Tuesday, July 10, 2012

வா.மு.கோமு -பஞ்சும் நெருப்பும்! - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYwh17HP8U6uZqK4kP2JHlPZoeIkdxQg5Xu04QwiqMr7-aKWyJx-o9AQJRBO2iDqY5zlVMaLrfpqm7eluyRcHd9pR4YDonXhjxp7G16zFQLK7rukbplNqaK0j_2T6KRcKt791SfL-rk6M/s1600/Santha.jpg 

பஞ்சும் நெருப்பும்!

வா.மு.கோமு

திருப்பூர் சங்கீதா திரையரங்கில் அவர்கள் 3 படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் செல்வியும், ரமேஷும்தான். அட, அப்படியானால் அவர்கள் இளம் ஜோடிப் புறாக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நொடியில் யூகித்திருப்பீர்கள். பின்னே இந்தக் காலத்தில் எங்கே அண்ணனும் தங்கையும் இணைந்து வந்து படம் பார்க்கிறார்கள்?
தனுஷைபோடா போடாஎன்று வீட்டுக்குத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தாள் காதலி! ‘ஒரு நிமிஷம்என்று தனுஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டே நின்றான். எங்கே அந்தப் பெண்ணின் அப்பா வீட்டின் மாடி வந்து தனுஷின் கன்னத்தில் நாலு அப்பு அப்பி விடுவாரோ! என்ற பதைபதைப்பில் பார்வையாளர்கள் திரையிலேயே கவனமாய் இருந்தார்கள். இறுதியில் காதலி, தனுஷின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடியதும் பார்வையாளர்கள் நிம்மதியானார்கள்.
தனுஷுக்கு இந்த மாதிரி கேரக்டர் பண்றது அல்வா சாப்பிடற மாதிரி. நீங்க ஒரு வாட்டி என் கையைப் பிடிச்சுட்டுப் போகவே மாட்டேன்னு நின்னுட்டு இருந்தீங்க ரமேஷ்... ஞாபகம் இருக்கா?" என்றாள் செல்வி. ரமேஷோ வேறு சிந்தனையில் இருந்தான். அவன் படத்தில் கவனமே செலுத்தாமல் வெறுமனே திரையை வெறித்துக் கொண்டிருந்தான்.
ரமேஷின் சிந்தனை முழுதும் மாலையில் நான்கு மணியைப் போல ஊத்துக்குளி ஆர்.எஸ்.போகவேண்டுமே! அம்மா அப்பாவின் கட்டளை ஆயிற்றே! என்றே யோசித்தபடி இருந்தான். அம்மா, அப்பா பேச்சை ஒரு நாள் கூட மீறியவன் இல்லை ரமேஷ். டிகிரி படிக்கையில் அரியர்ஸ் வைப்பதைப் பார்த்தவர், போதும்டா படிப்பு உனக்கு. என்னோட கடைக்கு வா! என்றதும்சரிப்பாஎன்று சொல்லி விட்டான். ரமேஷின் அப்பா ஜீவாபாய் ஸ்கூல் அருகே நோட்புக், ஜெராக்ஸ் என்று கூடிய கடை வைத்திருந்தார் பத்து வருடங்களாக! ஒரு வருடம் அந்தக் கடையில் பொறுப்பாய் அமர்ந்திருந்தவனுக்கு மண்ணரையில் அதேபோல் கடை ஒன்றைப் போட்டு அமர வைத்து விட்டார். கூடவே பல மாடல்களில் செல்ஃபோன்களை இறக்கி விற்பனைக் கடையாக மாற்றி ஒரு பெண்ணை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். அவள் தான் செல்வி!
பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால்? அது தான் பற்றிவிட்டது என்கிறீர்களா? ஹயர் செகண்டரியோடு செல்வி படிப்பை முடித்துக் கொண்டவள்; மண்ணரை தான் சொந்த ஊரும். இவள் வீட்டுக்கும் ரமேஷின் வீட்டுக்கும் இரண்டே இரண்டு திருப்பங்கள் தான். செல்வியை வேலைக்கு வைத்தது இவன் ஏற்பாடல்ல! அப்பாவின் ஏற்பாடுதான். அப்பா என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று முனகுகிறீர்கள்! கடையும் வைத்துக் கொடுத்து, கடையில் ஒரு கண்மணியையும் போட்டு... அடடா! அடேங் கொன்னினானா! இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தவன் ரமேஷுக்கு லேமினேசனே போட்டு பத்திரப்படுத்தி விட்டான்.
சரி, யார் வலையை முதலில் விரித்து வீசியது? யார் போய் விழுந்து சிக்கியது என்கிறீர்களா? இருவருமே வலையைக் கையில் எடுத்து வீசிக் கொள்ளவேயில்லை! வாடிக்கையாளர்களின் முகம் கோணாமல் நடந்து கொள்ள செல்வி ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டாள். ரமேஷின் மிடுக்கான தோரணையும், அளவாய்ப் பேசும் குணத்தையும் கண்ட செல்வி உள்ளுக்குள் அவனை விரும்பத் தொடங்கினாள். ராக்காலக் கனவுகளில் ரமேஷ் கிச்சுக்கிச்சு மூட்டாமல், அடிக்கணக்கில் தள்ளி நின்றே காதலித்தான் கனவிலும் கூட. சே! கருப்பு வெள்ளையில் ஏன் பழைய படம் போல கனவு வருது? என்றே சலிப்படைந்தாள் செல்வி! ரமேஷிடம் இது பற்றிச் சொல்கையில் அவனுக்கும் அப்படித்தானாம். ஆக வலையை இருவருமே வீசி இருவருமே சிக்கிக் கொண்டார்கள்.
காதலனும் காதலியும் தினமும் பத்து மணி நேரம் பூங்கா, தியேட்டர் என்று எப்போதாவது சந்திக்காமல் எப்போதும் அருகில் இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி கொடுத்து வைத்த காதலர்களாக ஒரு வருடத்தை ஓட்டி விட்டார்கள் இருவரும்! ஞாயிறு கடை விடுமுறை என்றாலும் தியேட்டர்கள் தான் திருப்பூரில் வீதிக்கு இரண்டு இருக்கிறதே! இதோ இன்றும் கூட தியேட்டரில் தான் இருக்கிறார்கள்.
ரமேஷ் தன்னுடைய பிரச்னையை, தியேட்டரினுள் சீட் தேடி அமர்ந்ததும் செல்வியிடம் சொல்லிவிட்டான். அவளுக்கு அது பிரச்னையாகவே படவில்லை. நம்பிக்கை நார் அவள் கையில் இருக்க உதிர்ந்த பூக்கள் வரிசையாய் வந்து ஒட்டிக் கொள்ளும் என்ற தைரியத்தில் சினிமாவில் ஆழ்ந்திருந்தாள். உனக்குப் பெண் பார்க்கப் போகிறோம். இன்று நான்கு மணிக்கு. அங்கே இங்கே என்று ஊர் சுற்ற போய் விடாதே!" காலையில் இவன் அப்பா நவீன ரக குண்டை இவனுக்கு எரிந்தார்.
சரிப்பா."
வேறு என்ன பேசப் போகிறான் அப்பாவை எதிர்த்து?

இது ஒரு பிரச்னையா? பெண்ணைப் பார்த்துட்டு பஜ்ஜி, சுவீட் சாப்பிட்டுட்டு காஃபி குடிச்சுட்டு வாங்க... பெண்ணைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாப் போச்சு!"
அது பாவம் செல்வி, பொண்ணா இருந்துட்டு இப்படிச் சொல்றியே! எல்லாம் இந்த அப்பாவால வந்தது! எனக்குக் கல்யாணம் பண்ணிவையுங்கன்னு நான் கேட்டேனா? தக்காளிப் பழமாட்டம் என் கடையில ஒரு பொண்ணைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டவரு யோசிக்க வேண்டாம்... தக்காளியை பையன் கொத்திக்குவான்னு!"
நான் வேணா நேரா உங்க வீடு வந்து உங்க அப்பாகிட்ட ரமேஷ் என்னோடு பாய்னு சொல்லவா?" என்றவளை பொய்யாய்க் கோபித்து, நானே பார்த்துக்கறேன் என்று சொல்லி வந்து விட்டான் ரமேஷ்.
இதோ -
பெண் வீட்டார் குடும்பம் கும்பிடு போட்டபடி வாங்க வாங்க" என்று அவர்கள் வீட்டு வாசலில் நின்று வரவேற்றது இவர்களை! ரமேஷின் மாமாவும், சித்தப்பா, சித்தியும் கூட வந்திருந்தார்கள். சொன்னால் சொன்ன மாதிரி டான்னு நாலு மணிக்கே வந்துட்டீங்க. வாங்க உட்காருங்க" பெரிதாய் மீசை வைத்திருந்தவர் ஹாலில் இருந்த நாற்காலிகளைக் கைகாட்டி இவர்களை அமர வைத்தார். பெண்ணுக்கு தாய் மாமாவாம்! மீசை வைத்த பொன்னம்பலம் போல இருந்தார். அவரே சகல விஷயங்களையும் சரளமாய்ப் பேசிக் கொண்டே இருந்தார். பெண்ணின் அப்பா அவர் பேசுவதற்கெல்லாம் பொம்மை போல தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
புரோக்கரு சொல்லி இருப்பாருங்களே... எங்க பொண்ணு ஊத்துக்குளி ஸ்கூல்ல டென்த் வரைக்கும்தான் படிச்சுதுங்க. அப்புறம் நம்ம மளிகைக்கடையை மூணு வருஷமாய் அதே ஏவாரம் பார்த்துக்குதுங்க! இதுக்கு அக்காவை சேலத்துல கட்டிக் குடுத்து பொண்ணு ஒண்ணு பையன் ஒண்ணுங்க! இன்னிக்குப் பொண்ணு பார்க்க வர்ற தகவலைச் சொன்னதும் நானும் வர்றேன்னு புடியாய் புடிச்சுதுங்க. அவ்ளோ தூரத்துல இருந்து ஏஞ்சாமி இதுக்குன்னு.... எல்லா காரியம் நல்லபடி நடந்தா மண்ணரை ஒரு எட்டு மறுபடி நாம ஒருக்கா சேர்ந்து போயிட்டு வருவோம்னு சொன்னேனுங்க..." என்று பேசியபடி இருந்தார்.
எடுத்துச் சாப்பிடுங்க" என்று சொல்லி பெண்ணின் அம்மா ஸ்வீட், மிக்சர் கொண்டு வந்து வைத்தார். நம்ம ஊரு தானே! கூச்சப்படாம எடுத்துச் சாப்புடுங்க மாப்பிள்ளை" என்று மீசைக்கார மாமா சொன்னதும், இவனும் கூச்சம் துறந்து ஸ்வீட் எடுத்துச் சாப்பிட்டான். காஃபி தம்ளர்களைத் தட்டில் தாங்கிக் கொண்டு பெண் வந்து ஒவ்வொருவர் முன்பாகவும் தட்டை நீட்ட, ஆளுக்கொரு தம்ளரை எடுத்துக் கொண்டார்கள். பொண்ணுப் பிள்ளை முகத்தில் ஏதாவது வெட்கம் தட்டுப்படுகிறதா என்று பார்த்தான். அப்படி இல்லாமல் சாதாரணமாய் இருந்தாள் அவள். அழகிலும் எந்தக் குறையும் இல்லை! இந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்பவன் கண்ணைத் தின்று விட்டு வந்தவனாகத்தான் இருப்பான்!
என் பையன் நான் சொல்றதைத்தான் கேட்பானுங்க. காலம் வேற மாறிப்போச்சு. எதுக்கும் தனியா ரெண்டு பேரும் பேசி அவங்க சம்மதத்தைச் சொல்லட்டுமே!" என்றார் இவன் அப்பா! அதற்கு யாரும் மறுப்பே சொல்லாததால் வீட்டு படிக்கட்டுகள் ஏறி மாடிக்கு இருவரும் வந்தார்கள். எண்ணி இரண்டு வார்த்தைகள்தான் அவர்கள் பேசினார்கள்!
என்னைப் பிடிக்கலைன்னு எங்கப்பாகிட்ட சொல்லிடுங்க" என்றான் ரமேஷ்.
ஏன் அப்படிச் சொல்லணும்? எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கே!" என்றாள் அவள்.
நான் ஒரு வருஷமாய் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அதுக்குள்ள திடீர்னு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க! பேச முடியலை!"
சரி நடங்க" இருவரும் கீழே வந்து விட்டார்கள்! பெண்ணின் மாமாவுக்கு ஆச்சர்யம்! அதுக்குள்ள போன சுடியில பேசிட்டு வந்துட்டாங்களே!
சொல்லும்மா... என்ன ரெண்டு பேருக்கும் சம்மதம்தானே!" என்றார் மீசைக்கார மாமா!
எனக்கு வேண்டாம் மாமா இவரு.அவருக்கு ஒரு காதலி இருக்காளாம் திருப்பூர்ல. அதை அவரு அப்பா, அம்மா கிட்டகூடச் சொல்றதுக்கு தைரியம் இல்லாதவரைக் கட்டிக்கிட்டு நான் காலம்பூராவும் சிரமப்படணும்..." சொல்லிவிட்டு பொண்ணுப்பிள்ளை வீட்டுக்குள் போய்விட்டது!.
இன்று மண்ணரை பக்கம் யாரேனும் போனால் செல்ஃபோன் மாடல்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்டிக் கொண்டும், விளக்கிக் கொண்டும் நிற்கும் ரமேஷை பார்க்கலாம். கூடவே கல்லாவின் முன் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி காதில் வாக்மேன் செருகிப் பாடலை ரசித்தபடி அமர்ந்திருக்கும் செல்வியையும் பார்க்கலாம்!



http://www.uyirmmai.com/Images/AuthorImages/va.mu.komu.jpg


 நன்றி - கல்கி , வா மு கோமு, புலவர் தருமி

11 comments:

Senthil said...

Gud

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான சிறுகதை பகிர்வு! நன்றி!

Tirupurvalu said...

Erode EE ethe enna unmai sampavamma

R. Jagannathan said...

திடீரென்று இந்த எழுத்தாளர் எங்கிருந்து வந்தார்? இந்த வாரத்திலேயே விகடன், கல்கி, குங்குமம் மூன்றிலும் எழுதியிருக்கிறார்! உண்மையில் நான் இம்ப்ரெஸ் ஆகவில்லை. இருந்தும், இவரைப் பற்றி / இவர் படைப்புகள் பற்றி கொஞ்ஜம் தெரிவிக்க முடியுமா? - ஜெ.

R. Jagannathan said...

திடீரென்று இந்த எழுத்தாளர் எங்கிருந்து வந்தார்? இந்த வாரத்திலேயே விகடன், கல்கி, குங்குமம் மூன்றிலும் எழுதியிருக்கிறார்! உண்மையில் நான் இம்ப்ரெஸ் ஆகவில்லை. இருந்தும், இவரைப் பற்றி / இவர் படைப்புகள் பற்றி கொஞ்ஜம் தெரிவிக்க முடியுமா? - ஜெ.

சி.பி.செந்தில்குமார் said...

@Jagannathan

அவர் பல வருடங்களாக சிற்றிதழ்களில் எழுதி வருகிறார், கொங்கு மணடலம்.. இப்போ பரவலா ஜனரஞ்சக சன்சிகைகளில் எழுதறார்.

Unknown said...

ஏங்க சித்தப்பு அண்ணன் பிளாக் கூட எழுதிட்டு இருக்காப்ல...லிங்க் போடக்கூடாதா....?

சி.பி.செந்தில்குமார் said...

@வீடு சுரேஸ்குமார்

"ஆப்பு”ரஹாம் “லிங்க்”கன் நீங்க தான், நீங்களே குடுங்க

Yoga.S. said...

வணக்கம்,சி.பி.சார்!காலையில் ஒரு அருமையான கதை கொடுத்ததற்கு நன்றி!

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்

இதுதான் வாமுகோமுவின் வலைதளம் லிங்க : http://vaamukomu.blogspot.in/2008/11/blog-post_25.html

அவர் கிட்ட சொன்னேன் சரி சிபிகிட்ட இந்த கதைய போட்டதுக்கு இரண்டாயிரம் பணம் வாங்கி நீ செலவுக்கு வச்சிக்கோன்னு சொல்லிட்டாரு சீக்கிரம் என் அக்கவுண்ட்ல போடுங்க பார்க்கலாம்....!

Unknown said...

நன்றி சிபி..இந்த கதை வாமுகோமுவின் பிளாக்கிலும் பதியப்பட உள்ளது..