Wednesday, August 29, 2012

BSNL நிறுவனத்தின் கணிணி மோசடி , பொது மக்கள் அதிர்ச்சி

http://chennai.bsnl.co.in/News/netone221108.jpgபி.எஸ்.என்.எல். நடத்திய கம்ப்யூட்டர் சீட்டிங்!''



மாட்டிக்கொண்ட திண்டுக்கல் மக்கள்



'ஒன்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பிப் பணம் செலுத்திய எங்களுக்குப் பட்டை நாமம் சாத்திவிட்டனர்’ என்று, வாயிலும் வயிற் றிலும் அடித்துக்கொள்கின்றனர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக் கிராம மக்கள். அவர்களை ஏமாற்றியது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அல்ல... பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். என்பதுதான் அதிர்ச்சி!



பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வல்லரசு விடம் பேசினோம். இவர், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மண்ணவனூரில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். ''நான் செய்யும் தொழிலுக்கு கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் இருந்தால்தான் தொழில் போட்டியைச் சமாளிக்க முடியும். அதனால், கம்ப்யூட்டர் வாங்க ஆசைப்பட்டேன்.

 அப்போது, கொடைக்கானல் டெலிபோன் ஆபீஸில் (பி.எஸ்.என்.எல். அலுவலகம்) 'ஒன்பதாயிரம் ரூபாய் செலுத்தினால், கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும். இந்தச் சேவையை பி.எஸ்.என்.எல். மற்றும் அமரன் அசோசியேட் நிறுவனம் இணைந்து தருகிறது. தேவைக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருக்கும் அமரன் அசோசியேட் நிறுவனத்தாரைத் தொடர்பு கொள்ளவும்’ என்று விளம்பரம் செய்து இருந்தனர்.




குறைந்த பணத்தில் கம்ப்யூட்டரும் நெட் இணைப்பும் கிடைக்கிறது என்ற ஆசையில் என்னைப் போல பலர் பணம் கட்டினோம். வில்போன் இணைப்புக்கு 500 ரூபாய் தனியாகக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அதையும் கட்டினோம். மூன்று நாட்களில் போன் இணைப்பு வந்தது. இரண்டு நாட்கள் கழித்து போனில் பேசிய அமரன் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், 'ஒரு வாரத்தில் உங்கள் வீடு தேடி கம்ப்யூட்டர், மோடம் வந்து சேரும்’ என்றார். ஒரு வாரம் கழித்தும் யாரும் வரவில்லை. மலைப் பகுதி என்பதால் தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குப் பிறகும் வராததால், அமரன் அசோசியேட் நிறுவனத்தாரின் மொபைல் நம்பர்களில் தொடர்புகொண்டேன். அனைவரது போன்களும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டு இருந்தன.

http://chennai.bsnl.co.in/News/Instn_En.jpg


அப்போது. வில்போன் நம்பரில் பேசிய தேவி என்பவர் 'அமரன் அசோசியேட் மதுரைக் கிளையில் இருந்து பேசுகிறோம். நிர்வாகம் மாறிவிட்டது. நாங்கள்தான் உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்போகிறோம். இரண்டு நாட்களில் உங்களைச் சந்திக்கிறோம்’ என்றார். அவரும் பேசியதோடு சரி... ஆறு மாதங்களாகியும் கம்ப்யூட்டர் வரவில்லை.



'உங்களை நம்பித்தானே பணம் கட்டினோம்’ என்று கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கேட்டோம். 'எங்களுக்கு எதுவும் தெரியாது. வத்தலக்குண்டு டி.இ-யை சந்தியுங்கள்’ என்றனர். அவரைச் சந்தித்துக் கேட்டால், 'இது மத்திய அரசின் திட் டம். எங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களைப்போல நூற்றுக்கணக்கானோர் எங்களிடம் வந்து பணம் கேட் கிறார்கள். உங்கள் புகாரைக் கொடுங்கள். நாங்கள் சென்னை அலுவலகத்துக்கு அனுப்புகிறோம்’ என்று பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னார்.



மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் இயங்கிய அமரன் அசோசியேட் அலுவலகத்தைக் கண்டுபிடித் தோம். 'இங்கு ஆபீஸ் இருந்தது உண்மைதான். அதைக் காலிசெய்து ஆறு மாசமாச்சு’ என அருகில் உள்ளவர்கள் சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் முதல்வர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் புகார் அனுப்பிவிட்டுக் காத்திருக் கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை'' என வருத்தத்தைக் கொட்டினார்.



பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். ''ஆறு வருடங்களுக்கு முன் தனியார் ஒத்துழைப்புடன் அந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தினர். தொழில்நுட்பக் குறைபாடுகளால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. அந்தத் திட்டத்தில் பணம் கட்டிப் பலரும் ஏமாந்தனர். இந்தத் திட்டத்தில் அதிக அளவுக்கு மோசடி வடகிழக்கு மாநிலங்களில்தான் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த மோசடி அதிகம் நடந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைப் போட்டு இப்படி மோசடிக்கு வழிவகுக்கிறார்கள். அலுவலர்களான எங்களால் இதைத் தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ முடியவில்லை. ஏன், ஒழுங்கான பதிலைக்கூட சொல்ல முடியவில்லை'' என்று வருத்தப்பட்டனர்.



வத்தலக்குண்டு டி.இ.விசாலாட்சியிடம் பேசினோம். ''இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அமரன் அசோசியேட் நிறுவனத்தார் சிலருக்கு செக் கொடுத்தும், அது பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் பி.எஸ்.என்.எல். மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்'' என்றார்.

http://telecomtalk.info/wp-content/uploads/2010/06/BSNL-Ties-Up-With-Indian-Railways-to-Promote-3G-Services.jpg



இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை பொது மேலாளர் ஜெயராமனிடம் பேசினோம் ''இப்படி ஒரு மோசடி நீங்கள் சொல்லித்தான் என் கவனத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இதுவரை அரசு நிர்வாகம் மீது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போதுதான் போலீஸில் புகார் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இனியாவது இவர்களுக்கு விடியட்டும்!


நன்றி - ஜூ வி




http://chennai.bsnl.co.in/homeimgs/megastu_100908.jpg

2 comments:

ராஜி said...

பொதுதுறையிலும் இப்படி ஒரு ஏமாற்று வேலையா?! யாரைதான் நம்புறதுன்னே தெரியலையே!

”தளிர் சுரேஷ்” said...

அட! இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்களா!
தாங்காதப்பா! தாங்காது!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html