Friday, December 07, 2012

அன்புள்ள முதல்வருக்கு கூடங்குளம் மக்கள் சார்பில் ஒரு கடிதம்



தமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்


பிப்ரவரி 25, 2012 13:32
அன்புள்ள அம்மா,

வணக்கம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து தாங்கள் நடத்திவரும் நல்லாட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்னையில் 2001,செப்டம்பர் மாதம் எங்களை அழைத்து, நேரில் சந்தித்து, எங்கள் கருத்துகளை கரிசனத்தோடு கேட்டு, எங்கள் மக்களின் அச்சங்கள்,பயங்களை அகற்றும்வரை, அணு மின்நிலைய வேலைகளை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி, உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் திருப்தி எனக்கும் எனது அரசுக்கும் முக்கியம் என்றும் உறுதியளித்தீர்கள். எங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சனநாயக முறையில் அறவழியில் பதிவுசெய்ய அனுமதித்தீர்கள்.இவற்றுக்கெல்லாம் நாங்கள் எங்கள் ஆழமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் திட்டமென்பதும், எங்கள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அணுசக்தி பிரச்சனையில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை நாடறியும். 2007 சூன் 26 அன்று அமெரிக்க அணுசக்தி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, இதை கடுமையாக எதிர்த்தீர்கள். அதேபோன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தையும் அது ஏற்புடையதல்ல என்று அறிவித்து தீர்க்கதரிசனத்தோடு அதை எதிர்த்தீர்கள். அணுசக்தியின் தீமைகள்,கடுமையான விளைவுகள் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள். இந்தப் பின்னணியில் தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எங்கள் போராட்டம் தொடங்கி, தங்களை நேரில் சந்தித்த பிறகு பல எதிர்வினைகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவை பற்றிய தன்னிலை விளக்கங்களை அளித்திட தயவுசெய்து என்னை என்னை அனுமதியுங்கள்.

1. 1980 களிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை பலர் தலைமையிலே நடத்திக் கொண்டு வருகிறோம். 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வரவிருந்த போது, மக்கள் போராட்டங்களால் அது கைவிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் நடந்த மாபெரும் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்து, ஆறு பேர் குண்டடிபட்டனர். தொடக்கத்திலிருந்து இன்றுவரை பல நூறு தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இவையனைத்தும் ஊடகங்களிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தங்களிடம் நான் நேரில் விளக்கியது போன்று, எங்கள் போராட்டத்திற்கும் திமுகவுக்கோ வேறு எந்தக் கட்சிக்குமோ எந்த தொடர்பும் கிடையாது. எனது தந்தையார் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து கொள்கைக்காக திமுகவில் இருந்தவர். அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்காக இயங்க ஆரம்பித்த பிறகு முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டவர். திமுக எம்பி கனிமொழி தனது பாராளுமன்றக் கன்னிப் பேச்சில் அணுசக்தியை ஆதரித்துப் பேசியபோது,. எங்கள் இயக்கம் அதைக் கண்டித்து அதை விமர்சித்து 'காலச்சுவடு' இதழிலே நான் கட்டுரை எழுதினேன். எனக்கோ, எங்கள் போராட்டக் குழு உறுப்பினர்களுக்கோ அரசியல் ஆசைகளோ, எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகள் மீது மோகமோ கடுகளவும் கிடையாது என்பதை தங்களுக்குத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

2. எங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டிலிருந்தோ, பன்னாட்டு, இந்திய தொண்டு நிறுவனங்களிலிருந்தோ, தனியார், கட்சிகளிடமிருந்தோ எந்தப் பணமோ வேறு உதவிகளோ வந்ததுமில்லை. இப்போது வரவுமில்லை. எந்த சாதி, மத நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. எங்கள் மீனவ மக்களும், விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழிலாளர்களும், பீடி சுற்றும் பெண்களும் தருகின்ற சிறிய நன்கொடைகளை வைத்து மிகச் சிக்கனமாக செலவு செய்து காந்திய வழியில் எளிமையாகப் போராடி வருகிறோம். பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் போக்குவரத்து செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். போராட்டங்களுக்கு வருபவர்களுக்கு வெறும் தண்ணீர் மட்டுமே நாங்கள் கொடுக்கிறோம். இது முழு உண்மை.

 3. நான் 1989 ஆகஸ்ட் முதல் 2001 வரை அமெரிக்காவில் எம்.ஏ மற்றும் பிஎச்டி பட்டப்படிப்புகள் படித்துவந்தேன். பின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக, ஆசிரியராகப் பணியாற்றினேன். எனது மனைவியும் நானும் அன்றும் இன்றும் என்றும் இந்தியக் குடிமக்களாகவே இருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அந்நாட்டு குடியுரிமையை இயற்கையாகவே பெற்றாலும் அவர்கள் தமிழ்மண்ணில் தமிழர்களாக இந்தியர்களாக வாழவேண்டுமென விரும்பியதால் எங்கள் 2 வயது, மூன்று மாதக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கின்ற எனக்கு அமெரிக்க அரசுடனோ அதன் நிறுவனங்களோடா எந்தவிதமான தொடர்போ கிடையாது. அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு வருகைதரு பேராசிரியாராக மட்டுமே போய் வருகிறேன்.

 4. போராடுகின்ற எங்கள் மக்களில் இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரோ, சாதியினரோ நடத்துகின்ற போராட்டமல்ல இது. தமிழ் மக்களாக எங்கள் வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரத்திற்காக நடத்துகின்ற போராட்டம். நாங்கள் எங்களைத் தமிழராக இந்தியராக மனிதர்களாக மட்டுமே பார்க்கிறோம்.

 5. கூடங்குளம் அணுமின்நிலையம், எங்கள் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல், சனநாயக மரபுகளுக்கு எதிராக எங்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கூட 23 ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மிகச்சிறிய அணுமின் நிலையங்களைப் போலல்லாமல் கூடங்குளம் அணு உலைகள் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்ற பூதாகரமானவை. ஒரு சிறிய அசம்பாவிதம் கூட பலத்த விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் கடினப்பாறைகள் போதுமான தடிமன் உடையவையாக இல்லை. இந்தப் பகுதியில் பல ஊர்களில் எரிமலைக் குழம்பு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்பகுதி பூமிக்குள் கார்ஸ்ட் குழிகள் என்னும் எபறும் வெற்றிடங்கள் இருக்கின்றன. எங்கள் பகுதி கடலுக்குள் பெரும் வண்டல் குவியங்கள் இருக்கின்றன. அவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டால் சுனாமி எழும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் நீரியல், நிலவியில், கடலியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான எதிர்தரப்பு வாதங்களை சற்றும் பொருட்படுத்தாது, எங்கள் பகுதிக்கு வந்த டாக்டர் அப்துல் கலாம், மத்திய அரசு நியமித்த டாக்டர் முத்து நாயகம் குழு போன்றோர் கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி வராது, அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது என்று வெறுமனே சொல்லிச் செல்கிறார்கள். அணுஉலை பாதுகாப்பு என்பது வெறும் கட்டங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்தது மட்டுமல்ல. மக்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அணு உலைகளின் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் பற்றி பேச மறுக்கிறார்கள். அணு உலை சாதாரணமாக இயங்கும்போதே அதிலிருந்து வெளிப்படும் "தினசரி வாடிக்கையான வெளிப்பாடுகள்" காற்றின் மூலமாகவும் நீரின் வழியாகவும் வெளிப்பட்டு மக்களைப் பாதிக்கும்.

ஆண்டுதோறும் 30 டன் அணுக்கழிவுகளை உற்பத்தி செய்து, அவற்றை எங்கள் மண்ணில் சேமித்து வைத்து, 40 முதல் 60 ஆண்டுகள் வரை அணு உலை இயங்கி முடித்தபிறகு, அதனை செயலிழக்கச் செய்து, பல்லாண்டுகள் பாதுகாத்து எங்கள் மண்ணை நீரை காற்றைப் பாதிப்புக்குள்ளாக்கும் அணுசக்தி துறை, கணக்கற்ற அளவு தண்ணீரை மீண்டும் கடலுக்குள் கொட்டும்போது எந்த பின்விளைவும் ஏற்படாது என்று எங்களை நம்பச்சொல்கிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் உள்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகும் முத்துநாயகம் குழு அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. நாங்கள் கேட்ட அடிப்படைத் தகவல்களைத் தரவில்லை. இந்நிலையில் தாங்கள் தலையிட்டு டாக்டர் இனியன் தலைமையில் மாநிலக் குழு ஒன்றை நியமித்தீர்கள். ஆனால் அணுசக்தித் துறையின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் அந்தக்குழுவில் இடம்பெற்றது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையால் அதனையும் ஏற்றுக்கொண்டோம்.





இனியன் குழு பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் அணு உலைக்குள் போய்விட்டு ஓரிரு மணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு வந்தார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி நேரங்கள் எங்கள் போராட்டக் குழுவைச் சார்ந்த ஒன்பது பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தார்கள். அவர்களிடம் எ


ங்கள் நிபுணர் குழுவைச் சந்தித்துப் பேசவும், எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவந்து மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கவும் மன்றாடினோம். அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்களின் அரசு என்று தங்களின் அரசை தாங்கள் கருதிச் சொல்லப்படுகின்ற நிலையில் தாங்கள் நியமித்த குழு எங்கள் மக்களைப் புறந்தள்ளியது வேதனை அளிக்கிறது. இதற்கிடையே இறுதி அறிக்கையை தங்களிடம் தருவதற்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கு நற்சான்று வழங்கி தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது இனியன் குழு.

மக்களை அழிக்காது, வாழ்வாதாரங்களை நசுக்காது, எதிர்காலத் தலைமுறையை ஒழிக்காது, மாற்று வழிகளிலே மின்சாரம் தயாரிக்கு தங்களின் திட்டங்களை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம். ஆனால் அதற்கான உதவிகளைத் தர மறுக்கின்ற மத்திய அரசு, நான்கு தனியார் அனல் மின்நிலையங்களை முடக்கி தமிழகத்தில் மின்வெட்டை அதிகமாக்கி தங்கள் அரசையும், தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் அறிவோம். நாங்கள் மின்சாரத்தை எதிர்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஏழை மக்கள் நலமாக வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களாக மாற்ற தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நாம் செய்த செலவுகள் வீணாகாது. அமெரிக்காவிலுள்ள ஷோர்ஹம் அணுஉலை மக்களுடைய எதிர்ப்பால் இப்படி மாற்றப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக தமிழகம் புகுஷிமா போன்ற ஓர் அணு உலை விபத்தை தாங்கிக்கொள்ளாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2006 ஆம் ஆஃண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கன்னங்குளம், அஞ்சுகிராமம், அழகப்ப்புரம், மயிலாடி, சுவாமித்தோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. கூடங்குளம் அணு உலை இயங்கினால் இப்படி ஒரு நிலநடுக்கம் நடந்தால் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வாழும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்' என்பது வள்ளுவம்.

அடித்தட்டு மக்களுக்கும் வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை உண்டெனக் கருதும் செயல்படும் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நேரடியாகத் தைலயிட்டு எட்டு கோடி தமிழ் மக்களைக் காக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. இந்தியாவின் அரசியல் கட்சிகள் சிலவும் அரசியல்வாதிகள் பலரும் அமெரிக்காவுக்காக, ரஷியாவுக்காக, பிரான்ஸ் நாட்டுக்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்காக, இந்திய முதலாளிகளுக்காக, இந்திய முதலாளிகளுக்காக ஏவல் வேலை செய்யும்போது தாங்கள் சாதாரண மக்களுக்காக உழைப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. தங்கள் தலைமை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கிடைக்கட்டும். 120 கோடி மக்களும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெறட்டும். வெள்ளைக்காரர்களின் அடிமை தேசமாக இல்லாமல் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற தலைமை தேசமாக மாற்றட்டும் என்று தங்களின் 64 ஆவது பிறந்த நாளில் போராடும் மக்கள் சார்பாக தங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். இறையருள் இனிது பயக்கட்டும்!

தங்கள் உண்மையுள்ள,

சுப. உதயகுமார்

ஒருங்கிணைப்பாளர்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
இடிந்தகரை



நன்றி - த சண்டே இந்தியன்

1 comments:

Jayakumar Chandrasekaran said...

you reside there after vacating your Nagercoil school and house then talk about the plant safety anfd other things.