Monday, June 04, 2012

எழுத்தாளர் சோலை - சில நினைவுகள்

ளிமையான எழுத்து, ஆழ்ந்த அனுபவம், கம்யூனிஸ சிந்தனை, தெளிவான பார்வை, வெகுஜன அக்கறை, நிகழ்காலப் பரபரப்பு  - இந்தக் கலவைதான் எழுத்தாளர் சோலை. பத்திரிகை​யாளராக, அரசியல் விமர்சகராக அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றிய சோலை, கடந்த 29-ம் தேதி காற்றில் கரைந்து போனார். அவரைப் பற்றிய நினைவுகள்...

1. நல்லகண்ணு (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி): சோமசுந்தரம் என்ற சோலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பூமி தான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, நிலம் இல்லாதவர்களுக்காகப் போராடினார். பூமி தானப் பிரசாரத்துக்குப் போன தோழர் ஜீவானந்தம், சோலை அவர்களின் எழுத்து ஆற்றலைக் கண்டு 'ஜனசக்தி’யில் பணியாற்ற 1959-ல் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்தார். கட்சியில் பிளவு ஏற் பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். பிறகு, எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். சோவியத் யூனியன் சென்று வந்ததும் அவர் எழுதிய, 'சிவப்பு ரோஜா’ பலராலும் பாராட்டப்பட்டது.
முற்போக்கு எண்ணம் கொண்ட சிறந்த பத்திரிகை​யாளர். எளிய தமிழில், அழுத்தமான கிராமப்புற வார்த்தைகளுடன் அவர் வடிக்கும் கட்டுரைகள், அனைத்து மக்களையும் வெகுவாகக் கவர்ந்தவை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை, விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆழ்ந்து யோசித்து எழுதும் வல்லமை படைத்தவர். எனக்கும் அவருக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு. சில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை நட்புடன் விமர்சித்துக் கொள்வோம். நீண்ட அரசியல் அனுபவம்​கொண்ட ஒரு பொக்கிஷத்தை இன்றைய தலைமுறை இழந்துவிட்டது. அவரது வாழ்க்கை அனைத்து பத்திரிகை​யாளர்களுக்கும் பாடம்.



2. ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று 'தீக்கதிர்’ இதழைத் தொடங்கி நடத்திய நால்வரில் முக்கி யமானவர் சோலை. அடுத்தடுத்து அரசியல் ரீதியாக அவர் பல மாறுபட்ட தளங்களில் இயங்கினாலும், மிகச்சிறந்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் பொன்விழா ஆண்டு, வரும் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது. அந்த விழாவுக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என்று நான் சொன்னபோது, அழைப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அவர் தொடங்கிய பத்திரிகையின் பொன்விழாவைக் காண்பதற்கு முன்பே இயற்கை அவரை அழைத்துக்கொண்டு விட்டது. தீக்கதிர் இதழின் பொன் விழாவுக்கு அவர் ஒரு சிறப்புக் கட்டுரை தீட்டி வைத்திருப்பதாகச் சொன்னார். அதைத் தீக்கதிர் இதழில் பிரசுரிப்போம். இதுதான் அந்த எளியவருக்கு நாங்கள் செலுத்தும் நன்றி கலந்த அஞ்சலி.



3. துரை கருணா (பத்திரிகையாளர்): எம்.ஜி.ஆர் நடத்திய, 'அண்ணா’ பத்திரிகையின் ஆசிரிய​ராக சோலை அவர்கள் இருந்தபோது, நான்கு ஆண்டு காலம் அங்கு நான் நிருபராகப் பணியாற்றி​னேன். எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை முன்னிறுத்​தியபோது, சோலை அவர்களைத்தான் ஜெயல​லிதாவுக்கும் அரசியல் ஆலோசகராக நியமித்தார். உட்கட்சிப் பிரச்னைகளைத் தீர்த்து​வைப்பதில் சோலை வல்லவர். ஒரு முறை திருநெல்வேலி தொகு​திக்கு இடைத்தேர்தல் வந்தபோது, கருப்பசாமி பாண்டியனை அழைத்த எம்.ஜி.ஆர், 'நீதான் வேட்பாளர்... போய் வேலையைத் தொடங்கு’ என்று சொல்லி விட்டார். தேர்தல் நேரத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.எல்.சி. பதவி போய் விட்டது. 


எனவே, ஆர்.எம்.வீரப்பனை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டிய கட்டாயம். அதனால் வேறுவழி இல்லாமல் ஆர்.எம்.வீரப்பனை வேட் பாளராக எம்.ஜி.ஆர் அறிவிக்கவே, கருப்ப​சாமி பாண்டியன் கோ​பத்தில் தலைமறைவு ஆகிவிட்டார்.  சோலையை  அழைத்த எம்.ஜி.ஆர், 'கானாவை சமாதானப்படுத்துங்கள்’ என்றார். அடுத்த சில நாட்களில், 'கருப்பசாமி பாண்டியன்தான் எனது முழுத்தேர்தல் பயணத்தையும் பார்த்துக்​கொள்வார்’ என்று, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். இதைப்பார்த்து கலங்கிப் போனார் கருப்ப​சாமிப் பாண்டியன். 


இதுதான் சோலை அய்யாவின் திறமை. எம்.ஜி.ஆர். - இந்திரா காந்தி ஆகியோருக்கு இடையே அரசியல் ரீதியான நெருடல் வந்தபோது, டெல்லி சென்று இந்திராவின் பிரதமச் செயலாளரான பி.சி.அலெக்சாண்டரிடம் பேசி, இருவருக்குள் இருந்த இடைவெளியைக் குறைத்தவர் சோலைதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், அரசியல் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணிகளை மட்டும்தான் கவனித்தார். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் இழப்பு.


4. இரா.ஜவஹர் (விமர்சகர்): அனைத்துத் தலைவர்களையும், 'அண்ணே... அண்ணே...’ என்று அழைத்து வந்த மூத்த பத்திரிகையாளர் சோலை, எனக்கு மட்டும் 'சோலை அண்ணன்’.  என் குருநாதர். 1977-ல், 'மக்கள் செய்தி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை, ஆசிரியர் சோலை எனக்கு அளித்தார். அதுதான் பத்திரிகைத் துறையில் எனது முதல் பணி. ஒரு நாளிதழ் ஆசிரியராக அவர் பணியாற்றும் பாங்கு, இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியக்கவைக்கும்.


செய்திகளைத் தேர்வு செய்வது, நிருபர்களுக்குப் பணி ஒதுக்குவது, தலையங்கம், கட்டுரைகள் எழுதுவது, தொலைபேசியில் வரும் செய்திகளை மின்னல் வேகத்தில் எழுதி அச்சுக் கோக்க உடனுக்குடன் கொடுப்பது, தேவையானால் மெய்ப்பு (புரூஃப்) பார்ப்பது, இதழ் விற்பனை நிலவரத்தைக் கண்காணிப்பது... எதைத்தான் செய்யவில்லை அந்த மனிதர்! ஆனால், அனைத்தையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்தார்.
 பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை மேம்படுத்தி, சத்துணவுத் திட்டமாகச் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். இது ஐ.நா. சபை வரை பேசப்பட்டது. இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தவர் சோலைதான். இது அப்போதே பிரபல வார இதழில், 'மாங்குயில் கூவிடும் இடத்தைப் பெயராகக்கொண்டவர்தான் இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தார்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இத்தகைய திடீர் யோசனைகள் அவருக்கு  பிரத்யேகமானவை. இறந்தாலும் எண்ணற்ற பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் வழிகாட்டியாகத் தொடர்வார் அண்ணன்!''     

நன்றி - ஜூ வி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி ஜி வி !

தனிமரம் said...

சோலை பற்றிய பதிவு பகிர்வுக்கு நன்றி சி.பி !