால், அதனை சமாளிக்கும் வித்தையை ஆலை நிர்வாகம் அறிந்த்து வைத்து இருந்ததால் அந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வழக்கம் போல மீண்டும் உற்பத்தியை தொடங்கியது.

ஆலை தொடங்கப்பட்ட ஒராண்டு வரையிலும் உள்ளே நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்ததே இல்லை.ஓராண்டுக்கு பின்னர் ஓரளவுக்கு தகவல்கள் வெளியே கசிய தொடங்கின.அதன்படி 1996-ல் இருந்து 2004 வரை மட்டும் 13 பேர் உயிரிழந்ததாகவும் 136 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அதன் பின்னர் அமில லாரியில் ஏறிய ஊழியர் பலி,அமில டேங்கில் ஏற்பட்ட விபத்து என பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளியாகி உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வந்தாலும், ஆலை நிர்வாகத்தின் சார்பில் வாய் திறப்பதே கிடையாது.

சுற்றுச்சூழல் துறையின் கண்டனம்

வனத்துறையையும் சுற்றுச்சூழல் துறையையும் இந்த ஆலை நிர்வாகம் மிகவும் மோசமாக ஏமாற்றியிருக்கிறது.வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் அமில கழிவுகளை கொட்டி வைத்து இருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் விதிமுறைக்கு புறம்பாக இருந்ததால் சுற்றுச்சூழல் அமைச்சகம், ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது.உண்மைக்கு மாறான தகவல்களை கொடுத்து ஆலை செயல்பட்டு வருவதை அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் ஓப்பனாக கண்டித்தார்.

சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறும்போது வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை தெரிவிக்காதது,ஓராண்டுக்கு ஒரு மில்லியன் டன் அலுமினிய சுத்திகரிப்புக்கு அனுமதியை பெற்றுக்கொண்டு,எந்த ஒப்புதலும் பெறாமல் அதனை ஆறு மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்தது சட்ட விரோதம் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.

இதனால் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது? எனக் கேட்டு சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதன் பின்னர் தனிப்பட்ட முறையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கிய ஜெயராம் ரமேஷ், அந்த துறையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.அது தற்செயலானதுதானா அல்லது அதன் பின்னணியில் வேதாந்தா நிறுவனம் இருந்ததா என்பதையே சிலர் கேள்வியாக எழுப்புகிறார்கள்.

இது தவிர, இந்த நிறுவனத்துக்காக மூல கனிமங்கள் வெட்டி எடுக்கபப்டும் 14 சுரங்கங்களில், பத்து சுரங்கங்கள் சட்ட விரோதமாக தோண்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

வாதாடிய வைகோ
ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து நீண்ட நெடுங்காலமாக சட்ட போராட்டம் நடந்து இருக்கிறது. தற்போதும் அந்த சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 1996 நவம்பரில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ம.தி.மு.க. சார்பில் வைகோ இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில்,"காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்த ஆலையால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.இந்த பாதிப்புகளையும் மக்களின் நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைக்கு 1995-ல் அனுமதி கொடுத்து விட்டன.அதனால் இந்த பாதிப்புகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.இந்த வழக்கை இழுத்து அடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் வைராக்கியத்துடன் களம் இறங்கிய வைகோ, நீதிமன்ற நடவடிக்கைகளில் தானே ஆஜராகி வாதாடினார்.அவரது வாதத்திறமையை கண்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் அவரை வளைக்க எத்தனையோ திட்டங்களை தீட்டியது.ஆனால் எதுவுமே எடுபடவில்லை.

அதிர்ச்சி அளித்த 'நீரி' அறிக்கை

இந்த நிலையில்,1998 அக்டோபர் மாதத்தில் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதன்படி, நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்கிற 'நீரி' (National Environmental Engineering Research Institute ) அமைப்பு இந்த ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.அதன்படி அதிகாரிகள் குழுவினர் ஆலைக்குள் சென்று பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.வழக்கை தாக்கல் செய்திருந்த வைகோ உள்ளிட்டோரும் அந்த ஆய்வின் போது அக்குழுவுடன் பங்கேற்றனர்.

சுமார் இரண்டு மாத காலம் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆலை வளாகத்துக்குள் அபாயகரமான நச்சுக் கழிவுகள்,எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படாமல் மலைபோல கொட்டப்பட்டு கிடந்ததை குழுவினர் பார்த்தனர்.சுற்றுப்புற கிராமங்களுக்கு அவர்கள் சென்ற போது அங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் விவசாயத்தும் மக்கள் திண்டாடி வருவதை கண்டு அதிர்ந்தனர்.இது தவிர காற்றில் பெரும் அளவுக்கு சல்ப்யூரிக் அமிலத்தின் நச்சுத் தன்மை பரவி இருந்ததும் தெரிய வந்தது.
அந்த குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,"ஆலை வளாகத்திலும் அதனை சுற்றிலும் உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது அதில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.அதனை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது" என தெரிவித்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம்,  உடனடியாக ஆலையை மூட உத்தரவிட்டது.ஆனால், 'நீரி' அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று ஆலையில் மாற்றங்களை செய்திருப்பதாக ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு பின்னர் இந்த உத்தரவை மாற்றிக் கொண்டு மறு உத்தரவு பிறப்பித்தது.அதன்படி,"ஆலை இரண்டு மாதங்கள் இயங்கும்.அதற்குள்ளாக 'நீரி' அமைப்பு மறுபடியும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.இதனால் ஆலை மறுபடியும் இயங்க தொடங்கியது.

இரண்டாவது அறிக்கை என்ன சொன்னது..? நாளை பார்க்கலாம்...

நன்றி - விகடன்

டிஸ்கி -

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3
http://www.adrasaka.com/2013/04/1-2-3.html

1 comments:

Unknown said...

மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இப்படிப்பட்ட ஆலைகள் சாபம்தான் !