Thursday, May 10, 2012

வழக்கு எண் 18/9 - டீம் மீட்டிங் + டைரக்டர் பேட்டி - வீடியோ

ப்போது தமிழ்நாட்டின் பரபரப்பான வழக்கு இதுதான்... 'வழக்கு எண் 18/9’. 'காதல்’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படைப்பு!  


 ''காரைக்குடி தியேட்டர்ல படம் முடிஞ்சதும் எழுந்து நின்னு கை தட்டுறாங்களாம் சார்!'' - முகம் நிறைந்த புன்னகையுடன் பூரிக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி. 'திருப்பதி பிரதர்ஸ்’ அலுவலகத்தில் குழுமி இருக்கும் 'வழக்கு எண் 18/9’ டீம், வந்து குவியும் வாழ்த்துகளால் உற்சாகமாக இருக்கிறார்கள்.


'' 'காதல்’ படம் மாதிரி இதுவும் ஒரு உண்மைக் கதைதான். ஆனா, ஒரே கதை இல்லை. பேப்பர்ல படிச்ச பல கதைகளை ஒண்ணுசேர்த்து ஒரே கதையா மாத்தியிருக்கேன்!'' - 'வழக்கு’ விவரம் சொல்கிறார் பாலாஜி    சக்திவேல்.
படத்தில் நடைபாதைக் கடை இளைஞனாக பாக்குக் கறைபடிந்த பற்களுடன் பங்கரையாக நடித்திருக்கும் ஸ்ரீ, நேரில் செம ஸ்மார்ட். ''சார் 'கல்லூரி’ பண்ணும்போது சான்ஸ் கேட்டுப் போயிருந்தேன். கிடைக்கலை. அப்புறம், விஜய் டி.வி. 'கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடிச்சேன். அதைப் பார்த்துத்தான் சார் கூப்பிட்டார்.



 ஒருநாள், 'உனக்கு ஷாட் இல்லை’னு சொல்லிட்டாங்க. பொழுது போகாம பக்கத்தில் இருந்த பார்க்கில் படுத்துத் தூங்கிட்டேன். திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா, என்னைச் சுத்தி எந்தச் சத்தமும் இல்லாம கேமரா ஷூட் பண்ணிட்டு இருக்கு. எனக்கு அப்படியே ஒரு மாதிரி கண் கலங்கிருச்சு'' என்று நெகிழ்கிறார் ஸ்ரீ.


ப்ளேபாய் வில்லத்தனம் செய்யும் மிதுன் முரளி, கேரளத்துப் பையன்.''குழந்தை நட்சத்திரமா மூணு மலையாளப் படம் பண்ணி இருக்கேன். பெரிய ரோலில் நடிக்கிறது இதுதான் முதல் தடவை. ஷூட்டிங்ல நடிக்கிற மாதிரியே இல்லாம ரொம்ப கேஷ§வலா நடிச்சோம். இப்போ தியேட்டர்ல பார்த்தா, 'நாங்களா இப்படி நடிச்சோம்’னு ஆச்சர்யமா இருக்கு. எல்லாமே சார்தான்!'' என்று பாலாஜி சக்திவேலை நோக்கி கை நீட்டுகிறார்.


வேலைக்காரப் பெண் பாத்திரத்தில் வரும் ஊர்மிளா மஹந்தா, பூனே பெண். ''சார்கிட்ட வாய்ப்பு கேட்கும்போது, 'கதைப்படி நீ ஒரு பிராஸ்டியூட். உன்கிட்ட வந்த ஒருத்தன் காசு கொடுக்காம ஓடிப் போயிடுறான். இன்னொரு நாள் அவனைத் தெருவுல பிடிச்சுட்டே. எப்படி ரியாக்ட் பண்ணுவே, நடிச்சுக் காட்டு’ன்னு சொன் னார். இந்தி, குஜராத்தி, மராத்தி, அசாமின்னு பல மொழிகள்ல கெட்ட வார்த்தை பேசி திட்டி நடிச்சேன். பயந்துபோய் சார் வாய்ப்பு கொடுத்துட்டார். ஆனா, படத்துல 'அம்மா, சர்ஃப் தீர்ந்துபோச்சு’, 'பொறுக்கி’, 'கத்தி எல்லாம் கையில வெச்சுக்கக் கூடாது’... இவ்வளவுதான் நான் பேசுற டயலாக்!'' என்று சிரிக்கிறார்.


படத்தில் இன்ஸ்பெக்டராக வரும்முத்து ராமனின் நடிப்பு 'பக்கா புரொஃபஷனல்’ என்று பாராட்டுகள். ஆனால், சாருக்கும் சினிமாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. லெதர் தொழிலில் இருக்கிறார். ''எனக்கு பாலாஜி சக்திவேல், லிங்குசாமி எல்லாரும் உதவி இயக்குநரா இருக்கும்போதே பழக் கம். இந்தப் படத்தில் கூப்பிட்டு இன்ஸ் பெக்டர் டிரெஸ்ஸைப் போட்டுவிட்டு, 'உங்களை ஒரு போலீஸ்காரனா நினைச்சுக் கோங்க... இதுதான் கதை. இஷ்டப்படி நடிங்க’ன்னு சொல்லிட்டார் இயக்குநர். பெருசா எதுவும் மெனக்கெடாம நடிச்சேன். பல காட்சிகள் ஒரே டேக்கிலேயே ஓ.கே. ஆச்சு!'' என்பவர் 'காதல்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் ரெஜிஸ்ட்ரார் ஆக நடித்திருக்கிறார்.


மொத்தப் படத்தையும் கேனான் 5டி என்ற டிஜிட்டல் கேமரா மூலம் படம் பிடித்து தொழில்நுட்பக் கவனம் குவித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ''நார்மல் சினிமா கேமரா, 35 கிலோ எடை இருக்கும். கேனான் 5டி ஸ்டில் கேமராபோல இருக்கும். நிறையக் காட்சிகளில் கதாபாத்திரங்களுக்கு நடுவில் கேமராவைத் தூக்கிப் போட்டுப் படம் பிடிச்சது மாதிரி இருக்கும். இது ரசிகர்களுக்கு, தானே ஸ்பாட்டில் இருந்து கவனிக்கும் உணர்வைக் கொடுக்கும்!'' என்கிறார்.  


அந்தப் பள்ளிக்கூட கரஸ்பாண்டென்ட் பெயர் ஜெயலட்சுமி, செல்போனில் ஆபாச க்ளிப்பிங்ஸ் வைத்திருக்கும் பையனின் அப்பா பெயர் தூய இருதயம், கெமிஸ்ட்ரியில் சந்தேகம் என இருவரும் படித்துக்கொண்டு இருப்பது ஆசிட்பற்றிய பாடம், ஆங்காங்கே பல ஃப்ரேம்களில் லோ ஆங்கிளில் கிடக்கும் பாட்டில், ஆசிட் வீச்சுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போது பின் பக்கம் இருந்து கேட்கும் 'ஒரு ஆஃபாயில்’ குரல், வேலை பார்க்கும் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் செருப்பை எடுத்து ஓரமாக வைக்கும் வேலைக்காரப் பெண் எனப் படம் நெடுகிலும் விரவிக்கிடக்கும் நுணுக்கமான காட்சிகள் பல கதைகள் சொல்கின்றன.



இந்தப் படத்தில் 'கூத்துக்காரன்’ சின்ன சாமி இணைந்த கதை சுவாரஸ்யமானது.


''எங்க ஊர், தருமபுரி பக்கம் எர்ரப்பட்டி. எனக்கு படிப்பு வரலை. அதான் நாலைஞ்சு வருஷமாக் கூத்து கட்டுறேன். மஹாபாரதம், ராமாயணம் எல்லாம் நடிப்போம். நான் பொண்ணு வேஷமும் கோமாளி வேஷமும் போடுவேன். அதுக்குத்தான் முடியெல்லாம் வளர்த்துவெச்சிருக்கேன். அப்படி ஒரு தடவை மேய்ச்சேரியில கூத்து நடக்கிறப்போ, குண்டா ஒருத்தர் கேமராவை வெச்சு நான் நடிக்கிறதைப் படம் பிடிச்சாப்ல.


 'சினிமாவுல நடிக்கலாம்’னு கூப்பிட்டாப்ல. 'எனக்குத் தோதுப்படாது’னு சொல்லிட்டேன். அப்புறமா, 'நடிக்கிறது ஈஸிதான், அப்படி, இப்படி’னு சொல்லி நைஸ் பண்ணிக் கூப்பிட்டு வந்துட்டாப்ல. சினிமாவுல எல்லாமே புதுசா இருந்துச்சு. இங்கே தப்பா நடிச்சா உடனே நிறுத்திட்டு, மாத்தி நடிக்கச் சொல்றாங்க. ஆனா, கூத்துல அதெல்லாம் முடியாது. சினிமாவை விட கூத்துதான் கஷ்டம்!'' என்கிற சின்னசாமிக்கு 17 வயது. கூத்து என்பதைத் தாண்டி உலகமே தெரியவில்லை.


''நிறையப் பேர் பாராட்டுறாங்க. 'நம் தகுதிக்கு மீறிய பாராட்டோ?’னு தோணுது. ஆனாலும், இதை அடுத்த நல்ல சினிமாவை எடுக்கிறதுக்கான பெட்ரோல் மாதிரி எடுத்துக்கிறேன்'' என்று அதிர அதிரச் சிரிக்கிறார் பாலாஜி சக்திவேல்! 


தமிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்... இந்த 'வழக்கு’!

 எளிய மனிதர்களின் பிரியங்களை  அதிகாரமும் வக்கிரமும் எப்படிக் குதறிப் போடுகின்றன என்பதை அத்தனை அசலாக ஆகச் சிறந்த செய்நேர்த்தியுடன்  நேர்மையாகச் சொல்லிய விதத்தில்... பாலாஜி சக்திவேல், தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் தடம் பதிக்கிறார்!


முழுக்க முழுக்க அறிமுகங்கள்... புதுமுகங்கள்... அதுதான் படத்தின் நம்பகத்தன்மைக்கான நங்கூரம்.


ஒரு அபார்ட்மென்டில் வீட்டு வேலை செய்யும் ஊர்மிளா முகத்தில் யாரோ ஆசிட் அடித்துவிடுகிற வழக்கின் விசாரணையில் தொடங்குகிறது கதை. போலீஸ்       விசாரணையில் ஊர்மிளாவோடு தகராறு பண்ணும் பிளாட்ஃபார இட்லிக் கடைப் பையன் ஸ்ரீ சிக்குகிறான்.

ஊர்மிளாவை ஒருதலையாகக் காதலித்த ஸ்ரீ மீது சந்தேகம் பாயும்போதே, உண்மையான குற்றவாளி, அதே அபார்ட்மென் டைச் சேர்ந்த பணக்கார பையன் மிதுன் முரளிதான் என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியவருகிறது. மிதுன் முரளியின் அம்மா, மந்திரிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் பணமும் அதிகாரமும் விளையாடுகின்றன. கடைசியில் இன்ஸ்பெக்டரின் நயவஞ்சகத் தால் ஸ்ரீ குற்றவாளியாக்கப்படுகிறான். இதற்குப் பதிலடியாக ஊர்மிளா என்ன செய்தாள் என்பது உலுக்கி எடுக்கும் க்ளைமாக்ஸ்!


மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். மொபைல் போன், இணையம் போன்ற அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும்போது பள்ளி மாணவர்கள் வரை எவ்வளவு சீரழிவு வரும் என்பதையும் சொல்லும் இந்தப் படம்... நமக்குப் பாடம். பிடிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்கும் மோசமான கலாசாரத்தைப் பற்றிய கதையில், கந்துவட்டிக் கொடுமை, கொத்தடிமைக் கொடூரம், எளிய மக்களின் அன்பு, பணக்கார சூது, பள்ளி மாணவி களின் பருவ ஈர்ப்புபோன்ற பல விஷயங்களுடன் உண்மைக்கு நெருக்கமாக ஊர்வலம் வருவதில்,  இயக்குநரின் கடும் உழைப்பு தெரிகிறது.


ஒருவன் பசியால் நடைபாதையில் மயங்கிக்கிடக்கும்போது டிஃபன் பாக்ஸோடு கடந்தோடும் கால்கள், அந்த ஜெயலட்சுமி போன்    பேசும்போது பின்னால் சிரிக்கும் நித்யானந்தா போட்டோ, ஊர்மிளாவின் கம்யூனிஸ அப்பாவின் பெயர் பாலன், ப்ளாட் போட விவசாய நிலங்கள் எனப் படம் முழுக்க எவ்வளவு நுணுக்கங்கள்!


இட்லிக் கடைப் பையனாக வரும் ஸ்ரீ அப்பாவி பையன் கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். அத்தனை வருடங்கள் கொத்தடிமையாக இருந்த போதெல்லாம் கோபம் காட்டாமல், பெற்றோர் இறந்த தகவலை மறைத்தது தெரிந்து கொந்தளித்து எழுவது, ரோஸி அக்காவிடம் பரிதாபம்கொள்வது, ஊர்மிளாவைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தில் வெட்கப் பிரகாசம் காட்டுவது என ஸ்ரீ ஆச்சர்ய அறிமுகம். இன்ஸ்பெக் டர் வஞ்சகமாகப் பேச,  குழப்பமும்காதலு மாக அழுது அரற்றிச் சம்மதிக்கும்               அந்தக் காட்சி... மாஸ்டர் பீஸ்!


முழுதாக இரண்டு வரி வசனம்கூட இல்லாமல் 'கண்கள் இரண்டால்’ மட்டுமே படம் முழுக்க பேசுகிறார் ஊர்மிளா மஹந்தா. அதுவும் க்ளைமாக்ஸில் ஸ்ரீயைப் பார்க்கும் அந்த ஒற்றைப் பார்வையிலேயே... காதல், கருணை, ஏக்கம் என அனைத்தையும் பிரதிபலிப்பதில் வெல்டன் ஊர்மிளா!


யாரப்பா அந்த இன்ஸ்பெக்டர் முத்துராமன்? குள்ளநரி போலீஸ் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு அழகாக உயிர் கொடுத் திருக்கிறார்.  'அந்த முறுக்கு கம்பெனிக்காரன் மேல கொதிக்கிற எண்ணெயை நீ  ஊத்தியிருக்கணும்டா...’ என்று ஸ்ரீக்கு ஆதரவாகப்  பேசுவதும், 'நீங்க இனிமே எதுன்னாலும் என்கிட்டயே ஸ்ட்ரைட்டா வந்திருங்க...’ என அயோக்கிய முகம் காட்டுவதுமாக... எந்த உணர்ச்சியும் காட்டாமல் காவாளித்தனம் செய்யும் ஒரு காவல் அதிகாரியின் மனப்போக்கை கச்சிதமாகப் பிரதிபலித்து இருக்கிறார்.
படம் நெடுக நடமாடும் சீரியஸ் மாந்தர்களுக்கு நடுவில் 'யோவ்... யோவ்...’ என்றபடி வரும் சின்னசாமி, பெரிதாகக் கவர்கிறான். கிராமத்துக் கூத்தில் சிறுமியாக வேடமிட்டுப் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று 'மார்பில்’ நோட்டுக் குத்திக்கொள்வதாகட்டும், படம் முழுக்கவே பெண்ணின் மெல்லிய உடல்மொழியுடன், அலட்டல் பந்தாவுடன் வலம் வருவதாகட்டும்... யோவ்... உனக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குய்யா!


தன்னிடம் 'ஃப்ளெர்ட்’ செய்கிறான் என்று தெரிந்தே தயக்கத்துடன் அதை அனுமதிப்பதிலும், மிதுனின் மொபைலில் வீடியோ பார்த்து அதிர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் காரிலேயே 'காய்ச்சல் காரணம்’ சொல்லி வீட்டுக்குப் பத்திரமாக வந்து இறங்கும் துணிச்சலிலும், மனீஷா யாதவின் உடல்மொழி மெட்ரோ கான் வென்ட்  மாணவியைக் கண்ணில் நிறுத்துகிறது!
காஃபி டே அவுட்டிங், பார்ட்டி டேட்டிங் கலாசாரத்தில் திளைக்கும் அலட்சியமான, வக்கிரமான பணக்கார வீட்டுப் பையனாக மிதுன் முரளி கடுப்பேற்றுவதில்... கச்சிதம்!


'பொறுக்கி... பொறுக்கி’ என ராகம் போட்டுக்கொண்டே இருக்கும் பார்வதி, ரோஸி அக்காவாக வரும் தேவி, வண்டிக் கடைக்க£ரராக வரும் ஜெயபாலு என அத்தனை பேரும் இயல்பான அழகான தேர்வுகள். படம் முழுக்க படு இயல்பான வசீகரமான வசனங்கள் பெரிய பலம். 'அய்யே அந்த தியேட்டர் வேணாம்க்கா... ஒரே கலீஜ்!’ என்று 'தொழில் நிலவரம்’ பேசும் பாலியல் தொழிலாளிகள், 'கருவாடு இருக்குற இடத்துலதான்யா பூனை இருக்கும்’ என்று போலீஸை வைத்தே   கஞ்சா விற்பவனை அடையாளம் காண்பது என்பதெல்லாம் சாம்பிள்கள்! கவர்ச்சியின் எல்லையைத் தொட அனுமதிக்கும் கதையிலும் கவனமாக விலகி நடந்திருப்பது, வசதியான வீட்டுப் பெண் என்பதால் 'கெட்ட பெண்’ணாகக் காட்டாமல் வயதுக்கு உரிய இயல்போடு மனீஷா பாத்திரத்தை வடிவமைத்திருப்பது, 'இனிமே குடிக் காதக்கா. உனக்கு நான் இருக்கேன்க்கா...’ என்று பாசத்துடன் ஸ்ரீ காசு கொடுத்ததும் நெகிழும் ரோஸி பிளாஸ்டிக் கப்பை மிதித்துவிட்டுச் செல்வது, ஊர்மிளாவை கோர்ட் வளாகத்தில் போலீஸார் அடிக்கத் தொடங்க, பெண் வக்கீல்கள் ஓடிவந்து அவளைச் சூழ்ந்து நின்று காப்பாற்றுவது எனப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பொதுமக்களின் மீதான அக்கறை தொனிப்பதற்கே... இன்னொரு சபாஷ்!


புகைப்படம் எடுக்கும் கேனான் 5டி டிஜிட்டல் கேமரா ஒளிப்பதிவில், பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதைப் போல நெருக்க உணர்வை அள்ளித் தருகிறது விஜய் மில்டனின் கேமரா. கதை மெதுவாக நகரும் நேரங்களில் எல்லாம் விதவிதமான கேன்டிட் ஷாட்கள்தான் படத்தை தூக்கிப் போகின்றன. ஆனால், நடிகர்களின் உடம்போடு கேமராவை இணைக்கும் 'பாடிகேம்’ ஷாட்களில் மட்டும் அங்கங்கே கார்ட்டூன் எஃபெக்ட்!


பாடல்களே இல்லாத இப்படியான ஒரு படத்தில் பின்னணி இசை எவ்வளவு முன்னணி வகித்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங்.  இசையே இல்லாமல் ஒலிக்கும் 'வானத்தையே எட்டிப் பிடிப்பேன்..’, 'ஒரு குரல் கேட்குது பெண்ணே..’ கவிதைகள் நல்ல ஆறுதல்.


தவறான மனிதர்களின் மீதான பெருங்கோபத்தையும் எளிய இதயங்களின் மேல் பேரன்பையும் கிளறிவிட்டு மனிதத்தைப் பேசும் இந்த வழக்கை, எந்த வாய்தாவும் வாங்காமல் ஆதரிக்க வேண்டியது சினிமா ரசிகர்களின் கடமை... தவறவிடக் கூடாத உரிமையும்கூட!

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.  

8 comments:

rajamelaiyur said...

பகிர்வுக்கு நன்றி ...

rajamelaiyur said...

அஹா நான் தான் முதல் போனியா ?

rajamelaiyur said...

படித்து விட்டிர்களா ?

அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1

suharman said...

அப்படியென்றால் உங்களுடைய விமர்சனம் படு தோல்வியாக வந்துள்ளது ...?

suharman said...

எல்லாவற்றையும் தனியாக நகைச்சுவையாக இலகுவில் எடுக்க முடியாது என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கும்

அம்பலத்தார் said...

விமர்சனப்பகிர்விற்கு நன்றி செந்தில் படத்தைக் தவறவிடாம பார்த்திடணும்போல இருக்கே..

'பரிவை' சே.குமார் said...

பகிர்ந்தமைக்கு நன்றி...
அருமையான படம்...

raji said...

simply superb movie