Monday, December 31, 2012

2012 - டாப் 10 மண்ணின் மைந்தர்கள்

2012 டாப் 10 மனிதர்கள்

விகடன் டீம்

போராட்டத்தின் மைந்தர்கள்!

ங்கள் மண்ணையும் மக்களையும் காக்கப் பொங்கி எழுந்த இடிந்தகரை கடல் மைந்தர்களைத் தேசமே திரும்பிப் பார்த்தது. உண்மையான மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்டியது, இந்தியாவின் தென்கோடிக் கிராமமான இடிந்தகரை. பொட்டல் மண்ணில் சிறு பொறியாகத் துவங்கிய அணு உலைக்கு எதிரான முழக்கத்தை வரலாறாக வளர்த்தெடுத்தனர் இந்த ஏழை மக்கள். 'பணம் வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்’ என்று பிரதமர் வரை குற்றம்சாட்டியபோதும், துவளவில்லை ஜனத்திரள்.


 பேச்சுவார்த்தைகள், பேரம், தேசத்துரோக வழக்குகள், குண்டர் சட்டக் கைது கள், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடிகள் என அரசின் அத்தனைத் தந்திரங்களையும் தவிடு பொடியாக்கியது போராட்டக் குழு. நாளாக நாளாக இவர்கள் நெஞ்சுரம் பெறுவதால், கனல்கிறது போராட்ட நெருப்பு. உண்ணாவிரதப் பந்தலில் பீடி சுற்றியபடியே, அணு உலை அரசியல் பேசும் மூதாட்டியே இதற்கு சரித்திரச் சாட்சி. தங்கள் மண்ணுக்காக மட்டுமல்ல...



ஈழம், முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு என இதர சமூகப் பிரச்னைகளுக்காகவும் போராடும் இந்த சமூகப் போராளிகள் நம் ஒவ்வொருவருக்குமான உதாரணங்கள். ஒருவேளை இடிந்தகரை மக்களின் போராட்டம் கடந்தும் கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கலாம். ஆனால், இனி இந்தியாவின் எந்தப் பிரதேசத்திலும் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ளாமல் அணு உலை அமைப்பதற்காக ஒரு சிறு கல்லையும் அசைக்க முடியாது. அதுதான் இடிந்தகரை மக்களின் உண்மையான வெற்றி!


இ மெயில் தமிழன்!  

'இ மெயில் கண்டுபிடித்தவர்’ என்று இன்று உலகமே கொண்டாடும் சிவா அய்யாதுரை, ராஜபாளையம் தமிழன் என்பது நமக்கான பெருமை. 1978-ல் அமெரிக்காவில் படித்தபோது, தனது 14 வயதில் இவர் இ மெயிலைக் கண்டுபிடித்தது அறிவுலக ஆச்சர்யம். 1982-ல் அமெரிக்க அரசிடம் இருந்து, உலகின் முதல் இ மெயில் காப்பிரைட்ஸ் பெற்றார்.



ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணையத்தைக் கட்டுப்படுத்த, யார் யாரோ இ மெயிலுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அறிவாயுதம் ஏந்திப் போராடினார் சிவா. உண்மை வென்றது. இ மெயில் மட்டும் இல்லாமல், அமெரிக்கத் தபால் துறையின் மறுமலர்ச்சிக்கும் காரணமானவர். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, இவரது நிறுவனம் ஒன்றின் சேவை பெறும் வாடிக்கையாளர். இந்திய அறிவியல் துறையின் ஊழல்கள்குறித்து இவர் எழுதிய கடிதம், நம் தேச நலனுக்கான ஆராய்ச்சி மணி. 'புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்’ என்கிற சிவா, தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்!


அறிவியல் தமிழச்சி!

ரியலூரில் பிறந்து, ஆச்சர்ய உயரங்கள் தொட்ட இஸ்ரோ சயின்டிஸ்ட் வளர்மதி. தேசிய அளவில் திட்ட இயக்குநர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண். செயற்கைக்கோள் செலுத்துதல் போன்ற அதிநவீன அறிவியல் துறையில் தமிழ்ப் பெண்கள் எட்டிப்பார்க்காத நிலையில், வளர்மதி இந்தியாவின் முதல் சுயேச்சை உளவு செயற்கைக்கோள் ரிசாட் 1-ன் திட்ட இயக்குநர் ஆனது அற்புதமான சாதனை.



அயராத உழைப்பும் தேடலுமாக அவர் கால் நூற்றாண்டுக்கு முன்னரே சென்ற பயணம் இளைய தலைமுறைக்கான பாடம். 1984-ல் இஸ்ரோ வில் ஓர் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்து, செயற்கைக்கோள் திட்டப் பொறியாளர், திட்ட மேலாளர், துணைத் திட்ட இயக்குநர், இணைத் திட்ட இயக்குநர் எனப் படிப்படியாக உயர்ந்து, 2012-ல் 'ரிசாட் 1-’ன் திட்ட இயக்குநராக உச்சம் தொட்டார்.



 இந்தியா ஏவிய செயற்கைக்கோள்களிலேயே அதிக எடைகொண்டது ரிசாட் 1. விமானங்கள்கூட ஊடுருவ முடியாத அடர் வனங்கள், குகைகள், நீர்ப்பரப்புகளைப் படம் எடுக்கும் திறன் கொண்ட செயற்கைகோள் அது. ஆனால், இந்தச் சாதனையின் எந்தச் சுவடும் இல்லாமல், 'நம் தேசத்தின் கனவுகளை நனவாக்குவதே இலக்கு. இன்னும் நிறைய வேலை இருக்கிறது’ என எளிமை பேசுகிறார் இந்த முன்னுதாரணத் தமிழச்சி!


வணக்கத்துக்குரிய வாத்தியார்!

டகள விளையாட்டுகளில், தமிழ் வீரர்களைச் சர்வதேச உயரத்துக்கு இட்டுச் செல்லும் ஏகலைவன்... சென்னையைச் சேர்ந்த நாகராஜ். கேரள அரசின் கோடிக்கணக்கான நிதி உதவியுடன் செயல்படும் பி.டி.உஷா அகாடமியில் இருந்து, இதுவரை உருவானது இரண்டு சர்வதேசத் தடகள வீரர்கள் மட்டுமே. ஆனால், எந்த அரசு உதவிகளும் இல்லா மல், நாகராஜ் இதுவரை 24 சர்வதேச வீரர்களை உருவாக்கி இருப்பது மகத்தான சாதனை.


அதில் 14 பேர் சர்வதேச சாம்பியன்கள். 100-க்கும் அதிக மானோர் தேசியத் தடகளச் சாம்பியன்கள். இவை அனைத்தையும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், தேசத்தின் மீதும் விளையாட்டின் மீதும் உள்ள காதலால் செய்கிறார் நாகராஜ். மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங் களுக்கு அலைந்து திரிந்து, தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து வந்து பயிற்சி அளிப்பதை, கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தவம்போல் செய்து வரும் நாகராஜின் கனவு, தமிழ்நாட்டில் இருந்து பல ஒலிம்பியன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். நடக்கும் நாகராஜ்!



சளைக்காத சட்டப் போராளி!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகச் சட்டச் சாட்டை சுழற்றும் போராளி 'பொறியாளர்’ சுந்தர்ராஜன். 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவர். 'அணு உலைக்கு 1989-ல் வாங்கிய சுற்றுச்சூழல் அனுமதி, 2011-க்கும் பொருந்தும்’ என்று சொன்ன அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வலுப்பட்டது.



'ஜப்பான் - ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அணுசக்தி ஆணையம் அமைத்த குழு பரிந்துரைத்த 17 வகையான பரிந்துரைகளை நிறை வேற்றாமல் கூடங்குளம் அணு உலையைத் திறக்கக் கூடாது’ என இவர் தொடர்ந்த வழக்கில்தான், 'அணுக் கழிவுகளை ஏழு ஆண்டுகளுக்கு கூடங் குளத்திலேயே வைத்திருப்போம்’ என்று முதல் முறையாக அணுக் கழிவுகளைப் பற்றி வாய் திறந்தது அணுசக்தி ஆணையம். இந்தியாவின் முதல் 1,000 மெகாவாட் அணு உலையான கூடங் குளம் உலையில் விபத்து ஏற்பட்டால், அதற்கான நஷ்டஈடு கொடுப்பதில் இருந்து ரஷ்ய நிறுவனத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்தும் வழக்கு நடத்திவரும் கலகக்காரர். நன்றி நண்பரே!


விவசாயக் காதலன்!

ந்திய விவசாயிகளின் நலனுக்காக கால் நூற்றாண்டாகத் தீவிரமாக இயங்கிவரும் 'அறச்சலூர்’ செல்வம், நம் பூமி நேசன். இயற்கை விவசாயம் பரப்புதல், மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்கிற தளங்களில் இவரது பணிகள் வணங்கத்தக்கவை.


விவசாயிகளுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இயற்கை விவசாயம், செயற்கை உரங்களின் கேடுகள் பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். 'கான் உலா’ என்ற பெயரில் 125 பள்ளி மாணவர்களை, வனப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இயற்கையின் ஸ்பரிசத்தை, முக்கியத்துவத்தை உணரச் செய்கிறார். மரபணு மாற்றப்பட்ட 'மான்சான்டோ’ நிறுவனத்தின் விதைகளை, சோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை யில் பயிர் செய்தபோது, வளாகத்தினுள் சென்று இவர் நடத்திய போராட்டம் அதிகாரத்தைத் திகைக்கவைத்தது.


 மிரண்டுபோன 'மான்சான்டோ’ நிறுவனம் செல்வத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சுற்றிக்காட்டி இவரை வளைக்கப் பார்த்தது. திரும்பி வந்தவர், 'உலகெங்கிலும் இருக்கும் விவசாய நிலங்கள் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறது மான்சான்டோ. விதைகளுக்கான பேடன்ட் பெறுவதில் பேய்த்தனமாக இயங்குகிறார்கள். விதைகளைக் கடையில் இருந்து வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் நிலம் கைவிட்டுப்போகிறது என்று அர்த்தம். எனவே, விதை நெல்லை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்!’ என்று களப் போராளியாக முழங்கினார். செல்வத்துக்கு தமிழ் மண் கடமைப்பட்டிருக்கிறது!


அசத்தல் அதிகாரிகள்!

மோசமான செயல்பாடுகளால் சிதைந்துகிடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.) தூக்கி நிறுத்தியது ஆர்.நட்ராஜ் - உதயச்சந்திரன் கூட்டணி. லஞ்சம் கொடுத்தால், சிபாரிசு இருந்தால் மட்டுமே அரசு வேலை என்றிருந்த நிலையை அதிரடியாக மாற்றி அமைத்தார் உதயச்சந்திரன். நடைமுறை மோசடிகளை வேரறுக்கப் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தார்.


அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளே புகுந்து, தேர்வாணையத் தலைவர் உள்ளிட்டோரைப் பந்தாடியது. ஓய்வுபெற்றிருந்த ஆர்.நட்ராஜ் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் விண்ணப்பம், தேர்வு எழுதி முடித்த மறுநாளே விடைகளை ஆன் லைனில் வெளியிடுவது, வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணைகள், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் என லட்சோபலட்சம் தமிழக இளைஞர்களின் மனதில் நம்பிக்கை ஒளியேற்றியது இந்தக் கூட்டணி. இடையில், உதயச்சந்திரன் மாற்றலானாலும் சீரான நிர்வாகத்தைத் தக்கவைத்தார் நட்ராஜ். அவ்வளவு கெடுபிடியிலும் குரூப்-2 வினாத்தாள் வெளியானதாகச் சர்ச்சை கிளம்பியபோது, தமிழகத் தேர்வாணைய வரலாற்றில் முதல்முறையாக நடந்து முடிந்த தேர்வை அதிரடியாக ரத்து செய்தார் மீசைக்காரர். நேர்மைப் பவனி தொடரட்டும்!


இதயம் உலுக்கிய இயக்குநர்!

காதலும் மனிதமும் பேசும் பாலாஜி சக்திவேலின் திரைப்படங்கள், தமிழ் சினிமாவுக்கு அவசிய ஆக்சிஜன். 'காதல்’ படத்தில் விடலைக் காதலின் ஜன்னல் வழியே சாதியின் கோரத்தையும் அன்பின் ஈரத்தையும் காட்டியபோது, தடதடத்தது தமிழ்த்திரை.



'வழக்கு எண் 18/9’-ல் பாலாஜி தொட்டது இன்னும் உயரம். நலியும் விவசாயம், குழந்தைத் தொழிலாளர் கொடுமை, பெண்களின் பாதுகாப்பு, காவல் துறையின் அராஜகம், அரசியல் அதிகாரத் துஷ்பிரயோகம், நாட்டுப்புறக் கலைகளின் அழிவு, வக்கிர இளைஞர்களின் மொபைல் கலாசாரம், எளிய மனிதர்களின் பேரன்பு... என 'வழக்கு எண்’ பேசியது அபாரமான திரைமொழி அரசியல். '



5-டி’ என்ற புகைப்பட கேமரா தொழில்நுட்பத்தில், மிகக் குறைந்த செலவில் முழுத் திரைப்படத்தையும் எடுத்தது, இன்னொரு சாதனை. எந்த சமரசங்களும் இல்லாமல், எளிய மனிதர்களின் வாழ்க்கையைத் துணிந்து பேசும் இந்த திண்டுக்கல்காரரின் திரைப்படங்கள் இந்த மண்ணுக்கானவை... மக்களுக்கானவை!




நம்பிக்கைத் தோழி!

ழுத்து, நாடகம், ஆவணப்படம் எனக் கலைகளின் வழியே திருநங்கைகளின் மேம்பாட்டுக்காகப் போராடிக்கொண்டே இருப்பவர் ப்ரியா பாபு. இந்த சேவைகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், 'பெரியார் விருது’ வென்றவர். 2004-ல் இவர் தொடர்ந்த வழக்கின் மூலமாகவே, திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது. தொடர்ந்து, செங்கல்பட்டில் திருநங்கைகளுக்கு அரசு வீடு பெற்றுத் தந்தது, 'கண்ணாடி கலைக் குழு’ மூலம் பிரசாரம் செய்வது என இவர் திரி தீண்டிவைத்த விளக்குகள் ஏராளம்.



திருநங்கைகள் குறித்த எழுத்துக்கள், குறும்படங்கள்,
பி.ஹெச்டி. ஆய்வறிக்கைகள் என்று சிதறிக் கிடக்கும் பதிவுகளைத் தொகுக்கும், 'பாலியல் சிறுபான்மையினருக்கான நூலகம்’ உருவாக்கு வது ப்ரியாவின் கனவுத் திட்டம். எல்லாக் கனவுகளும் நனவாகட்டும்!



அர்ஜுனா அழகி!

மிழக விளையாட்டுத் துறையின் பெருமிதம், தீபிகா பல்லிகல். கொஞ்சம் வெற்றி, நிறையத் தோல்வி என ஜிக்ஜாக் கிராஃபில் இருந்த தீபிகா, இந்த ஆண்டு வெடித்துக் கிளம்பினார். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற சாரா ஃபிளிட்ஸ் ஜெரால்டிடம் பயிற்சி பெற்ற பின், தீபிகா ஆடியது எல்லாமே வெற்றி வேட்டை. இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் போகாத 'டோர்னமென்ட் ஆஃப் சாம்பியன்ஸ்’ போட்டியில் முதல்முறையாகக் கால்வைத்தார்.



 அர்ஜுனா விருது பெற்றது, சர்வதேச விஸ்பா ரேங்கிங்கில் 10-வது ரேங்கிங் குக்குள் கால்வைத்த முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை எனக் குவிந்தன பெருமைகள். 21 வயதுக்குள் ஜெர்மன் ஓப்பன், டச் ஓப்பன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன், ஸ்காட்டிஷ் ஓப்பன், ஈரோப்பியன் ஜூனியர் ஸ்குவாஷ் சர்க்யூட் என ஆறு பட்டங்களை வென்ற வர், இன்னும் இன்னும் உயரம் தொடுவார் என்பது நன்னம்பிக்கை! 


நன்றி - விகடன்

0 comments: