Thursday, June 07, 2012

செஸ்’வநாதன் ஆனந்த் பேட்டி @ விகடன்

'செஸ்’வநாதன் ஆனந்த்!


மாஸ்கோ போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று, ஐந்தாவது முறை உலக சாம்பியன் ஆகியிருக்கிறார் ஆனந்த். ''ஆனந்தின் ஸ்டைல் மலை ஏறிவிட்டது. இந்த முறை கெல்ஃபாண்ட்தான் சாம்பியன்'' எனப் போட்டி தொடங்கும் முன் ஆனந்தை ஏகத்துக்கும் சீண்டின ரஷ்ய ஊடகங்கள். முன்னாள் சாம்பியன் காஸ்பரோவோ, ''ஆனந்திடம் வெற்றிக்கான ஊக்கம் இல்லை'' என கமென்ட் அடித்தார். அத்தனை விமர்சனங்களுக்கும் தனது வெற்றியால் பதில் சொன்னார் ஆனந்த். 


''இந்த வெற்றி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கடைசி நிமிஷம் வரை ரெண்டு பேருக்கும் செம சண்டை. பயங்கர டென்ஷன். ரெண்டு பேருக்குமே ஜெயிக்கிறதுக்கான சான்ஸ் ரொம்ப ரொம்பக் கம்மி. டை பிரேக்கர் வரை இழுத்துட்டுப் போய்... கடைசி நாள் அஞ்சு மணி நேரம் தொடர்ந்து விளையாடி இருக்கோம். மறக்க முடியாத வெற்றி!'' - ரொம்பவே ரிலாக்ஸ்டாகச் சிரிக்கிறார் ஆனந்த்.


''இந்த வெற்றி யாருக்குச் சமர்ப்பணம்?''


''என் பையன் அகிலுக்கு. அவருக்கு ஒரு வயசுதான். 'அப்பா சாம்பியன் ஆயிட்டேன், உனக்கு டெடிகேட் பண்றேன்’னு இப்போ சொன்னாலும் அவருக்குப் புரியாது. ஆனா, அகில் பிறந்த பிறகு கிடைச்ச இந்த சாம்பியன் பட்டம் ரொம்பத் திருப்தி கொடுத்திருக்கு.''


''சாம்பியன்ஷிப் போட்டிக்கு எப்படித் தயாரானீர்கள்?''


''கிட்டத்தட்ட நாலு மாசம் பிராக்டீஸ் மட்டும்தான்! கெல்ஃபாண்ட் ரொம்பவும் டேலன்டட் ப்ளேயர். அவரோட மூவ்களைக் கணிப்பது ரொம்ப சிரமம். ஹான்ஸ் ஷ்மிட், நீல்சன், ரஸ்டம், சௌரவ் சேகர் கங்குலினு என் டீம் நபர்களோட கடந்த நாலு மாசமும் விளையாடிக்கிட்டே இருந்தேன். கஷ்டமான மூவ்களைச் சமாளிக்க மட்டுமே ஸ்பெஷல் பயிற்சி எடுத்துட்டு, மாஸ்கோ போனேன். முதல் ஆறு ஆட்டங்களில் கெல்ஃபாண்டைச் சமாளிச்சு டிரா பண்றதே பெரிய போராட்டம் ஆகிருச்சு. ஏழாவது கேம்ல அவர் ஜெயிச்சுட்டார். ஆனா, நான் அந்தப் பதற்றத்தை மனசுல ஏத்திக் கலை. 'இன்னும் அஞ்சு கேம் இருக்கு. எப்படியும் ஜெயிச்சுடலாம்’னு நம்பிக்கையா  இருந்தேன். அடுத்த கேம்லயே சின்ன லூப் கிடைச்சது. அன்னைக்கு போட்டி முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்த பிறகும் விளையாடிட்டே இருந்தேன். கெல்ஃபாண்டும் மறுநாள் என்னைப் போலவே ரொம்பவும் தயாரா வந்தார். என்னோட மூவ்களுக்கு அவரோட எதிர் மூவ்கள் அதிரடியா இருந்துச்சு. அப்போ எந்த நிலைமையிலும் அவசரப்படாம விளையாடியதே இந்த வெற்றிக்குக் காரணம்.''



''ஐந்தாவது முறை உலக சாம்பியன். ஜெயிச்ச அந்த நிமிஷம் உங்க மனசுக்குள் என்ன தோணுச்சு?''


''உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு அப்போ சந்தோஷப்படக்கூட சக்தி இல்லை. 'அப்பாடா! நல்லபடியா முடிஞ்சது’னு பெருமூச்சுதான் விட்டேன். மனசு ரிலாக்ஸ் ஆச்சு.''


''செஸ் உலகில் உச்சத்தைத் தொட்டுட்டீங்க. இனிமே உங்க இலக்கு என்ன?'

'
''எனக்கு இலக்கு என எதுவுமே இல்லை. என் வேலை செஸ் விளையாடுறது. விளை ய£டிக்கிட்டே இருப்பேன்!''


''நீங்க செஸ் விளையாட ஆரம்பிச்சப்போ, இந்தியாவில் இந்த விளையாட்டைப் பத்தித் தெரிஞ்சவங்க ரொம்பக் குறைவு. இப்போ ரொம்ப சின்ன வயசுலயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் ஜெயிக்கிறாங்க. அடுத்த ஆனந்தைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?''


''ரொம்ப சந்தோஷமா இருக்கு. எட்டு வயசுலயே அற்புதமா செஸ் விளையாடுறாங்க. அவங்க மூவ் எல்லாம் யோசிக்கவே முடியாதபடி இருக்கு. இதில் ஒரு ஆனந்தைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம். பார்த்துக்கிட்டே இருங்க. பல ஆயிரம் ஆனந்துகள் வருவாங்க.''


''செஸ் கூட்டமைப்பு உங்களுக்கு பாரத ரத்னா விருது தரணும்னு கோரிக்கை வெச்சிருக்கே?''



''பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னானு இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை வாங்கியிருக்கிறேன். பாரத ரத்னாவும் கிடைச்சா சந்தோஷம்தான்!''


நன்றி - விகடன்

5 comments:

rajamelaiyur said...

வாழ்த்துகள் ஆனந்துக்கும் .. நன்றி பகிர்ந்த உங்களுக்கும்

rajamelaiyur said...

இதையும் படியுங்கள் ..

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

Anonymous said...

நன்றி சி பி பகிர்வுக்கு...

அத்தனை ஆட்டங்களையும் நேரடியாக காணும் பாக்கியம் கிடைத்தது...

வழக்கமான ஆட்டங்கள் சமநிலையில் முடிந்ததும் நினைத்தேன்...நம்மவர் விரைவு ஆட்டங்களில் பட்டையை கிளப்புவார் என்று...

நினைத்தது போலவே நடந்தது...

அவர சொன்ன மாதிரியே பரபரப்பில் கடைசி ஆட்டத்தில் நொடிகள் குறைய குறைய என் நகம் மொட்டையானது...

Way 2 go Vishy...

கும்மாச்சி said...

நல்ல பகிர்வு நண்பா, ஆனந்தின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது.

MARI The Great said...

@ரெவெரி

ஆனந்தையும் அவர்தம் விளையாட்டையும் மிகவும் ரசித்து பார்ப்பீர்கள் போல ரெவெரி சார்..!