Saturday, June 25, 2011

பழ வகையில் பல வகை சமையல் செய்வது எப்படி?(வீட்டில் சமைக்கும் சில பெண்களுக்கு மட்டும் )

 ஃப்ரூட்ஸ் சமையல்

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டும்தான். அதனால்தான்... காட்டு வாழ்க்கை நடத்திய வேடர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவ்வளவு ஏன்... இன்றைக்கும்கூட காட்டில் பழங்களைத் தின்றே உயிர் வாழும் விலங்கு மற்றும் பறவைகளை எடுத்துக் கொள்ளுங்  களேன்... அவையெல்லாம் எத்தனை அழகாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

 
உடலின் ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவூட்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி என பல வழிகளிலும் உதவும் பழங்கள்... என்றென்றும் இளமையையும் தரக்கூடிய அற்புத வைத்தியரும்கூட!

அத்தகைய பழங்களில் 30 வகை ரெசிபிகளை அசத்தலாக செய்து காட்டியிருக்கிறார் நங்கநல்லூர் பத்மா. அவை அனைத்தும் செஃப் ரஜினியின் கை வண்ணத்தில் அழகழகாக இங்கே இடம் பிடிக்கின்றன.

பழ ரெசிபிகளை செய்து கொடுத்து ஃபேமிலியை பரவசப்படுத்துங்கள்!

1. பலே பருப்பு வடை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்புடன் சிறிது உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், 2 பல் பூண்டு, உப்பு, நான்கு தக்காளி சேர்த்து அரைத்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். பருப்பு வடையினால் ஏற்படும் வாயுத் தொல்லை, இந்த வடையைச் சாப்பிடும்போது ஏற்படாது.

2. சுலபமான சிப்ஸ் 

உருளைக்கிழங்கை மெல்லிய வட்டங்களாக சீவி, உப்பு சேர்த்து வேக வைத்து, வெயிலில் நன்றாக உலர்த்தி டப்பாவில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது மிளகாய் தூள் சேர்த்து சிப்ஸாக பொரித்துக் கொள்ளலாம்.

3. கொட்டு ரசம் 

மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை கரைத்து, அரைத்தப் பொடியை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைத்தால்... சட்டென சுவையான 'கொட்டு ரசம்' ரெடி!

4. இஞ்சி பச்சடி 

இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, தயிருடன் சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டினால் இஞ்சி பச்சடி ரெடி! ஜீரணத்துக்கும் மிகவும் நல்லது.


5. பலா கறி 

பலாக் கொட்டையை நன்றாக வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, பலாக் கொட்டை துண்டுகளை போடவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, தேங்காய், மாங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

6.  பலாப்பழ சக்கவரட்டி 

தேவையானவை: பலாச்சுளைகள் - 20, வெல்லம் - 200 கிராம், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும். உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:  இது பலாப்பழ சீசன். இந்த சக்கவரட்டியை தயாரித்து வைத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு சுகியன், பாயசம், போளி என்று விதவிதமாக தயாரித்துக் கொடுக்கலாம்.


7. பைனாப்பிள் போளி 

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், வட்டமாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெல்லம் - 200 கிராம், நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா மாவில் கேசரிப்பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக போளி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பைனாப்பிளை பொடியாக நறுக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,  சிறிது கெட்டியாக பாகு காய்ச்சவும். அரைத்த பைனாப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவியும் போளி சுடலாம். ஆப்பிள், வாழை போன்ற விருப்பப்பட்ட பழங்களிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

8. மாம்பழ மில்க் ஷேக் 

தேவையானவை: மாம்பழம் - 2, பால் - 500 மி.லி, சர்க்கரை - 150 கிராம்.
செய்முறை: மாம்பழத்தை தோல்சீவி மிக்ஸியில் விழு தாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். அரைத்த மாம்பழம் விழுது, சர்க்கரை ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கலந்து நன்றாகக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

குறிப்பு: மாம்பழம் சூடு என்று சிலர் மாம்பழம் பக்கமே போக மாட்டார்கள். பால் சேர்த்து பருகும்போது, சூடும் தாக்காது; உடம்புக்கும் நல்லது.

9.தர்பூசணி தோசை 

தேவையானவை: தர்பூசணி - அரை கிலோ, புழுங்கல் அரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 150 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, தனியாக அரைத்து, மாவுடன் கலக்கவும். மாவில் உப்பு சேர்த்து கரைத்து காயும் தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு: அரிசி, உளுந்துடன் தர்பூசணியை சேர்த்து அரைத்தால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

10. பழ வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - 100 கிராம், பச்சை ஆப்பிள், பேரிக்காய் - தலா 1, மிளகு - 6 (எண்ணிக்கையில்), இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பச்சை ஆப்பிள், பேரிக்காயை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை மிதமாய் வைத்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் மிகவும் நல்லது. இதற்கு சாஸ் அல்லது சட்னி சூப்பர் சைட்-டிஷ்!

11.  சப்போட்டா கொழுக்கட்டை 

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, வெல்லம் - 100 கிராம், சப்போட்டா - 4, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சல்லடையால் சலிக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். அரைத்த சப்போட்டா விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், உலர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கி நன்றாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து, சப்போட்டா உருண்டைகளை வைத்து மூடி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பருப்பில்லாமல் பழத்தை வைத்து செய்யும் இந்தக் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருக்கும். எல்லாப்பழங்களிலும் இதேபோல் கொழுக்கட்டை தயாரிக்கலாம்.

 12. ஆப்பிள் பர்பி 

தேவையானவை: ஆப்பிள் - 1, சர்க்கரை - 150 கிராம், தேங்காய் - அரை மூடி, ரவை - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரைய விடவும். ஆப்பிள் தோல் சீவி பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஆப்பிள் மற்றும் தேங்காயை சர்க்கரைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். ரவை தூவி சேர்த்து நெய் விட்டு ஏலக்காய்த்தூள் போட்டு மேலும் கெட்டியாகக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும்.

குறிப்பு: தேங்காய் பர்பியை விட, பழங்களில் செய்யும் இதுபோன்ற பர்பி நல்ல டேஸ்டாக இருக்கும்.

13.  வெரைட்டி ஃப்ரூட் இட்லி 

தேவையானவை: மாம்பழம் - 1, புழுங்கல் அரிசி - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 100 கிராம், ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், பைனாப்பிள் - தலா 4 துண்டுகள், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பழங்களை பொடியாக நறுக்கவும். அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து மாம்பழத்துண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து நறுக்கிய பழத் துண்டுகளை கலந்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அப்படியே சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். மாம்பழத்திற்கு பதிலாக பப்பாளி சேர்த்தும் இதே முறையில் இட்லி தயாரிக்கலாம்.

14.  பப்பாளி அப்பம் 

தேவையானவை: அரிசி மாவு, கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பப்பாளிப் பழத் துண்டுகள் - 100 கிராம், நெய் - 100 மி.லி, தேங்காய் - அரை மூடி.
செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். தேங்காயைத் துருவி, வெல்லம், பப்பாளித் துண்டுகள் சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், மாவுக் கலவை சேர்த்து நன்றாகக் கலந்து பணியாரக் கல்லில் நெய் தடவி அப்பமாக ஊற்றவும். ஒரு குச்சியின் உதவியால் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கடாயிலும் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி ஊத்தப்பமாகவும் செய்யலாம்.

15. வெரைட்டி ஃப்ரூட் சுகியன் 

தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - 100 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 4, மாம்பழம், வாழைப்பழம் - தலா 2 துண்டுகள், உளுத்தம்பருப்பு, பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மி.லி.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைக்கவும். வறுத்த பாசிப்பருப்பை ஊற வைத்து பைனாப்பிள் துண்டுகள், மாம்பழத்துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி பூரணமாக தயாரிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அரைத்த உளுந்து மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: தீயை மிதமாக வைத்துதான் பொரிக்கவேண்டும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும் இந்த சுகியன்.

16.  ஸ்ட்ராபெர்ரி ஜாம் 

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 20, பேரீச்சம்பழம் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: இஞ்சி தோல் சீவி நறுக்கி, ஸ்ட்ராபெர்ரி, பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: பிரெட், சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். ஆப்பிள், பைனாப்பிள் பழத்திலும் இதேபோல் தயாரிக்கலாம்.

 17. வாழைப்பழ அல்வா 

தேவையானவை: வாழைப்பழம் - 6, சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி நன்றாக மசிக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரிப்பவுடர் சேர்த்து, நெய் விட்டு முந்திரிப்பருப்பு போட்டு நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விசேஷ நாட்களில் வாழைப்பழம் மீந்து விட்டால், இந்த அல்வா செய்து ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

18. பழ ஊறுகாய் 

தேவையானவை: கொய்யாப்பழம், பச்சை ஆப்பிள், பேரிக்காய், ப்ளம்ஸ், கிவிப் பழம் - தலா 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாப்பழம், கிவிப் பழத்தை பொடியாக நறுக்கவும். ஆப்பிள், பேரிக்காயின் தோலை சீவி பொடியாக நறுக்கவும். ப்ளம்ஸ் விதையை நீக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்து£ள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எண்ணெயே சேர்க்காமல் பழங்களை வைத்தே ஈசியாக இந்த ஊறுகாய் செய்யலாம். பிரெட்டில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.

19.  பழ பச்சடி 

தேவையானவை: வாழைப்பழம், ஆப்பிள் - தலா 1, கருப்பு திராட்சை - 200 கிராம், தக்காளி - 2, சர்க்கரை - 100 கிராம், செர்ரிப் பழம் - 6.
செய்முறை: வாழைப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். சிறிது வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, செர்ரிப் பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: திருமணங்களில் இந்தப் பழப்பச்சடிக்குதான் முதலிடம். விருப்பமான பழங்களிலும் இந்தப் பச்சடியை செய்து கொள்ளலாம்.


20.  மில்க் ஃப்ரூட் தூத்பேடா 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை, நறுக்கிய சப்போட்டா, நறுக்கிய ஆப்பிள் - தலா 100 கிராம், வாழைப்பழத் துண்டுகள் - 4, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாலை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும். சப்போட்டா, ஆப்பிள், வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். பாதாமை ஊற வைத்து முந்திரி சேர்த்து அரைத்து, சர்க்கரை ஏலக்காய்தூள் சேர்த்து கொதிக்கும் பால் விழுதுடன் கலந்து, கெட்டியாக கிளறி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். நன்றாக பிசைந்து சிறிய வட்டமாக தட்டி வைக்கவும்.

குறிப்பு: இந்த தூத்பேடா மிகவும் ருசியாக இருக்கும். கோவா தயாரிக்காமல் ஜாமூன் மிக்ஸ் பயன்படுத்தியும் செய்யலாம்.

21. சப்போட்டா சத்துமாவு உருண்டை 

தேவையானவை:  சப்போட்டா - 4, கோதுமை, தினை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, பாசிப்பருப்பு, சர்க்கரை, சோள மாவு - தலா 100 கிராம், முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சப்போட்டாக்களை தோல் உரித்து விதை நீக்கவும். கோதுமை, தினை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து சர்க்கரை சேர்த்து மெஷினில் நைசாக அரைக்கவும். இவற்றை ஒன்றாக சேர்த்து, சப்போட்டா பழம், சோள மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். வறுத்த முந்திரியை சேர்த்து, நெய் விட்டு கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: சத்தான, பழச்சுவையுடன் கூடிய உருண்டை இது. பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

22. பழ பாசந்தி 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1, செர்ரிப் பழம் - 4, உலர்ந்த திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். பாலை பாதியளவுக்கு சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும். மீண்டும் கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி இறக்கி ஆறியதும், நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, செர்ரிப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.

குறிப்பு: பாலும், பழமும் கலந்து வாசனையும், டேஸ்டும் அபாரமாக இருக்கும்.

 23.வாழைப்பழ கேசரி 

தேவையானவை: ரவை - 250 கிராம், வாழைப்பழம் - 4, பால் - 500 மி.லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: சிறிது நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நெய் விட்டு வதக்கவும். பாலைக்காய்ச்சி வறுத்த ரவையை போட்டு கிளறி, வதக்கிய வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு கிளறி, இறக்கவும்.

குறிப்பு: சத்யநா ராயணா பூஜையின் போது வாழைப்பழ கேசரி செய்து நைவேத் தியம் செய்வார்கள். கேசரிப்பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

24. மாம்பழ மோர்க்குழம்பு 

தேவையானவை: மாம்பழம் - 1, மோர் - 500 மி.லி, காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழத்தை நறுக்கி லேசாக வேக வைத்து நன்றாகக் கூழாக்கவும். வெந்தயம், காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காயை துருவி சேர்த்து அரைக்கவும். இதனுடன் மாம்பழக்கூழ், மோர், உப்பு சேர்த்து கரைத்து, சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: மாம்பழ சீசனில் இந்த மோர்க்குழம்பு செய்யலாம். காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்தும் செய்யலாம். பொரித்த பப்படம், இதற்கு சூப்பராக இருக்கும்.

25. மிக்ஸ்டு ஃப்ரூட் இடியாப்பம் 

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய  கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், உரித்து கொட்டை நீக்கிய கமலா ஆரஞ்சு சுளை - தலா 100 கிராம்.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு போல் நன்றாக வழுவழுவென அரைக்கவும். அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் மாவைப் போட்டு கெட்டியாக கிளறி, உருண்டைகளாக உருட்டவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போடவும். வெந்ததும் உருண்டைகள் மேல் எழும்பி வரும். அவற்றை தனியே எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும். இதனுடன் மாதுளை, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், கமலா ஆரஞ்சு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: வழக்கமான இடியாப்பம் போல் செய்து பழங்களுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

26. ஃப்ரூட்ஸ் பால் கொழுக்கட்டை 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, அரிசி - 200 கிராம் (ஊற வைக்கவும்), பால் - 500 மி.லி, பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய சப்போட்டா - சிறிதளவு.
செய்முறை: ஊறிய அரிசியுடன் தேங்காயை துருவி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறி நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளைப் போட்டு வேக விட்டு எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி வேக வைத்த உருண்டைகளைப் போட்டு வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதித்ததும், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், சப்போட்டா சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: வாழைப்பழம், பலாப்பழத்திலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம்.

27. ஃப்ரூட்ஸ் கோஸ்மல்லி 

தேவையானவை: லிச்சிப் பழம் - 10, பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பேரிக்காய், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் - தலா 50 கிராம், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிக்கவும். இதனுடன் பேரிக்காய், லிச்சி, ஆப்பிள், மாதுளை முத்துக்கள், உப்பு சேர்த்து மேலாக எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலக்கவும்.

 
குறிப்பு: பாசிப்பருப்புக்கு பதிலாக முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்தும் தயாரிக்கலாம். கடலைப்பருப்பு ஊற வைத்து சிறிது வேக வைத்தும் செய்யலாம். திருமண சாப்பாட்டு பந்தியில் கோஸ்மல்லிக்கு தனி இடம் உண்டு.

28.பலாப்பழ பாயசம் 

தேவையானவை: பலாச்சுளை - 10, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 200 மி.லி.
செய்முறை: பலாச்சுளையை நெய்விட்டு வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, அரைத்த விழுது, வறுத்த முந்திரி,  ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: படு ருசியாக இருக்கும் இந்த பலாப்பழ பாயசம்... கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

 29.ஃப்ரூட் பொங்கல் 

தேவையானவை: அரிசி - கால் கிலோ, வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா - தலா 1, நெய் - 100 மி.லி, கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 500 மி.லி, முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்கு பால், நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து அல்லது ஆறு விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்றாகக் குழைத்து, கல்கண்டு, மீதமுள்ள பால், வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா சேர்த்து, நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: ஒரே ஒரு பழத்திலும் இதேபோல் செய்யலாம். நெய்யில் ட்ரை ஃப்ரூட்ஸ் வறுத்தும் சேர்க்கலாம்

30.மல்டி ஃப்ரூட் லஸ்ஸி 

தேவையானவை: திராட்சை - 10 எண்ணிக்கை, சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் - தலா 1, சாத்துக்குடி ஜூஸ் - 200 மி.லி, சர்க்கரை - 50 கிராம், அதிகம் புளிக்காத தயிர் - 500 மி.லி.
செய்முறை: திராட்சை, சப்போட்டா தோல் உரித்து விதை நீக்கவும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சர்க்கரை, திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாத்துக்குடி ஜூஸ், தயிர் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

31. ஆப்பிள் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 150 கிராம், ஆப்பிள் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, ஆப்பிள், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் அரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக் கவும்.

குறிப்பு: காரம் இல்லாமல் பழ வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த அடை. பிடித்தமான பழங்களை வைத்து இதே முறையில் அடை தயாரிக்கலாம்.

32.  ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், மாம்பழத் துண்டு, சப்போட்டா துண்டுகள் - தலா 6, பைனாப்பிள் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மி.லி.
செய்முறை: மாம்பழம், சப்போட்டா, பைனாப்பிள் இவற்றை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து, வெண்ணெய் போட்டு மிருதுவாக பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சைட்-டிஷ் தேவை இல்லை. புளிப்பும், தித்திப்புமாய் அருமையாக இருக்கும்.

 33. ஃப்ரூட் சூப்

தேவையானவை: ஆப்பிள், சாத்துக்குடி - தலா 1, நறுக்கிய தர்பூசணி, நறுக்கிய கிர்ணிப்பழம், விதையில்லாத திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: சாத்துக்குடியின் தோல், விதைகளை நீக்கி சுளையை தனியாக எடுக்கவும். இதனுடன் தோல் சீவிய ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி அப்படியே பருகலாம்.

குறிப்பு: சூப்பை 'ஜில்’லென்றும் குடிக்கலாம்.

34. கிவி சட்னி

தேவையானவை: கிவிப் பழம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சித் தோல் சீவி, கிவிப் பழத்துடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த பழ விழுது, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: கிவிப் பழம் லேசாக புளிப்பு சுவையுடன் இருக்கும். தேவைப்பட்டால் சுவைக்காக அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பஜ்ஜி, வடைக்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன்.

35. சாபுதானா ஃப்ரூட் உப்புமா

தேவையானவை: ஜவ்வரிசி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்து, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - தலா 100 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: ஆப்பிள், மாதுளை முத்து, பைனாப்பிள் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, ஜவ்வரிசியுடன் கலந்து ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும். வேர்க் கடலையை மிக்ஸியில் பொடித்து மேலாக உப்பு மாவில் தூவி நன்றாகக்  கிளறவும்.

குறிப்பு: இந்த உப்புமா நார்த் இண்டியன் ஸ்பெஷல். பழம் சேர்த்து செய்வதால் ஒரு தனி டேஸ்ட்.


நன்றி - அவள் விகடன்

32 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

வடை

நிரூபன் said...

வணக்கம் தமிழகம், இனிய காலை வணக்கம் சிபி,

நிரூபன் said...

ஓய்வாக இருக்கும் நாளில் இல்லத்தரசிகள் இனிமையாக சமைத்து மகிழவும், அப்பாவி ஆண்கள் சமைத்துக் கொடுக்கவும் ஏற்ற சமையல் குறிப்புக்களைத் தந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.

நிரூபன் said...

Wow, Delicious

நிரூபன் said...

Awesome recipes.

நிரூபன் said...

Can I please get some Banana Alva?

தமிழ்வாசி பிரகாஷ் said...

செஞ்சு பார்க்கலாமா....

கவி அழகன் said...

நல்லாதான் இருக்கு யாரும் செய்து தந்தா நல்லா சாப்பிடலாம்

Unknown said...

எவ்ளோ பெரியயயயயயயயயயயய கோப்பி சே பதிவு!....அண்ணே இதுக்கு என் மனைவிய படிச்சி பாத்துட்டு கமன்ட் போட சொல்லி அழைக்கிறேன் ஹிஹி!

சசிகுமார் said...

சிபி எப்படி ஒரே நாள்ல இவ்வளவையும் செஞ்சு பார்த்துட்டு சொல்ற பெரிய விஷயம்ப்பா... உங்க மனைவி கொடுத்து வச்சவங்க..

சசிகுமார் said...

என்னது நன்றி அவள் விகடனா அடப்பாவி அப்ப இதெல்லாம் நீ செஞ்சு பார்க்கலியா

சசிகுமார் said...

காலையிலேயே இந்த செந்தில் ஏமாத்திட்டார் இன்னும் யாரார் கிட்ட ஏமாரப்போறேனோ ஹி ஹி

rajamelaiyur said...

Super taste

Unknown said...

எல்லாம் சூப்பரா இருக்கு பாஸ்! அப்போ இன்னைக்கு என்ன செய்து அசத்தப் போறீங்க? :-)

கூடல் பாலா said...

Sweet post

செங்கோவி said...

சில நேரங்களில் பெண்கள் சமையலா..அப்போ பலநேரம் உங்க சமையல் தானா வீட்ல?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் சி பி!

இன்றைய பதிவு வீட்டில் இருக்கும் பெண்களுக்கானது என்று சொன்ன பின்பும், மான்ம் கெட்டு, மரியாதை கெட்டு பதிவை படிக்க வந்திருக்கேன்!

நமக்குத்தான் மானமே இல்லையே அப்புறம் எப்படிக் கெடும்! - ஹி ஹி ஹி இது உங்க பொன்மொழிதான் சி பி! நமக்கும் பொருந்துது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவர் சந்திப்புல, பெண்பதிவர்களிடம் நல்ல பேர் வாங்கினாலும் வாங்கினீங்க, உங்க இம்சை தாங்க முடியல!

இதுக்குப் பரிகாரமா, இன்னிக்கு சாயந்தரம் , இல்லாக்காடி , நாளைக்காவது ஒரு கில்மா பதிவு போடுங்க!

சி பி , நீங்க திருந்தலாம்! ஹி ஹி ஹி ஆனா நாங்க விடமாட்டோம்!

நமீதா, திடீரென்று இழுத்துப் போத்திக்கொண்டு நடித்தால் எப்படி இருக்குமோ, அதுபோல இருக்கிறது உங்கள் பதிவு! ஹி ஹி ஹி ஹி !!!!!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தமிழ்மணம் ஆறாவது ஓட்டு என்னது!

( ஹி ஹி ஹி இதையெல்லாம் சந்தடி சாக்குல சொல்லிடணுமாம்! இதுதானாம் வலையுலகில் லேட்டஸ்ட் ட்ரென்ட் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நிரூபன் said...
வணக்கம் தமிழகம், இனிய காலை வணக்கம் சிபி,

June 25, 2011 8:24 AM////

டேய்.... உனக்கு டி வி யில ஒர்க பண்ணனும்னு ஆசையிருக்கிறது நமக்குத் தெரியும்!

அதுக்காக இப்படியா கொலையா கொல்றது?

தினேஷ்குமார் said...

பாஸ் அருமையான சமையல் குறிப்புகள் நான் ட்ரை செய்து பார்கிறேன் .... எப்படி பாஸ் இப்படியெல்லாம் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவைகளை பார்ப்பதற்க்கே மிகவும் அற்புதமான இருக்கிறது..
உண்டால் இனிமைதான்...


ரசித்தேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணம் 7

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் 25

Unknown said...

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நாயகனே..சி பி அண்ணே....
நாளை பாட்டிகளின் மனம் கவர கிருஷ்ணா லீலை தானே??
ஹிஹி பரவாலை...வாரம் அஞ்சு நாள் நம்ம இளசுகள் மனம் கவர பதிவு போடுறீங்களே
அதுவே போதும்..வர்ட்டா அண்ணே!!

THOPPITHOPPI said...

இவ்வளவு பெரிய சமையல் பதிவ நான் பார்த்ததே இல்லை. ஆனால் நான் இந்த பதிவ படிக்கலையே..................ஹிஹி

Anonymous said...

எனக்கு சாப்பிட மட்டும் தான் தெரியுமுங்கோ ...)))

சக்தி கல்வி மையம் said...

மாப்ள உனக்கு தேவையான பதிவ நீயே போட்டுக்குற .. ரொம்ப நல்லவன்டா நீ..

குணசேகரன்... said...

இன்னிக்கு ஒரு ஃபிகர் போட்டோவும் போடலியே?என்னாச்சு?

குறையொன்றுமில்லை. said...

ஏ அப்பா, ஒரே பதிவில் இவ்வளவு குறிப்புகளா? சில வகைகளை செய்து
பாத்துடலாம் தான்.

Angel said...

Mouth watering recipes ,thanks for sharing.